கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவர் மூளைசாவு- மருத்துவர்கள் தகவல்
- 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் அருந்தியதில் 160க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். அதில் 20 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்ற வந்த பெரியசாமி (40) என்பவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெரியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.