தமிழ்நாடு
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஜூன் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.