இந்தியா

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்- உடலை எரித்து நாடகமாடினர்

Published On 2023-01-13 08:06 GMT   |   Update On 2023-01-13 08:06 GMT
  • சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், தகராபு வலசை, எம்.பி.டி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பீமிலி மண்டலம், வேலந்த பேட்டையை சேர்ந்த பைடி ராஜு (வயது 35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பைடி ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், வாச வாணி பாலம் பகுதியை சேர்ந்த சுரு ராஜு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் ஜோதி தனது காதலனுடன் பழகி வந்துள்ளார்.

இருவரும் தினமும் சந்தித்துக் கொள்வதற்காக விசா நகரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். ஜோதி விசாகப்பட்டினத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தூய்மை பணியாளர் பணி கிடைத்துள்ளதாக கூறி தினமும் காலை காதலன் வீட்டிற்கு சென்று இரவு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

கடந்த 6 மாத காலமாக ஜோதி தன்னுடைய காதலனுடன் இருந்து வந்தார். இவர்களது விவகாரம் கணவர் பைடி ராஜுக்கு தெரியவந்தது. அவர் கள்ளக்காதலை கண்டித்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட ஜோதி முடிவு செய்தார். உணவில் அதிக அளவு தூக்க மாத்திரையை கலந்து கணவருக்கு கொடுத்தார்.

தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட பைடி ராஜு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்த ஜோதி அவரை வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பைடிராஜுவை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து கணவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பைடி ராஜு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரும் சேர்ந்து பைடி ராஜுவின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இந்த நிலையில் கணவர் திடீரென காணாமல் போனதாக கூறி பீமிலி போலீசில் ஜோதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜோதி சிபிஐ அலுவலகத்தில் வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News