தமிழ்நாடு (Tamil Nadu)

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு: ஜாபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு

Published On 2024-07-23 12:18 GMT   |   Update On 2024-07-23 12:18 GMT
  • விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.
  • 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர் படுத்தப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தியது. அப்போது 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.

அமலாக்கத்துறை சார்பில், ஜாபர் சாதிக்கிடம் முழுமையாக விசாரணை முடியவில்லை. இதனால் விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

இதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன் ஜூலை 23-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிற்கு ஏற்கனவே ஜூலை 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் ஆனது நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின் போது அமலாக்கத்துறை தன்னை துன்பறுத்தவில்லை என நீதிபதியிடம் ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News