அதிக கோபம்.. மாணவன் பல்-ஐ உடைத்துவிட்டு தலைமறைவான ஆசிரியர் கைது!
- மாணவன் மயங்கி விழுந்ததும் ஆசிரியர் முகமது ஆசிப் தப்பி ஓடிவிட்டார்.
- சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர்.
ரேபரேலி:
10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் பல் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் விடுமுறையில் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்களை முடித்தீர்களா? என அறிவியல் பாட ஆசிரியரான முகமது ஆசிப் கேட்டுள்ளார்.
அப்போது, சில தனிப்பட்ட பிரச்சனைகளால் வீட்டுப்பாடத்தை முடிக்க முடியவில்லை என்று சிறுவன் கூறினார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அச்சிறுவனை கட்டையால் தாக்கினார். இதில் அச்சிறுவன் மயங்கி கீழே விழுந்தார். சிறுவனின் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
மாணவன் மயங்கி விழுந்ததும் ஆசிரியர் முகமது ஆசிப் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தனர்.
அவர்கள் வந்து அச்சிறுவனை மீட்டு மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர்.