இந்தியா

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: உருக்கமாக பதிவிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா

Published On 2024-08-07 10:10 GMT   |   Update On 2024-08-07 10:10 GMT
  • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
  • உங்களின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேசத்தை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.

இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேதனையுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "ஒலிம்பிக்ஸில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் வேதனை அளிக்கிறது. உங்களின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேசத்தை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளது. உங்களின் எண்ணற்ற சாதனைகள், இந்தியாவிற்கு நீங்கள் கொண்டு வந்த பெருமையை இந்த சம்பவம் மறக்கடித்துவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உறுதியாக இருங்கள் வினேஷ். உங்களையும் உங்கள் பயணத்தையும் நாங்கள் நம்புகிறோம். நீங்கள் எப்போதும் எங்கள் சாம்பியனாக இருப்பீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News