கார் மீது டிராக்டர் மோதியது: திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த கணவன்-மனைவி பலி
- சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கார் மீது மோதியது.
- விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக எம்.ஆர்.பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 50). இவரது மனைவி மகேஸ்வரி (48).
நேற்று முன்தினம் தம்பதி இருவரும் காரில் திருப்பதிக்கு சென்றனர்.
காரை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் ஓட்டினார். நேற்று மதியம் தரிசனம் முடிந்து வீட்டிற்கு காரில் புறப்பட்டனர். ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. ஈடுபாடுகளில் சிக்கிய பிரபாகரன் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார் டிரைவர் கணேஷ் பாபு படுகாயம் அடைந்தார்.
விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக எம்.ஆர்.பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கிய கணவன்-மனைவி உடலை மீட்டனர்.
படுகாயம் அடைந்த கார் டிரைவர் கணேஷ் பாபுவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.