தமிழ்நாடு (Tamil Nadu)

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்

Published On 2024-07-24 08:21 GMT   |   Update On 2024-07-24 11:35 GMT
  • புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
  • தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

சென்னை:

ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் தமிழக மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

இதற்கிடையே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. விண்ணப்பித்த 30 நாட்களில் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதே வேளையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் 2 கோடியே 10 லட்சமாக இருந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன.

தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

புதிய கார்டுகள் வழங்கும் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது ஆய்வு பணிகள் தொடங்கியது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News