செய்திகள் (Tamil News)

பிரியாணி பார்சலில் சிக்கன் பீஸ் இல்லை: கணவன் மனைவிக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

Published On 2018-06-14 08:01 GMT   |   Update On 2018-06-14 08:01 GMT
நெல்லை அருகே கணவன், மனைவியை வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(வயது55). இவரது மனைவி சுபேதாபானு (45). இவர்கள் சுத்தமல்லி பஜாரில் ஓட்டல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் 6 பிரியாணி பார்சல் விற்பனை செய்த போது, அதில் சிக்கன் பீஸ் இல்லை என்று ஒரு கும்பல் தகராறு செய்தது. இதில் வாக்குவாதம் முற்றி ஜாகீர்உசேனையும், அவரது மனைவி சுபேதாபானுவையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் படுகாயமடைந்த 2 பேரும் பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதநகரைச் சேர்ந்த சபரி (25), மற்றும் அவரது நண்பர்களும் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு சபரியையும், பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து (27) என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களது நண்பர்கள் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News