search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop"

    • பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது.
    • வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூரை தேடி வரும் வெளி மாநிலத்தினர், வெளி மாவட்ட மக்கள் பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர் என 1,500 கடைகள் மூலம் இங்கு மொத்த வர்த்தகம் நடைபெறுகிறது. அதே சமயம் சில்லரை விற்பனையாளர் குறைவு. ரோட்டோரம் இருந்த வியாபாரிகள் ஒருங்கிணைந்து பனியன் பஜார் அமைத்து, சில்லரை வியாபாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. மீண்டும் ஒருங்கிணைந்த பனியன் பஜார் உருவாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

    பனியன் வியாபாரிகளின் கோரிக்கைப்படி நிரந்தரமான கடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக குறு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பனியன் வர்த்தகத்தை வளர்க்கவும் வசதியாக மாநகராட்சி நிர்வாகம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. பனியன் விற்பனை கடைகள், ெரயில் நிலையம் அருகாமையில் இருந்தால் மட்டுமே வெளி மாவட்ட மக்களும், வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வசதியாக இருக்கும்.

    பனியன் வியாபாரிகளின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் காதர்பேட்டை பகுதியில் நிரந்தர கடைகள் அமைக்க உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் வியாபாரிகளுக்கு, தற்காலிகமாக கடைகளை அமைத்து கொடுக்கும் பணியும் வரும் வாரங்களில் துவங்குமென நம்பிக்கை பிறந்துள்ளது.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. போக்குவரத்து குறைவான, அகலமான ரோட்டின் ஒரு பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

    • கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக வந்துள்ளார்.
    • இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது.

    பல்லடம் :

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பினோய்(வயது 38).சரக்கு லாரி ஓட்டுநர். நேற்று அதிகாலை கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் வந்துள்ளார்.

    லாரி பல்லடம் - செட்டிபாளையம் ரோடு, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்தபோது ஓட்டுநர் பினோய் தூக்க அசதியில் லாரியை இயக்கியதால் ரோட்டோரமாக இருந்த இயற்கை அங்காடி கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கிருந்த இரண்டு கடைகளின் முன் பகுதியில் இருந்த இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்து காலை நேரத்தில் நடைபெற்றதால் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடைகளுக்கு வரவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 51). இவர் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே ஸ்ரீபுரம் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது. 

    இதுதொடர்பாக தேவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    சங்ககிரியை சேர்ந்தவர் ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளித்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் சாவு.
    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவார பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (வயது 40). இவர் அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வந்தார். 

    இவர் குடும்பத்துடன் சுற்றுலா தனது மனைவி சுமையா மற்றும் இவரது மகன்கள் உமர்சாகித் (15), சையத் சமீத் (13) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 15 பேர் பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றில் உள்ள படுகை அணை பூங்காவிற்கு சுற்றுலா வந்தனர்.
     
    பின்னர் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்தனர். அப்போது ஷாநவாஸ் மட்டும் ஆழமான பகுதியில் குளித்தார். 

    அப்போது  திடீரென அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தண்ணீரில் மூழ்கி பலி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன ஷாநவாஸை ராஜா வாய்க்காலில் தேடினர். 

    தண்ணீர் அதிகமாக சென்றதால் தண்ணீரில் மூழ்கியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் பொதுப்பணித்துறையினர் உதவியுடன் ராஜா வாய்க்காலின் சட்டர்களை அடைத்தனர். 

    இதில் ஷாநவாஸ் ராஜா வாய்க்காலில் மூழ்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீசார் அவரது ‌உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
     
    ஷாநவாஸ் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.   இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் 4 ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை ஊழியர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் சீனிவாசன் (வயது 18).

    இவர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் மாயமான சீனிவாசனை தேடி வருகிறார்கள்.
    • ெபரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பனை-காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டது
    • அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம்-கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியின் திறப்பு விழா நேற்று நடந்தது. அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழ சாறு, சுக்கு காபி, பனை ஓலை பொருட்கள், சுக்கு காபி தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி இந்த அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். இதில் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் (திருச்சி) ரவிக்குமார், கண்காணிப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை மண்டல திட்ட அலுவலர் ஆறுமுகம், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
    • சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர்.

    சேலம்:

    சேலம் அன்ன தானப்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64). இவரது மகன் விஷ்ணுகுமார் (37). இருவரும் அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆத்துகாரன் காடு பகுதியைச் சேர்ந்த லலித்குமார் (23) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார்.

    வாகனங்கள் வழியில் நின்றதால் காரில் செல்ல முடியாத அவர் வெங்கடேசன் மற்றும் விஷ்ணுகுமாரிடம் ஏன் இப்படி சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தினீர்கள் என கேட்டுள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து லலித்குமாரை இரும்பு கரண்டியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த லலித்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசன், விஷ்ணுகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ஒரு ஆண்டுக்கும் மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.
    • புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஊராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் உள்ள கண்ணுடையான் தோப்பு, கல்லுளி திருவாசல், சன்னதி தெரு,வடக்கு தெரு,தெற்கு தெரு,அக்ரகாரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி திருமருகல் அம்மாகுள தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 1 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாமல் திறக்கப்படாமல் உள்ளது.

    இதற்கு மாற்றாக அருகில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.

    இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

    எனவே சம்பந்த ப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண காத்திருக்கும் அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
    • நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு குடிநீர் தாகம் எடுத்ததால் அந்த கடையில் ஜக்கில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து குடித்தார். அதனை கண்ட டீ கடை உரிமையாளர் அண்ணாதுரை (59) தண்ணீர் குடித்த சிறுவன் சித்தார்த்தை திட்டியுள்ளார். இதனை கேட்ட சிறுவனின் தாத்தா வையும் விரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குப்பன், அவரது பேரன் சித்தார்த் ஆகியோர் டீக்கடைக்கு சென்று டீ கேட்டுள்ளனர்.  அப்பொழுது கடையின் உரிமையாளர் அண்ணாதுரை என்பவர் 'நேற்று தானே உங்களை விரட்டினேன் மீண்டும் ஏன் இங்கே வர்ரீங்க, நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்,

    இதனைத் தொடர்ந்து மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குப்பன், பின்னர் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் டீக்கடையின் உரிமையாளர் அண்ணாதுரை மீது வன்கொடுமை தடுப்புத் திட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
    • டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை போட வந்தவர்களையும், பொக்லைன் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, பூமி பூஜை போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    • கோவில் திருவிழாவில் கடைகளை திடீரென அடைக்க சொல்லி போலீசார் பதட்டத்தை ஏற்படுத்தினர்.
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டார்.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 1 வாரமாக நடந்து வருகிறது. இதில் விருதுநகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று முன்தினம் திருவிழா வில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னிசட்டி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய 21,101 பக்தர்கள் அக்னிசட்டிகளை எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பெண்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் 24 மணி நேரமும் திறக்கப் பட்டிருந்தன. மேலும் திருவிழாவை முன்னிட்டு பல புதிய கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரி திடீரென நேற்று இரவு கடைகளை அடைக்க கோரி வியாபாரிகளை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் திருவிழா வியாபாரத்தை நம்பி விடிய, விடிய கடை திறப்பது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் திடீர் கெடு பிடியால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவிழா நடந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்கியது. விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்தார்.

    மேலும் அதற்குரிய பாதுகாப்பு அளிக்குமாறும் போலீசாருக்கு உத்தர விட்டார்.

    • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
    • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

     உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

    அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×