சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி- மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
- வருமானத்தை அதிகரிக்கும், சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் நவீன தீர்வுகள் மற்றும் புதிய திட்டங்கள்தான் தற்போதைய தேவை.
- திறமைக்கு ஏற்ப தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை.
புதுடெல்லி:
மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் சலூனுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்டார்.
அப்போது அந்த சலூன் கடைக்காரரிடம் பேசி அவரது குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.
இதை வீடியோவாக பதிவு செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் மத்திய அரசையும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
எதுவும் மீதி இல்லை. அஜித் பாயின் இந்த வார்த்தைகளும், கண்ணீரும் இந்தியாவில் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் கதையை சொல்கிறது.
முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள், தச்சர்கள் வரை வருமானச்சரிவு மற்றும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த கடை, வீடு மற்றும் சுயமரியாதை போன்ற கனவுகள் திருடப்பட்டு உள்ளன.
எனவே வருமானத்தை அதிகரிக்கும், சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் நவீன தீர்வுகள் மற்றும் புதிய திட்டங்கள்தான் தற்போதைய தேவை.
திறமைக்கு ஏற்ப தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ராகுல் காந்தியின் நடவடிக்கையை பாராட்டி உள்ளது.