தமிழ்நாடு (Tamil Nadu)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது- அரசு பெருமிதம்

Published On 2024-07-14 09:30 GMT   |   Update On 2024-07-14 09:30 GMT
  • பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க கலைஞர் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2026-க்குள் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வழிகாட்டு வதை இலக்காகக் கொண்டு உள்ள திட்டம்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஓய்வின்றி உழைத்து வருகிறார். அதற்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறார்.

தமிழகத்தில் வாழும் அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வரும் திட்டங்கள் அண்டை மாநிலங்களையும், அயல்நாடுகளையும் ஈர்த்து வருகின்றன.

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் 6661.47 கோடி ரூபாய்ச் செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயண நடைகள் சென்றுள்ளனர்.

திருநங்கைகள் 28.62 லட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி பயண நடைகளும் மேற்கொண்டு மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க கலைஞர் 'மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இதனால், மகளிர் சமுதாயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காதவர்களுக்கும் வழங்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வியில் சேரும் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகை, 2.73 லட்சம் மாணவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றது.

இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம் என குறைந்திருக்க, தமிழ்நாட்டில் மட்டும் 52 சதவீதம் என உயர்ந்து மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது திராவிட மாடல் அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.

இதேபோல மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

'முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட் டத்தை அரசு செயல்படுத்தும் என்றும், இரண்டு ஆண்டு களில் 10,000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இத்திட்டத்தின்படி, கிராமங்கள் வளமடைகின்றன. கிராமப்புற மக்கள் பயனடைகின்றனர்.

இதே போல்"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.

2.136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர்.

இது ஆதிதிராவிட இளைஞர்கள் மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு புரட்சித் திட்டமாகும்.

"இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளைக் குறைத்திடும் வகையிலும், அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் "முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை" தமிழ்நாடு அரசே ஏற்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப் பெறுகின்றன திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

2026-க்குள் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வழிகாட்டு வதை இலக்காகக் கொண்டு உள்ள திட்டம். இரண்டாண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் இத்திட்டத்தின்மூலம் பயன்பெற்றுள்ளனர். பலர் ஒன்றிய அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு பணி புரியும் மகளிர் விடுதி நிறுவனம் புதிய விடுதிகளை உருவாக்கவும், ஏற்கெனவே உள்ள விடுதிகளை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்திட உத்தரவிட்டார்கள். முதற் கட்டமாக, திருச்சி, கூடு வாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

இரண்டாம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன.

சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1,047 கோடி ரூபாய் திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் 68 ஆயிரத்து 927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57 ஆயிரத்து 710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு 2023 மார்ச் முதல் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 1482 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர். 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" மூலம் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்க ளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஆக உயர்ந்துள்ளது. மகளிர் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவரது தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களால் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

Tags:    

Similar News