search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
    • இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார்.

    தஞ்சை:

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

    'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

    இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இந்நிலையில், தஞ்சையில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதுமாக பாடப்பட்டுள்ளது.

    இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து துல்லியமாக பாடப்பட்டது.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 7-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
    • மலைஅடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்தநிலையில் பருவமழை காரணமாக மலையடி வார பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதுடன், வனப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் தேடி மலையடிவாரப்பகுதிக்கு வந்துள்ள யானைகள், கொசுத்தொல்லை காரணமாக வனப்பகுதிக்குள் திரும்பி செல்லாமல் அடிவார பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.

    காலை நேரத்தில் உடுமலை- மூணாறு சாலையை கடந்து செல்வதும் மாலையில் அமராவதி அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் உடுமலை-மூணாறு சாலை மலைஅடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.
    • குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை பெரிதாக்குகின்றனர்.

    * டிடி தமிழ் அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை என்பது முற்றிலும் மக்களை திசை திருப்பும் செயல்.

    * யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.

    * நிகழ்ச்சியில் நடந்த தவறுக்கு சிறப்பு விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி எப்படி பொறுப்பாவார்.

    * திமுக-வினர் கவர்னர் மீது குற்றம் சாட்டுவது உள்நோக்கம் கொண்டது.

    * நடந்த தவறுக்கு டிடி சார்பில் மன்னிப்பு கேட்டுவிட்டனர்.

    * குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.

    * இந்தி மாதம் என்பது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போதும் நடைபெற்றது என்று கூறினார்.

    • தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுண்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500-க்கும் கூடுதலான கடைகளில், அதாவது கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான். இவற்றில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து கூடுதல் கவுண்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

    மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாக செய்தியில் பார்த்தேன்.
    • தற்போது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் ரூ.36 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 22 பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்தார்.

    அப்போது அவரிடம், கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறுதலாக பாடப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    இதுகுறித்து ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாக செய்தியில் பார்த்தேன். இதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை. மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி சில சமுதாய மக்களின் மனம் வருந்தக்கூடாது என்ப தற்காக பல வரிகளை நீக்கினார்.

    தற்போது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகம் எதிரே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று காலை நடந்தது.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தப்பாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் ஆகியவை கொண்டு வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1,835 வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    • கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முன்னதாக அவர் சேரன்மகாதேவியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அம்பையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் சமீப காலமாக அதிரடி முடிவுகளை எடுத்து வரும் எடப்படி பழனிசாமி, கட்சியை பலப்படுத்தவும், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்திலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கலாம் என்று கட்சி நிர்வாகிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    கட்சியின் பொதுக்குழுவை கூட்டுதல், உட்கட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி பணிகள் என பல முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி இந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டும் பணி, வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கும் பணியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒரு பணியாளர் குறைந்தபட்சம் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும்
    • பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் பலர் பணி நிலைப்பு கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதாகவும், அதனால், அவர்கள் ஒரு மாதம் பணியாற்றினால் , அடுத்த மாதம் பணி வழங்கக்கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது. சமூக நீதிக்கும், மனித நேயத்திற்கும் எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    ஒரு பணியாளர் குறைந்தபட்சம் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். நிரந்தரப்பணி என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதை வழங்க மறுக்கும் தமிழக அரசு, பணியாளர்கள் பணி நிலைப்பு கோருவதால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேல் பணி வழங்கக்கூடாது என்பது தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பார்க்கும் எஜமானர் மன நிலையையே காட்டுகிறது. சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, எவ்வளவு மோசமான சமூகநீதி படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

    ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசுப் பணியாளர்களை ஒடுக்குவது, தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை நிர்ணயம் செய்வது என தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசு, இனியாவது அதன் அநீதிகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவது, சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    மேலும், பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    தீபாவளியை முன்னிட்டு ஆவின் சார்பில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பல காரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, பால்வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

    • கடந்தாண்டு மட்டும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 1390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை கிண்டியில் தென்பிராந்திய காவல் துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்தாண்டு மட்டும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 1390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * போதைப்பொருள் கடத்தல், சைபர் கிரைம், வலைதளங்களில் வதந்திகளை தடுக்க பிற மாநில போலீசாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    * இணையவழி குற்றவாளிகள் பெரும்பாலும் பிற மாநிலங்கள், பிற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் இணைந்து செயல்படுவது அவசியம்.

    * சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட இணையத்தில் பரவும் வதந்திகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது.
    • தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் இரு மொழி திட்டம் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்கள் என்ன சிந்திக்கிறார்களோ, அதற்கு நேர் மாறாக கவர்னர் கருத்து தெரிவிக்கிறார்.

    மற்ற மாநிலங்களிலே 3 மொழி கொள்கை இருக்கிறது என்பது தவறு. பல இந்தி பேசும் மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். அங்கு ஆங்கிலம் கற்றுத் தருவது இல்லை. ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது.

    தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது. அதற்காக விரும்பியவர்கள் இந்தி படிக்கக்கூடாது என கூறவில்லை.

    தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். கேந்திர வித்யாலயாவிலும் இந்தியை கற்றுத்தருகிறார்கள். விரும்பி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு எந்த தடையும் கிடையாது. தமிழகத்தில் அரசினுடைய கொள்கை மக்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியக்கூறுகள் குறித்து விவாதிக்க, இந்த மன்றம் வழிவகுக்கிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று தென் மாநில காவல் துறை இயக்குனர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்ப டையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளான போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச் செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, நம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு இங்கு நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம்.

    ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப்பொருட்களை ஒழிப்பது.

    இரண்டாவது, போதைப் பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள்! இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது.

    உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிகிடக்கிறது.

    போதைப்பொருட்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதால்தான், நாம் எல்லாம் இன்றைக்கு ஒன்று கூடியிருக்கிறோம். குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அதை வழங்குமாறு நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில், ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்தார்கள். இந்தக் குற்றவாளிகள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திக்கொண்டு, திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது.

    இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினரை நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன். இது போன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம்!

    அண்மையில், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை வைத்து, சட்டவிரோதமாக போலி மதுபானம் தயாரிக்கும் ஆலையை தமிழ்நாடு காவல்துறையினர் கண்டு பிடித்தார்கள். இந்தச் சட்டவிரோத எரிசாராய கும்பல்கள் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மாநிலத்துக்குள்ளே நுழைவதை தடுக்க, மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது.

    ஏ.என்.பி.ஆர். (தானியங்கி வாகன எண் கண்டறியும்) கேமராக்கள், அதிநவீன ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பயன்படுத்துவது மூலம், தடைசெய்யப்பட்ட பொருட்கள், ஏற்கெனவே, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் திறனை நாம் மேம்படுத்த இயலும். இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகி வரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    பெரும்பாலும், இணைய வழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, இணைய வழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

    2023-ம் ஆண்டில் மட்டும், 1,390 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பலர் தமிழ்நாட்டுக்கு வெளியில் கைது செய்யப்பட்டிருப்பதும் நமக்குள்ளே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக, கணினிசார் குற்றங்களில் ஈடுபடுத்தும் பிரச்சனை தற்போது பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.

    சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாகவும், உடல் ரீதியாவும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்று வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்தவேண்டும்.

    பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியக்கூறுகள் குறித்து விவாதிக்க, இந்த மன்றம் வழிவகுக்கிறது. எந்தவித பயங்கரவாதமாக இருந்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்தி தடுக்க, முழு ஒத்துழைப்பை யும், ஒருங்கிணைப்பையும் பலப்படுத்துமாறு இங்கே கூடியிருக்கின்ற மூத்த காவல்துறை அதிகாரிகளை நான் வலியுறுத்துகிறேன்.

    இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடிகிறது. ஏன், தமிழ்நாட்டிலேயே அப்படியொரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது என்பதை நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே, "தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கே அமைதியின்மையை உருவாக்க ஏதாவது பரப்புவீர்களா" என்று யூடியூபர் ஒருவரது வழக்கில் சமூக வலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியதை இந்தநேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ் நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்திற்கு, குறிப்பாக போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளி கும்பல்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதிபடுத்துகின்ற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

    அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் எத்தகைய சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து, நம் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம்! ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்!! போதைப்பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நம்முடன் ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், நம்முடைய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை காப்பதோடு, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ×