புதுச்சேரி

பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி மாநில பா.ஜ.க. செயற்குழு நாளை கூடுகிறது

Published On 2024-07-13 07:05 GMT   |   Update On 2024-07-13 07:05 GMT
  • கூட்டத்தில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, புதுவை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
  • அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மத்திய மந்திரி கிஷன்ரெட்டி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பா.ஜ.க. அமைச்சர்களை மாற்ற வேண்டும். என்.ஆர்.காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் இன்னும் ஒரு படி மேலே போய் புதுவை அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் புரையோடிப் போயுள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவலகங்கள் புரோக்கர்கள் மூலம் செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

அதோடு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் ஒட்டுமொத்தமாக டெல்லிக்கு சென்று தேசிய தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய மந்திரி மெக்வால் ஆகியோரை சந்தித்தும் முறையிட்டனர்.

இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய தேசிய தலைமை மேலிட பார்வையாளர் சுரானாவை புதுவைக்கு அனுப்பியது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து புகார் தெரிவிக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு வருகின்றனர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுவை மாநில பா.ஜனதா செயற்குழு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சுகன்யா கன்வென்சன் சென்டரில் கூடுகிறது. மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் பா.ஜ.க. அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, புதுவை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோரும் பங்கேற்கின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மத்திய மந்திரி கிஷன்ரெட்டி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியையும் சந்திப்பார் என்று கட்சி வட்டார ங்கள் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News