கடலூரில் பன்றிக்காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்(வயது 29). என்ஜினீயர்.
இவர் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தானே சிறப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார்.
கோபிநாதனுக்கு கடந்த 26-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் கோபிநாதனுக்கு காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர் பரிசோதனை செய்தனர்.
அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.
இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று கோபிநாதன் பரிதாபமாக இறந்தார்.
கடலூர் மாவட்டத்தில் 650 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனகிரியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் திருவள்ளுவர் மாவட்டத்தில் பணியாற்றிய போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தற்போது ராஜ்குமார் உள்பட 3 பேருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu