அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நாளை கோர்ட்டில் ஆஜராகுகிறார்
- வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
- காலை 9 மணிக்கு ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வருகிறார்.
லக்னோ:
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந்தேதி அப்போதைய பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. பா.ஜ.க. பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த பிப்ரவரி 20-ந்தேதி கோர்ட்டு ஜாமின் வழங்கியது.
இந்த வழக்கில் ஜூலை 26-ந்தேதி (நாளை) வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை ஆஜராகுகிறார். இதை காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக் சிங் ராணா இன்று தெரிவித்தார்.
காலை 9 மணிக்கு ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் சுல்தான்பூர் சென்று கோர்ட்டில் ஆஜராகுகிறார்.