ராகுல் காந்திக்கு புதிய வீடு ஒதுக்கிய மத்திய அரசு
- பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார்.
- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மத்திய மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பதால், கூடுதல் வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினரானது முதல் அவருக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள 12-ம் எண் வீடு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால், அந்த வீட்டை அவர் காலி செய்து தனது தாய் சோனியா வீட்டில் தங்கினார்.
பின்னர் அவரது எம்.பி. பதவி திரும்ப வழங்கப்பட்டதும், மீண்டும் துக்ளக் லேன் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அந்த வீட்டில் குடியேறவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார். இது, மத்திய மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பதால், கூடுதல் வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும்.
எனவே சுனேரி பாக் சாலையில் உள்ள 5-ம் எண் மாளிகையை ராகுல் காந்திக்கு ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதை உறுதிசெய்யும் வகையில் ராகுல் காந்தியின் சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று அந்த வீட்டை பார்வையிட்டார். இதை ஏற்பது தொடர்பாக ராகுல் காந்தியின் பதிலுக்கு காத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.