search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கோபுர தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மோகித்குமார் (வயது 10). ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த வாரம் மோகித்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    சிகிச்சையில் இருந்த மோகித்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமூர்த்திபட்டியில் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். தற்போது தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடையில் சோதனை போட்டு, பிளாஸ்டிக் கவர் இருந்தால் உங்களுக்கு அபராதம் விதித்து விடுவார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஒரு மளிகைக் கடை செயல்பட்டு வருகிறது.

    நேற்று இந்த மளிகை கடைக்கு டிப்-டாப் உடையணிந்தபடி ஒருவர் வந்தார். அப்போது மளிகை கடையில் பெண் இருந்தார்.

    மர்மநபர் தான் ஒரு அரசு அதிகாரி என்று அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் உங்கள் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளதாக வந்த தகவலின் பேரில் சோதனை செய்ய வந்ததாக தெரிவித்தார்.

    இதை கேட்ட பெண் அதிர்ச்சியானர். தொடர்ந்து அந்த மர்மநபர், எனக்கு பின்னால் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் கடைக்கு சோதனைக்கு வருவார்.

    அவர் வந்து கடையில் சோதனை போட்டு, பிளாஸ்டிக் கவர் இருந்தால் உங்களுக்கு அபராதம் விதித்து விடுவார். எனவே அவர் வருவதற்கு முன்பாக வேறு எங்காவது பிளாஸ்டிக் கவர்களை எடுத்து வைத்து விடுங்கள் என கூறினார்.

    இதையடுத்து கடையில் இருந்த பெண்ணும், அங்கு இருந்த பிளாஸ்டிக் கவர்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு, பின்னால் மறைவான இடத்தில் கொண்டு வைப்பதற்காக சென்றார்.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், பெண் உள்ளே சென்றதும், கடையின் கல்லாப்பெட்டியை திறந்து அதில் இருந்த பணம் முழுவதையும் அள்ளி சென்றார். ரூ.5 ஆயிரத்திற்கும் அதிகமாக பணத்தை எடுத்து சென்றார்.

    அந்த பெண் வெளியில் வந்த போது கடையின் முன்பு நின்றிருந்த மர்மநபரை காணவில்லை. அத்துடன் கல்லாப்பட்டி திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த பணமும் மாயமாகி இருந்தது.

    இதனால் தன்னை ஏமாற்றி திசை திருப்பி விட்டு, அந்த மர்மநபர் பணத்தை அள்ளி சென்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.

    இது தொடர்பாக கடை உரிமையாளர் அங்குள்ள சக கடைக்காரர்களிடம் இது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இதுபோன்று ஏமாற்றி பணத்தை திருடி செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் தனது கடைக்கு வந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அப்போது வாலிபர் ஒருவர் வருவதும், கடையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கல்லாப்பெட்டியில் பணத்தை திருடி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமாக நபர் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
    • 60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும்.

    குனியமுத்தூர்:

    சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.

    இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.

    இந்த நிலையில், ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த நடைமுறையானது வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து போத்தனூர் ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளரும், சேலம் ரெயில்வே கோட்ட பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பொதுவாக ரெயில் பயணம் செய்ய விரும்புவர்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்து, பிளாக் செய்து விடுவதால், அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு அது கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் ஏஜென்ட்கள் இதுபோன்று அதிகப்படியான டிக்கெட் புக்கிங் செய்து விட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்து விடுவதும் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமே.

    மேலும் நீண்ட நாட்களுக்கு முன்பு புக்கிங் செய்யும்போது ஒரு சிலருக்கு மறதி ஏற்பட்டு, பயணிக்கும் நாட்களையும் தவற விடும் சூழலும் உள்ளது.

    தற்போது முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும் என்ற ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு வரவேற்க கூடியதாகும்.

    60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும். மேலும் தேவையற்றவர்கள் புக்கிங் செய்து வைத்திருப்பது குறையும். ரெயில்வே துறையின் இத்தகைய முடிவு ரெயில் பயணிகளுக்கு முற்றிலும் நன்மையே ஆகும். பயணிகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.
    • துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் பொதுக்கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளை போல் உழைத்திருந்தால் 10 ஆண்டுகள் உறங்கிக் கொண்டு இருந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்காது. இப்போது தி.மு.க.வினர் எழுந்து நிற்பதற்கு யார் காரணம்? அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

    இந்த துரோகத்தை தெய்வங்களாக இருக்கும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களை தண்டிக்கவும் தேவையில்லை. அதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் விட்டு விட வேண்டும். அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.

    43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் தோற்று ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசு அமைய முடியாமல் போனதற்கு காரணமானவர்கள் இன்று கட்சி வேட்டி கூட அணிய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    கட்சியிலிருந்து வெளியே செல்லாதீர்கள் என்று சொன்னபோது எல்லாம் என்னை அங்கே கூப்பிடுகிறார்கள், இங்கே கூப்பிடுகிறார்கள், தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று சொன்னவர்கள் இன்று கட்சியிலே சேர்த்துக் கொள்ளுங்கள், சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு, அவர்களே தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
    • மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் 'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

    மாநில அளவிலான இறுதிப் போட்டி நாளை (19-ந்தேதி) அன்றும், பரிசளிப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நாளை மறுநாள் (20-ந்தேதி) அன்றும் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

    தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துள்ள சூழலில் போட்டியாளர்களின் நலன் கருதி, இரு நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளோம். மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு மர்ம பொருள் வெடித்து அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சத்தத்தின் அதிர்வால் அங்குள்ள காவலர் குடியிருப்பு பகுதி வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    மர்ம பொருள் வெடித்த இடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டடு இருந்தது., இதனால் இதிலிருந்து பெட்ரோல் லீக்காகி தீப்பற்றி எரிந்து பேட்டரிகள் வெடித்ததா? சமூக விரோதிகள் தீவைத்து சென்றனரா? அல்லது ஏதேனும் வெடி பொருள் பதுக்கி வைக்கப்பட்டு வெடித்ததா? என செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்பிரனீத் உத்தரவின் பெயரில் பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.


    இவர்களது தடயவியல் ஆய்வின் போது ஏதேனும் வெடிகுண்டு தொடர்புடைய பகுதிகளோ, அதற்கான ரசாயனங்களோ இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து புலன் விசாரணை மேற்கொள்வார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    காவல் நிலையத்தின் அருகிலேயே இந்த மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கும்பகோணம் கோட்டம் சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டியும், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    இதைப்போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 280 கூடுதல் சிறப்பு பஸ்களும்,

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 150 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். இரு நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 430 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 20, 21 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆரணி ஆற்றில் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
    • பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய இரண்டும் தண்ணீரில் மூழ்கியது.


    இப்பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    எனவே, ஆற்றின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து ஆரணி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மாற்று பாதையில் பெரியபாளையம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும், தனியார்-அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்களும், விவசாயிகளும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

    எனவே, அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் கட்டி முடித்து போக்குவரத்து பாதிப்பை தீர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது.
    • சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளி கள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டுக்கு 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகள், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 471 சேலை உற்பத்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது. ஆனால் வேட்டி கரைக்கான நூல், பாபின் கட்டை போதிய அளவு வராததால் குறைந்த தறிகளில் மட்டும், வேட்டி உற்பத்தி பணி நடக்கிறது. இலவச வேட்டி உற்பத்தி பணி 15 முதல் 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.

    சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். ஆனாலும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காததால் உற்பத்தி பணி தொடங்கவில்லை.

    இதுகுறித்து விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    பொங்கலுக்கான வேட்டி, சேலை பணியை வருகின்ற டிசம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடித்து அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்டி, சேலையை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

    ஆனால் தீபாவளிக்கு இன்னும் 13 நாட்களை உள்ள நிலையில் நெசவாளர்களுக்கு புதிய ஆர்டரை வழங்கி கூலி பணத்தை விடுவித்தால் சங்கம் மூலம் போனஸ் வழங்க இயலும்.

    இது தவிர கடந்தாண்டுகளில் உற்பத்தியான இலவச வேட்டி, சேலைக்கு வழங்க வேண்டிய ரூ.123 கோடி நிலுவையை முதற்கட்டமாக வழங்கினால் கூட ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தீபாவளி கொண்டாடும் அளவுக்கு குறைந்தபட்ச தொகை கிடைக்கும்.

    இலவச வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க செய்வதுடன் பழைய நிலுவை தொகையையும் விடுவிக்க நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இவர் அவர்கள் கூறினர்.

    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,240-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,920-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 105-க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280

    16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

    14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    16-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    15-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    14-10-2024- ஒரு கிராம் ரூ.103

    13-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    • சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது.
    • வரும் 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது.

    இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வரும் 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

    • 2 நாட்கள் மூலம் சென்னைக்கு சராசரியாக 99.49 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
    • கடந்தாண்டு டிசம்பர் 3-ந் தேதி 13 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி இருக்கிற

    சென்னை:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் சராசரியாக கடந்த 14-ந் தேதி 65.53 மில்லி மீட்டர் மழையும், 15-ந் தேதி 133.46 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஆக மொத்தம் இந்த 2 நாட்கள் மூலம் சென்னைக்கு சராசரியாக 99.49 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

    அதில் 15-ந் தேதி கத்திவாக்கத்தில் 231.9 மி.மீ, மணலியில் 205.8 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் 200 மி.மீட்டருக்கு குறைவாக தான் மழை பெய்து இருக்கிறது. அதே போல் 14-ந் தேதி 100 மி.மீட்டருக்கு கீழ் தான் மழை பெய்து இருக்கிறது. சென்னையில் 14, 15-ந் தேதிகளில் பெய்த மழை மூலம் மொத்தம் 2.99 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.

    கடந்தாண்டு மிக்ஜாம் புயல் மூலம் சென்னையில் அதிகளவு மழை பெய்தது. அப்போது டிசம்பர் 3-ந் தேதி 135.9 மி.மீட்டர் மழையும், 4-ந் தேதி 117.73 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த 2 நாட்களில் சராசரியாக 126.8 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

    அதில் கடந்தாண்டு டிசம்பர் 3-ந் தேதி 13 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக பெருங்குடியில் 291.6, ஆலந்தூர் - 250, அடையார் - 235.2, மீனம்பாக்கம்-231.5, எம்.ஜி.ஆர். நகர் - 219.6 இடங்களில் மழை பதிவானது. அதே போல் டிசம்பர் 4-ந் தேதி 14 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. அதிகபட்சமாக தண்டையார் பேட்டையில் 250.2, சென்னை கலெக்டர் அலுவலகம் - 247.3, டி.ஜி.பி. அலுவலகம் - 237 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்தது. சென்னையில் 2023-ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4-ந் தேதிகளில் மூலம் மொத்தம் 3.82 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.

    மழையளவுடன் ஒப்பிட்டு பார்த்தால் கடந்தாண்டு பெய்த மழை தான் பேய் மழை. இந்தாண்டு குறைந்தளவுதான் மழை பெய்து இருக்கிறது. இருப்பினும் கடந்தாண்டு ஒரே நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. இந்தாண்டு மழை ஒரே அளவாக கொட்டாமல் நாள் முழுவதும் சீராக பெய்தது. சீரான மழையும், அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் கைக்கொடுத்ததால் இந்தாண்டு மழை நீர் பெரியளவில் தேங்கவில்லை. ஒரு வேளை கடந்தாண்டு போல் மழை ஒரே நேரத்தில் கொட்டி இருந்தால் பாதிப்பு நிச்சயம் அதிகரித்து இருக்கும்.

    ×