இந்தியா (National)

கேரளாவில் வகுப்பு தோழி, என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் பணம், 93 பவுன் நகை மோசடி செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

Published On 2023-04-28 11:10 GMT   |   Update On 2023-04-28 11:10 GMT
  • வெளிநாட்டில் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவரிடம் ரூ. 10 லட்சம் பணம் வாங்கினார். அதனையும் அவர் திருப்பி கொடுக்கவில்லை.
  • விசாரணைக்கு வருமாறு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆரியஸ்ரீக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஒட்ட பாலத்தை அடுத்து தாவணூரை சேர்ந்தவர் ஆரியஸ்ரீ (வயது 47). இவர் ஒட்டபாலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

ஆரியஸ்ரீயின் வகுப்பு தோழி ஒருவர் பழையனூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவரை சந்தித்த ஆரியஸ்ரீ, வீடு கட்ட உதவுமாறு கூறி அவரிடம் இருந்து 93 பவுன் நகைகளை வாங்கினார். அதன்பின்பு அவர் அந்த நகைகளை திருப்பி கொடுக்கவில்லை.

இதுபோல வெளிநாட்டில் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவரிடம் ரூ. 10 லட்சம் பணம் வாங்கினார். அதனையும் அவர் திருப்பி கொடுக்க வில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக ஒட்டபாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆரியஸ்ரீக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதனை பெற்றுக்கொண்ட ஆரியஸ்ரீ போலீஸ் சீருடையில் போலீஸ் நிலையம் சென்றார்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர், அவர் மீதான புகார்களுக்கான ஆதாரங்களை காட்டியதும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதுபற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக உயர் அதிகாரிகள் அறிவித்தனர்.

Tags:    

Similar News