திருப்பதி கோவிலில் திவ்யதரிசன டிக்கெட் வழங்காததால் நடைபாதை பக்தர்கள் அவதி
- இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இது தவிர நேரடி இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 4 ½ மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் அலிபிரி ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
டோக்கன் பெரும் பக்தர்கள் அன்றே தரிசனம் செய்துவிட்டு வரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். சனி ஞாயிறு திங்கள் புதன் ஆகிய நாட்களில் 25 ஆயிரம் டோக்கன்கள், செவ்வாய் வியாழன் வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
அலிப்பிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபாதை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு தரிசன டோக்கன் வழங்கப்படுவதில்லை.நடந்து செல்லும் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் 24 மணிநேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்கின்றனர் .
ஏற்கனவே வழங்கப்பட்டது போல நடைபாதையில் செல்பவர்களுக்கான திவ்ய தரிசனம் டோக்கன்களை மீண்டும் வழங்க வேண்டும் என நடைபாதை பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 63 ஆயிரத்து 443 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26,741 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.8 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.