செய்திகள் (Tamil News)

ஏமனில் ஹவுத்தி போராளிகளிடம் இருந்து முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியது சவுதி கூட்டுப்படை

Published On 2018-06-16 08:01 GMT   |   Update On 2018-06-16 08:01 GMT
ஏமனில் ஹவுத்தி போராளிகள் வசம் இருந்த முக்கிய விமான நிலையத்தை சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் கைப்பற்றியது. வீரர்கள் விமான நிலையத்திற்குள் சென்று பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். #YemenWar #YemanSaudiCoalition #HodeidahAirport
சனா:

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

ஹொடைடா நகரின் அருகே முகாமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல், செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட போர்க்கப்பலில் இருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  

இந்த  தாக்குதலில் ஹவுத்தி போராளிகள் பின்வாங்கினர். இதையடுத்து ஹொடைடா விமான நிலையத்தை சவுதி கூட்டுப்படையினர் இன்று கைப்பற்றினர். விமான நிலையத்தை சுற்றி வீரர்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.



மேலும், உள்ளே போராளிகள் யாராவது இருக்கிறார்களா? வெடிகுண்டுகள் இருக்கின்றனவா? என்பதை கண்டறிய தேடுதல் வேட்டையும் தொடங்கி உள்ளது.

ஹவுத்தி போராளிகளின் பிடியில் இருந்து விமான நிலையம் விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஏமன் ராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது மூன்று ஆண்டுகால உள்நாட்டுப் போரில் குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஈரானில் இருந்து ஆயுதங்களை ஹவுத்திப் போராளிகள் கடல்வழியாக கடத்தி வருவதற்கு ஹொடைடா துறைமுகம் முக்கிய பகுதியாக விளங்குவதால் அந்த துறைமுகத்தை கைப்பற்ற அடுத்தகட்ட தாக்குதலை ஏமன் அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #YemenWar #YemanSaudiCoalition #HodeidahAirport
Tags:    

Similar News