மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் குறைந்தது: கார்கே குற்றச்சாட்டு
- விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசை வெகுவாக சாடி உள்ளார்.
- காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஆண்டுதோறும் 7½ சதவீதம் அதிகரித்து வந்தது.
புதுடெல்லி :
பிரதமர் மோடி மீதான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசின் மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசை வெகுவாக சாடி உள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
விவசாயிகள் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்கு ஆக்கப்படும் என்று பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு வாக்குறுதி அளித்தார்.
ஆனால் விவசாயிகளின் வருமானம் குறைந்துதான் உள்ளது. இதற்கு காரணம், மத்திய அரசின் கொள்கைகள்தான்.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தபோது, விவசாயிகளின் வருமானம் ஆண்டுதோறும் 7½ சதவீதம் அதிகரித்து வந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவான அனைத்திந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைராவும் இதே போன்ற குற்றச்சாட்டை கூறியது நினைவுகூரத்தக்கது.
அப்போது அவர், " விவசாயிகள் வருமானத்தை இரு மடங்கு ஆக்குவதற்காக விவசாயிகள் வருமான இரட்டிப்பு குழு ஒன்றை 2016-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழு தனது அறிக்கையை 2018-ம் ஆண்டு அளித்தது. ஆனால் அது (நடைமுறைப்படுத்தப்படாமல்) அதிகார வர்க்கத்தின் தாழ்வாரங்களில் இன்னும் தூசிகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.