வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு.. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு.
- பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ். அதிகாரி எல். நாதன், பாலாஜி ஆகியோர் வழக்கில் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஆறு வாரங்களுக்குள் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.