லட்டில் கலப்படம் இருந்தால் என் குடும்பம் நாசமாக போகட்டும்.. கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த ஜெகன் மோகன் உறவினர்
- சிறப்பு பரிகாரங்கள் மற்றும் சாந்தி ஹோமம் நடத்தினர்.
- திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சபதம்.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர், முன்நாள் முதல்வர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
லட்டு விவகாரம் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியுள்ள நிலையில் திருப்பதி தேவாஸ்தான அதிகாரிகள் கோவில் வளாகம் முழுக்க தோஷங்களை நீக்கும் வகையில், சிறப்பு பரிகாரங்கள் மற்றும் சாந்தி ஹோமம் நடத்தினர்.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி திடீர் சபதம் ஏற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவில் குளத்தில் மூழ்கி, ஈர உடையுடன் வந்த கருணாகர ரெட்டி "உனது நைவேத்தியம், சர்வதேச புகழ்பெற்ற லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்திருந்தால் நானும், என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்," என்று உணர்ச்சியுடன் சபதம் ஏற்றார்.
இதோடு ஏழுமலையான் கோவில் எதிரில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த கருணாகர ரெட்டியை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஜெகன் மோகன் ஆட்சி, அவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஆட்சிகளில் கருணாகர ரெட்டி இரண்டு முறை அறங்காவலர் குழு தலைவராக இருந்தவர் ஆவார்.