தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,736 கன அடியாக குறைந்தது

Published On 2024-09-09 07:19 GMT   |   Update On 2024-09-09 07:19 GMT
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்துள்ளது.
  • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 19ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,553 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 16,194 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்றும் நீர்வரத்து குறைந்து விநாடிக்கு 11,736 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 19ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் 116.12 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.93 அடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு 115.45 அடியானது. நீர் இருப்பு 86.39 டி.எம்.சி. உள்ளது.

Tags:    

Similar News