செய்திகள்

திருத்தணி அருகே கொள்ளை முயற்சியில் தாய்-மகன் கொலை

Published On 2019-04-08 05:55 GMT   |   Update On 2019-04-08 05:55 GMT
திருத்தணி அருகே கொள்ளை முயற்சியில் தாய்- மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிப்பட்டு:

திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூரை சேர்ந்தவர் வனப்பெருமாள். இவர் தனியார் டயர் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி வீர லட்சுமி (வயது 40). மாற்றுத்திறனாளி. இவர்களது மகன் போச்சிராஜ் (10) அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு வனப்பெருமாள் பணிக்காக வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீரலட்சுமி, மகன் போச்சிராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்குள்ள அறையில் மனைவி வீரலட்சுமியும், மகன் போச்சிராஜிம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வீரலட்சுமியின் தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது. இதேபோல் அவரது மகன் போச்சிராஜ் ‘அயர்ன் பாக்ஸ்’ வயரால் கழுத்து இறுக்கப்பட்டு கிடந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 21 பவுன் நகை கொள்ளை போய் இருந்தன.

இது குறித்து திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

கொலையுண்ட தாய்- மகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியை தடுத்ததால் இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கொலை நடந்த வீடு திருத்தணி-அரக்கோணம் சாலை ஓரத்தில் உள்ளது. வீட்டில் வனப்பெருமாள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.

கொள்ளையை தடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீர லட்சுமியும், அவரது மகன் போச்சிராஜையும் கொள்ளையர்கள் கொடூரமாக வெட்டியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்து இருக்கிறார்கள். வீடு முழுவதும் ரத்தக்கறை சிதறிக் கிடந்தது.

இந்த வீட்டின் அருகே நெருக்கமாக மற்ற வீடுகளும் உள்ளன. ஆனால் கொலை நடந்த நேரம் நள்ளிரவு என்பதால் அவர்களது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்க வில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

கொலை-கொள்ளை நடந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மெயின் ரோடு பகுதியில் நள்ளிரவில் வந்த வாகனங்கள் பற்றி விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் வனப்பெருமாளிடம் விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News