செய்திகள் (Tamil News)

இலங்கை அணியின் ராசியான ஜெர்சிக்கு பச்சைக்கொடி காட்டியது ஐசிசி

Published On 2019-06-27 14:31 GMT   |   Update On 2019-06-27 14:31 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் ராசியான மஞ்சள் நிற ஜெர்சியை அணிய இலங்கை அணிக்கு அனுமதி அளித்துள்ளது ஐசிசி.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தியா, இங்கிலாந்து. இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் நீலக்கலர் ஜெர்சி அணிந்து விளையாடி வருகின்றன.

ஐசிசி-யின் புதிய விதிமுறைப்படி இந்த நான்கு அணிகளும் நேருக்குநேர் மோதும்போது ரசிகர்கள் வீரர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெர்சியை மாற்றிக் கொள்ள வேண்டும். போட்டியை இங்கிலாந்து நடத்துவதால் அந்த அணிக்கு விதிவிலக்கு. இதனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஜெர்சியை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

அந்த வகையில் இலங்கை மஞ்சள் நிற ஜெர்சியுடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இங்கிலாந்து எதிரான போட்டியிலும் அணிந்து விளையாடியது. இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றதால் மஞ்சள் நிறம் ராசி என இலங்கை கருதுகிறது. இதனால் அதே ஜெர்சியை தொடரில் மீதமுள்ள போட்டிகளின்போதும் அணிந்து விளையாட ஐசிசி-யிடம் அனுமதி கேட்டிருந்தது இலங்கை அணி. தற்போது இலங்கை அணிக்கு ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது. மூன்று போட்டிகளிலும் வெற்றி  பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது இந்தியா ஆரஞ்சு கலர் ஜெர்சி அணிந்து விளையாடலாம் எனத் தெரிகிறது.

Similar News