தைரியத்திற்கும் கோழைத்தனத்திற்கும் இடையிலான போராட்டம் - பாஜக விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில்
- லண்டனில் மகாத்மா காந்தி சிலை, குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி பேசினார்.
லண்டன்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.
இதற்கிடையே, லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. மீது புதிய தாக்குதலைத் தொடங்கினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், இது தைரியத்திற்கும் கோழைத்தனத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான போராட்டம். எனக்கு எதிரான விமர்சனங்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.
அவர்கள் என்னை எவ்வளவு அதிகமாக தாக்குகிறார்களோ, அது எனக்கு நல்லது. ஏனென்றால் இது தைரியத்திற்கும் கோழைத்தனத்திற்கும் இடையிலான சண்டை. இது மரியாதைக்கும் அவமரியாதைக்கும் இடையே, அன்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான சண்டை.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாட்டில் மறைக்கப்பட்ட பிரச்சினை என தெரிவித்தார்.