என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
- மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணிகள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.
மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணியான பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வெற்றியிருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்திருக்காது. இருப்பினும் யாராலும் தடுக்க முடியாத மழை காரணமாக தொடர்ந்து அங்கே 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கே மழையை சமாளிப்பதற்கான வசதிகள் போதுமானதாக இருந்திருந்தால் மேற்குறிப்பிட்ட போட்டிகள் நடைபெற்றிருக்கும் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தார்ப்பாய் இல்லாத மைதானங்களில் போட்டியை நடத்தாதீர்கள் என்று ஐசிசி-யை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது. நீங்கள் பிட்ச்சை மட்டும் மூடி விட்டு மற்ற பகுதிகளை ஈரமாக விட முடியாது என்று கூறினார்.
அதே போல மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.
மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தார்ப்பாய் எப்படி இல்லாமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போட்டிகளால் அனைத்து பணமும் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஈரப்பதமான மைதானத்தால் போட்டி ரத்து செய்யப்படுகிறது.
என்று கூறினார்.
- இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
- கனடா 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 3 புள்ளிகளுடன் உள்ளது.
புளோரிடா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்கொள்ள இருந்தது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது.
மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்ததால். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா-கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.
- டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை போல்ட் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
- நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. எனவே அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.
இதையடுத்து, நியூசிலாந்து அணி 3-வது ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் உகாண்டா அணியை 40 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து இலக்கை வெறும் 5.2 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சவுதி 3 விக்கெட்டும், போல்ட், சாண்ட்னர் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த நியூசிலாந்து முன்னணி வீரரான டிரெண்ட் போல்ட், இதுவே தனது கடைசி டி20 உலகக் கோப்பை என அதிரடியாக அறிவித்தார்.
எதிர் வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டமே போல்ட்டின் கேரியரில் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள போல்ட் 32 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.
- ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
- பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 32 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
சி பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் வெளியேறின.
டி பிரிவில் தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறின.
- அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது மிகப்பெரிய பாதிப்பாக அமைந்தது.
- இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. குரூப் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, நமீபியா அணிகள் இடம் பிடித்திருந்தன.
பாகிஸ்தான்- அமெரிக்கா இடையிலான போட்டி "டை"யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.
இதனால் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.
வீரர்களுக்கான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில தலைவர்கள், முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஹ்சின் நக்வி-க்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி தோல்விக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார், வீரர்கள் அவர்களுக்கான மத்திய ஒப்பந்த மறுஆய்வு, சம்பளம், போட்டிக்கான கட்டணம் குறைவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணிக்குள் மூன்று பிரிவுகள் உள்ளன. மூத்த வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது.
இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, தலைவருடன் கடுமையான நடவடிக்கைக்கான ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் வீரர்களுக்கான சம்பளம் குறிப்பிடத்தகுந்த வகையில் உயர்த்தப்பட்டது. அதேபோல் ஐசிசி-யிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கு வீரர்களுக்கு சென்றடைய முடிவு எடுக்கப்பட்டது.
உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றால் ஒவ்வொரு வீரர்களுக்கும் போனஸாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என நக்வி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக பதவி ஏற்ற பிறகு, வீரர்களை ஒன்றிணைக்கும் சவால் அவர் முன் இருந்தது. ஆனால், வீரர்களிடையே குரூப் உருவானதால் அவரால் அதை திறம்பட செய்ய முடியாமல் போனது.
பாபர் அசாம் தலைமையில் ஒரு குரூப், ஷாஹீன் அப்ரிடி தலைமையில் ஒரு குரூப், முகமது ரிஸ்வான் தலைமையில் ஒரு குரூப் என அணியில் மூன்று குரூப் இருந்ததாக கூறப்படுகிறது.
ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை இழந்தபோது அப்செட் ஆனார். அந்த நேரத்தில் பாபர் அசாம் அவருக்கு உதவவில்லை. ரிஸ்வான் தனது பெயர் கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்யப்படாததால் அதிருப்தி அடைந்தார்.
- அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தானுக்கு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
- ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தோல்வியடைந்து நியூசிலாந்து வெளியேறியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளை தவிர மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் அனுபவம் இல்லாத அணிகள்.
நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு ஓரளவு அனுபவம் உள்ளது.
கனடா, அமெரிக்கா, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் பொன்ற அணிகள் தற்போதுதான் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றன.
முன்னணி அணிகளிடம் இந்த கத்துக்குட்டி அணிகள் என்ன பாடுபடப்போகிறதோ என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் மிகப்பெரிய அணிகளுக்கு இந்த அணிகள் அதிர்ச்சி அளித்துள்ளது. அத்துடன் முக்கியமான அணிகள் வெளியாக காரணமாக அமைந்தன.
"ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்திருந்தன. இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை அமெரிக்கா சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் 8 வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதே பிரிவில் சற்று கூடுதல் அனுபவம் வாய்ந்த அயர்லாந்து அணியை கனடா வீழ்த்தியது.
குரூப் "பி" பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்படும். நமீபியாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் இங்கிலாந்து வெளியேறிவிடும்.
குரூப் "சி"-யில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தியதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
குரூப் "டி"-யில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை தோல்வியை சந்தித்தது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. வங்காளதேசம் கடைசி போட்டியில் நேபாளத்தை வீழ்த்தினால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதேவேளையில் தோல்வியடைந்து, இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து வெற்றி பெற்றால் சிக்கல் ஏற்படும். ரன்ரேட் அடிப்படையில் நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறே வாய்ப்புள்ளது. இதற்கான வாய்ப்பு குறைவுதான். நேபாளத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோற்றதனாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததாலும், தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்ததாலும் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் சுற்றோடு உலக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
- டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர்.
- இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணியாக களம் இறங்கியது கனடா. இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் "ஏ" அணியில்தான் கனடாவும் இடம் பிடித்துள்ளது.
கனடா அணி சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்த போதிலும், அயர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுக்கு எதிராக குறைவான ரன்கள் அடித்த போதிலும், 17 ஓவர் வரை வெற்றிக்கான போராடியது.
இன்று கடைசி லீக்கில் இந்திய அணியுடன் கனடா மோதுகிறது. இந்த நிலையில் அந்த அணியின் ஆரோன் ஜான்சன் கூறுகையில் "இந்திய கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர். இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார். டோனி இல்லை என்றால் சச்சின் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் 1996-ல் இருந்து உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால் 2011-ம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் விளையாடும்போது 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
தொடக்க வீரரான ஆரோன் ஜான்சன் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்தில் 52 ரன்கள் விளாசினார்.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை உகாண்டா அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஆள் அவுட்டானது. உகாண்டா அணியில் 4 வீரர்கள் டக் அவுட்டும் அதில் 3 பேர் கோல்டன் டக் அவுட்டும் ஆனார்கள்.
41 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 5.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இத்தொடரின் தனது முதல் வெற்றியை நியூசிலாந்து அணி இன்று பதிவு செய்துள்ளது
- இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும்.
- ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல போட்டி போட்டு வருகின்றன.
3 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்காட்லாந்து அணி 2 வெற்றி 1 டிரா உடன் 5 புள்ளிகளுடனும் 2-ம் இடத்திலும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி 1 டிரா மற்றும் 1 தோல்வி என 3 புள்ளிகளுடனும் 3-ம் இடத்திலும் உள்ளது
இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்விடைய வேண்டும். இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறவேண்டும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றால் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட், "இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும். எனவே ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஆடவே ஆஸ்திரேலியா அணி விரும்பும், மற்ற அணிகளும் அதையே தான் விரும்புவார்கள்" என்று பேசியிருந்தார்.
ஹசல்வுட்டின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட், ஒரு நாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
"ஹசல்வுட் இதை பற்றி நகைச்சுவையாகவே பேசியிருந்தார். ஆனால் அவர் கூறியதை திரித்து அதை பேசுபொருளாக மாற்றியுள்ளனர். நாங்கள் ஸ்காட்லாந்துக்கு எதிராக முழு முயற்சியுடன் விளையாடுவோம். அவர்கள் ஒரு வலிமையான எதிரியாக எங்களுக்கு இருப்பார்கள். ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது" என்று கம்மின்ஸ் தெரிவித்தார்.
- தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்கள் அடித்தார்.
- ஷம்சி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை நேபாளம் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்களும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர்.
நேபாளம் அணி தரப்பில் குஷால் புர்டல் 4 விக்கெட்டுகளும் தேபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
116 என்ற இலக்கை துரத்திய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் குல்சன் ஜாவை டீ காக் ரன் அவுட் செய்தார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது.
நேபாளம் அணியை நிலை குலைய வைத்த தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது.
- 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 5 புள்ளிகளை பெற்ற அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது. இதன்மூலம், தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா.
இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.
அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
- அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
- கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
அதனால், 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது.
பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெற்றது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்