சென்னை மாநகராட்சியில் மின்கட்டணம், சொத்துவரியை செலுத்த ஸ்மார்ட் கார்டு வசதி
சென்னை:
சென்னை மாநகராட்சியுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இணைந்து ஸ்மார்ட்கார்டு வசதியை உருவாக்கி வருகிறது. இந்த கார்டு அடுத்த மாதம் முதல் இ-சேவை மையங்களில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் விரைவில் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், மாநகர போக்குவரத்து கழகங்களிலும் பயணம் செய்யும் வசதியை உருவாக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நம்ம சென்னை செயலி மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் போன்ற 5 சேவைகள் இப்போது இணைக்கப்பட்டுள்ளது.
நம்ம சென்னை செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பிறப்பு, இறப்பு, தொழில் வரி, சொத்துவரி மற்றும் வர்த்தக உரிமம் சான்றிதழ்கள், ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் கூடுதலாக இதன் நிலைப்பாடு பற்றியும் இச்செயலி வாயிலாக அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Chennaicorporation