search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுகிறது.
    • அமெரிக்க தரத்திற்கு, இந்திய சாலை கட்டமைப்பு உருவாக்கப்படும்.

    மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரத்திற்கு, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கூட இந்திய சாலை உள்கட்டமைப்பை உருவாக்க நான் முடிவு செய்துள்ளேன்.

    இந்திய உள்கட்டமைப்பில், சாலை கட்டுமானம், நதி இணைப்பு, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தும் வளாகம், நீர்ப்பாசனம், பேருந்து நிலையங்கள், கேபிள் கார் திட்டங்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன.

    ரூ.2 லட்சம் கோடியில் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். எங்களிடம் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இதன் மூலம் மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பழங்குடியின வளர்ச்சிக்காக, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டம்.
    • பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை.

    பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் கிராமின் உத்யாமி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 2வது கட்டத்தை ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா நேற்று தொடங்கி வைத்தார். 


    நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் முண்டா, பழங்குடியின மக்களின் நீடித்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முழுமையான நோக்கம் என்றார். இத்திட்டத்தையும் சேர்த்து, பழங்குடியின பகுதிகளின் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார்.

    பழங்குடியின இளைஞர்கள் அதிக திறன் உடையவர்களாக உள்ள நிலையில், அந்தத் திறனை அவர்கள் சரியான முறையில், சரியான இடத்தில் பயன்படுத்தி, உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

    • பாசன மேலாண்மை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றப்படும்.
    • 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

    புனே:


    மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட வளாகத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.

    இதையொட்டி சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியங்கிமயமாக்கல் போன்ற துறைகள் சார்ந்த 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் மத்திய மந்திரி கலந்துரையாடினார். 


    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ஜிதேந்திர சிங், உலகின் முதலாவது புகையில்லா சானிடரி பேட் அகற்றும் சாதனம் மற்றும் மறுசுழற்சி முறையை உருவாக்கவும், இரட்டை மின்சார வசதி கொண்ட இருகட்ட டெஃபிபிரில்லேட்டர்களை உருவாக்கவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

    பாசன மேலாண்மையை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றி, அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கக் கூடிய சென்சார் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துப் பருவநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன்கொண்ட பயிர்களை உருவாக்க வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் அப்போது குறிப்பிட்டார்.

    • புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்கிறார்.
    • மத்திய மந்திரிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிடுகிறார். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொள்கிறார்.

    மத்திய தகவல் தொடர்பு துறை இணை மந்திரி தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

    மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

    • நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
    • மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்து விட்டது.

    மும்பை:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின்கட்கரி மும்பையில் நேற்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.

    மாநகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 


    மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளதாகவும், மின்சார சொகுசுப் பேருந்துகள் மூலம் பயண நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கச்சா எண்ணெய் இறக்குமதி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் 35 சதவீத காற்று மாசு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

    மின்சாரம், எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் டீசல் ஆகிய மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

    ஆட்டோ மொபைல் வாகன எரிபொருளை பொருத்தவரை டீசலை விட, மின்சாரம் அதிக விலை கொண்டது என்றாலும் சூரிய சக்தி பயன்பாடு, மின்சாரத்திற்கான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது என்றும் மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

    • தேசிய பாடத் திட்டம் குறித்து பொது மக்களுக்கும் கருத்து தெரிவிக்கலாம்.
    • 23 மொழிகளில் பொதுமக்கள் கருத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.

    தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும், ஆற்றல்மிக்க மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    நமது கலாச்சார ஆனிவேருடன் ஒருங்கிணைக்கவும், உலகளாவிய கண்ணோட்டம், காலனி ஆதிக்க முறையிலிருந்து கல்வித் துறையை விடுவித்து, நமது அடுத்த தலைமுறையினரிடையே ஆழ்ந்த பெருமிதத்தை ஏற்படுத்துவதில் இந்த பாடத்திட்டம் முக்கிய. பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பெற்றோர், மாணவர்கள், சமுதாய உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் இதில் பங்கேற்கலாம். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள், கல்வியாளர்கள், உள்பட பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் ஆர்வமுள்ள யாரும், இந்த கருத்துக் கேட்பில் கலந்து கொள்ளலாம்.

    கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் உட்பட மொத்தம் 23 மொழிகளில் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
    • நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

    ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் ஆகியவற்றை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

    இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
    • பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில தேர்தலில் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளின் பேரணியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஐம்மு:

    பாகிஸ்தானில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இந்திய வம்சாவளி அகதிகள், பிரிவினைக்குப் பிறகு, இந்திய பக்கம் தஞ்சம் அடைய குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

    நாடு பிரிக்கப்படுவதற்கு முந்தைய மேற்கு பாகிஸ்தானில் பிறந்த டாக்டர் மன்மோகன் சிங், குஜ்ரால் ஆகிய இருவரும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ உரிமை மறுக்கப்பட்டது. சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் சூழ்ச்சிகளால், பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 370வது சட்டப்பிரிவுவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி இந்த முரண்பாட்டை சரிசெய்தார். அதன்பிறகு, இப்போது ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் கூட தேர்தலில் போட்டியிடலாம். மேலும் எம்எல்ஏவாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ கூட அவர்கள் ஆகலாம்.

    அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிப் பாதை பொன்னான அத்தியாயத்தை பதிவு செய்யும். அதில் ஜம்மு காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் போன்ற நாட்டின் ஒதுக்குப்புறப் பகுதிகளின் திறன்கள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் விவசாய துறையில் பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர தெரிவித்துள்ளார்.

    • 200-க்கும் மேற்பட்டோர் சுதந்திர போராட்ட வீரர்கள் அறியப்படாத வீரர்கள் உள்ளனர்.
    • சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் தபால்தலை 20ந் தேதி வெளியிடப்படும்.

    75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அரங்கை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 'இந்தியப் பிரிவினையின் தாக்கம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியும் மந்திரி முருகன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.  


    நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மூவண்ணக்கொடியை ஏற்றி பெருமைபடுத்தி ஆதரவளித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், கொடி காத்தக் குமரன் என எண்ணற்றோர் நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வீடுதோறும் மூவண்ணக் கொடியை ஏற்றி மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

    மேலும் வ உ சி 150வது பிறந்த தினம், பாரதியார் நூற்றாண்டு விழா போன்றவற்றைக் கொண்டாடி வருகின்றோம். தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் இருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் அறியப்படாத வீரர்கள் உள்ளனர்.

    அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.
    • பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையக அலுவலகக் கட்டிடம் மற்றும் புதிய புறநோயாளிகள் பிரிவை மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:

    இந்தக் கட்டிடங்களின் கட்டுமானமும் சித்த மருத்துவ முறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆயுஷ் அமைச்சகத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமையக அலுவலகம் அனைத்து வகையிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.

    சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மாபெரும் தமிழ் சித்தர் அகத்தியர் சிலை நிறுவப்பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளது.

    சித்தா மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சித்தா முறை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஒரு உச்ச அமைப்பாகும்.

    அதன் முதன்மையான கவனம் சித்தர்களின் உலகளாவிய கூற்றுகளை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துவதாகும். இதுவரை 10 காப்புரிமைகள் சிசிஆர்எஸ் மூலம் தாக்கல் செய்யப்பட்டு 623 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஒருங்கிணைந்த சித்தா புற்றுநோய் வெளிநோயாளி பிரிவு அகில இந்திய ஆயுர்வேத நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சித்தா அமைப்பின் மூலம் புற்றுநோயாளிகளின் நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு உதவுவதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

    விடுதலையின் அமிர்தப் பெருவிழா திட்டத்தின் ஒரு பகுதியாக, சிசிஆர்எஸ் மற்றும் என்ஐஎஸ் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அமுக்கரா சூரணம் மாத்திரைகளை வழங்கியுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

    பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நான் அறிவேன். கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதையும் நான் நன்கு அறிவேன். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி. இன்றைய இளம் மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    இந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தாம்பரம் மாநகராட்சி மேயர் கே.வசந்தகுமாரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப் பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.
    • அண்மையில் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

    சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில், 1971 ஆம் ஆண்டு ஈரானின் ராம்சர் நகரில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. ராம்சர் உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதனையடுத்து 2014ம் ஆண்டு முதல் 2022 வரை, 49 புதிய ஈரநிலங்களை ராம்சர் அங்கீகார பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் 13,26,677 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 75 ராம்சர் தளங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ராம்சர் தளங்களின் பட்டியலில் மேலும் 11 ஈரநிலங்களை இந்தியா சேர்த்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு சதுப்பு நிலங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். 

    தமிழ்நாட்டில் அண்மையில் 6 சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம், முதுகளத்தூர் அருகில் உள்ள காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப் பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    • கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி.

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது. 75 நாட்கள் நடைபெற உள்ள இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ள எட்டு கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி 75 கடற்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக "சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்" என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தும் விதமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையை அடுத்த மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள கோவளம் கடற்கரையில் இன்று குப்பைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி டாக்டர் ஜிஜேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அமைச்சர், கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


    பிரதமர் மோடியின் அறைகூவலால் ஈர்க்கப்பட்டு இல்லம்தோறும் தேசியக் கொடி ஏற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்க கோவளம் கடற்கரைப் பகுதிக்கு வந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தேசியக் கொடியினை ஏற்றி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×