சபரிமலையில் திருப்பதியை போன்று வரிசை முறை
- சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டவண்ணம் உள்ளனர்.
- இன்று சாமி தரிசனம் செய்ய 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
திருவனந்தபுரம்:
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 17-ந்தேதி (கார்த்திகை 1) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டவண்ணம் உள்ளனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
தற்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்த போதிலும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது.
நேற்று சாமி தரிசனத்துக்கு 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில், 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சாமி தரிசனம் செய்ய 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
சாமி தரிசனத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி திருப்பதி கோவிலை போன்று சபரிமலையில் வரிசை முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த முறை சோதனை முறையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. அதன்படி மரக்கூட்டம் மற்றும் சரம்குத்தி இடையே மூன்று வரிசை வளாகங்கள் பயன்படுத்தப்பட்டன.
அந்த வரிசைகளில் பக்தர்கள் வரிசையாக ஒழுங்குபடுத்தி நிறுத்தப்பட்டனர். பின்பு அந்த வரிசைகளின்படி பக்தர்கள் வருவதற்கான உத்தரவு சன்னிதானத்தில் இருந்து போலீசார் மூலம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வழிகள் திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட னர்.
இந்த வரிசை முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ள நாட்கள் மற்றும் நேரங்களில் இந்தமுறை அமல்படுத்தப்படும் என்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வரிசை முறையால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.