குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: கவர்னர் தமிழிசை 23-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
- தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது.
- பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறாத 21 முதல் 55 வயதிற்குட்பட்ட ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கோப்புக்கு கவர்னர் தமிழிசை கடந்த 12-ந்தேதி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது. பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி கூடுதல் செலவாகும். முதல்கட்டமாக 17 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வருகிற 23-ந் தேதி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கல்லூரி வளாகத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.