செய்திகள்

கொட்டும் மழையில் நடந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

Published On 2018-12-22 06:23 GMT   |   Update On 2018-12-22 06:23 GMT
சிதம்பரம் நடராஜர்கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழிமாதம் ஆருத்ரா தரிசம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக் கான மார்கழிமாத ஆருத்ர தரிசனவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி களின் வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடந்தது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் சாமிகள் எழுந்தருளினர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளான 4 வீதிகளிலும் வலம்வந்தது. இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக நடராஜர் கோவிலின் முக்கிய வாயிலான கீழகோபுரவாசலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேர் திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. தேர் வலம்வரும் 4 வீதிகளிலும் அந்த பகுதி பெண்கள் வண்ண கோலமிட்டிருந்தனர். மேலும் விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆருத்ர தரிசனம் நாளை நடைபெறுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்க இட வசதியும் ஏற்படுபத்தப்பட்டிருந்தது. தேர் திருவிழாவை தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News