search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் அதானி"

    • சரத்பவார், கவுதம் அதானி சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
    • இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மும்பை :

    அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. அதாவது, அதானி குழும நிறுவனங்கள் தங்களின் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெற்றதாகவும், பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும், அதானி குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு, பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து கவுதம் அதானி பின்தங்க தொடங்கினார்.

    அதானி நிறுவன குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான விவகாரத்தில் பாராளுமன்றத்தின் 2-வது அமர்வும் முடங்கியது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கவுதம் அதானிக்கு ஆதரவாக பேசியது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு கமிட்டி விசாரணையே பயன் அளிக்கும் என்றார். அரசியல் காரணங்களுக்காக கவுதம் அதானி குறிவைக்கப்படுகிறார் என்றும் கூறினார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று சரத்பவார் பல்டி அடித்தார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று தொழில் அதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசினார். தென்மும்பையில் உள்ள சரத்பவாரின் 'சில்வர் ஓக்' இல்லத்தில் இந்த சந்திப்பு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    சரத்பவாரை கவுதம் அதானி சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, இது மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சரத்பவார் கூறியிருந்தார். இதனால் இனி சாவர்க்கர் பற்றி விமர்சிக்க போவதில்லை என்று காங்கிரசும் தெரிவித்து இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கவுதம் அதானியுடன் தற்போது சரத்பவார் சந்திப்பு நடத்தி இருப்பது எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.
    • நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    அகமதாபாத்:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத்அதானி.

    இவருக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின்ஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 12-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று உள்ளது.

    இதில் இரு குடும்பத்தினரின் உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர்.

    நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் திவா ஜெய்மின்ஷா எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா அணிந்திருந்தார். ஜீத்அதானி வெள்ளை நிற குர்தாவில் அசத்தலாக காட்சி அளித்தார்.

    ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதானி குழும பணியில் சேர்ந்து தற்போது அதானி குழுமத்தில் நிதி பிரிவின் துணைத்தலைவராக உள்ளார்.

    அதானி ஏர்போர்ட்ஸ் வணிகத்தையும், அதானி டிஜிட்டல் லேப் இணைந்து அதானி குழும வணிகங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் ஒரு செயலி உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஜீத் அதானி தலைமை தாங்குகிறார்.

    • மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை.
    • அதானி பங்கு சந்தையின் பெரிய எருது.

    மும்பை :

    இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை 'பசு தழுவுதல் தினம்' ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தது. நேர்மறை சக்தியை பரப்பவும், மகிழ்ச்சிக்காவும் இந்த முயற்சியை முன்எடுத்து இருப்பதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.

    இதற்கு சில பா.ஜனதா தலைவர்களும் ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் முன்எடுப்பை கேலி செய்தும் சமூகவலைதளத்தில் மீம்ஸ்கள் பரவின.

    இந்தநிலையில் விலங்குகள் நல வாரிய முடிவுடன், தொழில் அதிபர் கவுதம் அதானி விவகாரத்தை ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே சிவசேனா விமர்சித்து உள்ளது.

    இதுதொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் கூறியிருப்பதாவது:-

    அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் அதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. அதானி மோசடி பற்றி மக்கள் பிரதமரிடம் இருந்து விளக்கத்தை கேட்டனர். ஆனால் மோடி அரசு மீண்டும் மக்களை அமைதியாக்க மதத்தை ஒரு டோஸ் கொடுத்து உள்ளது.

    மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை. ஆனால் அவர்களின் அரசு பசு மாடு பற்றி பேசுகிறது. அதானி பங்கு சந்தையின் பெரிய எருது. ஆனால் மோடிக்கு அவர் புனிதமான பசு. பிரதமர் அதனை தழுவிக் கொண்டுள்ளார். அதன் பிடியை தளர்த்த அவர் தயாராகயில்லை. பல மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அவர்கள் ராமர் கோவில், பசு மாடுகளை கூறி ஓட்டு கேட்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொழில் அதிபர் கவுதம் அதானி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    • உண்மை வெளிவர வேண்டும்.
    • கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி புகார் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

    அந்த அமளி காரணமாக பாராளுமன்றம் முடங்கி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் பல ஆண்டுகளாக மத்திய அரசு பற்றியும், தொழில் அதிபர்களுடனான அதன் நெருக்கம் பற்றியும் பேசி வருகிறேன். அதானி விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஆனால், மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை. அதைக்கண்டு பயப்படுகிறது.

    பிரதமர் மோடி அந்த விவாதம் நடப்பதை தவிர்க்க தன்னால் இயன்றதை எல்லாம் செய்வார். அதற்கு காரணம் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும்.

    ஆனால் உண்மை வெளிவர வேண்டும். கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.
    • கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    நியூயார்க்:

    அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.

    கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
    • ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார்.

    புதுடெல்லி:

    ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 மோடி டாலர்களை (சுமார் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலர்களுடன் (சுமார் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-வது இடத்தில் உள்ளார்.

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    • அவர் 4-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.
    • ஆசியா, இந்தியாவின் ‘நம்பர் 1’ பணக்காரராக நீடிக்கிறார்.

    புதுடெல்லி :

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இந்தியாவின் 'நம்பர் 1' பணக்காரர், தொழில் அதிபர்.

    கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்ததால், உலகப் பணக்காரர்களில் 2-வது இடத்தைப் பிடித்து பிரமிப்பூட்டினார் கவுதம் அதானி. பின்னர் அவர் 3-வது இடத்துக்கு இறங்கினாலும், நீண்ட காலம் அதில் நீடித்திருந்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இக்குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

    அவை 3-வது நாளாக திங்கட்கிழமையும் சரிவுடன் வணிகமானதால் அவரது சொத்து மதிப்பு 84.4 பில்லியன் டாலர்களாக குறைந்தது.

    இதனால், புளூம்பெர்க் நிறுவன பட்டியல்படி உலகின் 'டாப்-10' பணக்காரர்கள் வரிசையில் இருந்து அதானி வெளியேற்றப்பட்டார். அவர் 4-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.

    ஆனால் தற்போதும் அதானி, ஆசியா, இந்தியாவின் 'நம்பர் 1' பணக்காரராக நீடிக்கிறார். இருந்தபோதும் அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி தொடர்ந்தால், அவர் ஆசிய அளவில் முதலிடத்தை இழக்கக்கூடும்.

    இந்திய அளவில் அதானிக்கு 2-வது இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி உள்ளார்.

    இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 4 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்துக்கு கவுதம் அதானி சரிவு.
    • அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை.

    மும்பை:

    பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாட்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சிடைந்தது.

    இதன் மூலம், கவுதம் அதானியின் சொத்து மதிப்பிலும் ரூ.4.17 லட்சம் கோடி குறைந்ததால், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த அவர். தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னதாக, அந்த ஆய்வறிக்கை குறித்து அதானி குழுமத்தின் சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் எச்சரித்திருந்தது.

    இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தங்களது அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை. 2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதனை சட்டரீதியில் எதிர்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம் என்று சவால்விட்டது.

    தற்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். பங்குச் சந்தையின் இரண்டே வர்த்தக நாள்களில் அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது தொழில்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    • டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பற்றிய விவரங்களை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதானி குரூப் நிறுவன தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக திகழ்வது தெரிய வந்துள்ளது.

    அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாயாகும். இதன் மூலம் அவர் உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

    இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு 5 சதவீத இழப்பை சந்தித்ததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.

    இவர்களை தொடர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ், ஜின்டால் குரூப் நிறுவனத்தின் சாவித்ரி ஜின்டால், ஆனந்த் மகேந்திரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    • கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் போசஸ் அவரை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறினார்.
    • கடந்த 2 வாரங்களாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்ததால் மீண்டும் கவுதம் அதானி 3-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் அதிபராக திகழ்ந்து வருகிறார். இதனால் அவர் உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.

    கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் போசஸ் அவரை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்ததால் மீண்டும் கவுதம் அதானி 3-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    அவரது சொத்து மதிப்பு 10 லட்சத்து 87 ஆயிரம் கோடியாகும். போர்ப்ஸ் உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்கும், 2-வது இடத்தில் எல்.வி.எம்.எல் நிர்வாக இயக்குனர் பெர்னார்ட் அர்னால்டு ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் கவுதம் அதானி முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார்.
    • கவுதம் அதானி 135 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வாரம் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் 'டாப்10' பணக்காரர்கள் பட்டியலில் எலொன் மஸ்க்கிற்கு அடுத்தப்படியாக கவுதம் அதானி இருந்து வந்தார்.

    இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதானி பின்னடைவை சந்தித்து உள்ளார். புளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி கவுதம் அதானி 135 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்திய பங்கு சந்தை சரிவால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.10.98 லட்சம் கோடியாகும்.

    ஜெப்பெசோஸ் 138 பில்லியன் டாலர் (ரூ.11.23 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் மீண்டும் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    அதே நேரத்தில் எலொன் மஸ்க் 245 பில்லியன் டாலர் சொத்துடன் தொடர்ந்து உலக பெரும் பணக்காரரகளில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 20 லட்சம் கோடியாகும்.

    ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.70 லட்சம் கோடியாகும். அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார்.

    உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முன்னிலை பெற அதானி, பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் இடையே சமீப காலமாக கடுமையான போட்டி நிலவுகிறது.

    இந்த ஆண்டு பிப்ரவரியில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிக பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் அதானி மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பில்கேட்சை முந்தி உலகின் 4-வது பணக்காரர் ஆனார். கடந்த ஆகஸ்ட் 30 அன்று பிரெஞ்சு தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி 3-வது பெரிய பணக்காரராக மாறினார்.

    அதை தொடர்ந்து கடந்த வாரம் கவுதம் அதானி முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார். தற்போது 3-வது இடத்துக்கு பின் தங்கி உள்ளார்.

    • டெல்லி பெரும் பணக்காரர்களில் எச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
    • கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் ரூ.1600 கோடி சேர்த்திருக்கிறார்.

    புதுடெல்லி :

    நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

    அதன்படி, ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியை முந்தி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ஆகும். சமீபத்தில் குறுகிய காலத்துக்கு உலக அளவில் 2-வது பெரும் பணக்காரராக விளங்கிய அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 2 மடங்குக்கும் அதிகமாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் தினமும் அவரது கணக்கில் ரூ.1600 கோடி சேர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டில் அதானியைவிட ரூ.2 லட்சம் கோடி அதிகம் பெற்று முகேஷ் அம்பானி முன்னணியில் இருந்தார். தற்போது அவரை முந்தியிருக்கும் கவுதம் அதானி, ரூ.3 லட்சம் கோடி அதிகமாக பெற்றிருக்கிறார். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், உலகிலேயே பெரிய தடுப்புமருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் சைரஸ் பூனாவாலா 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 400 கோடி ஆகும்.

    மொத்தம் ஆயிரத்து 103 பேர் அடங்கிய இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு 149 பேர் புதிதாக இணைந்திருக்கிறார்கள்.

    இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 185 பேர் இடம்பிடித்திருக்கிறார்கள்.

    டெல்லி பெரும் பணக்காரர்களில், ரூ.1.86 லட்சம் கோடியுடன் எச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

    தலைநகர பெரும் பணக்காரர்களில் 12 பேர் பெண்கள்.

    இந்த பட்டியல் குறித்து ஹுரன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை ஆய்வாளருமான அனாஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், 'உக்ரைன் போர், பணவீக்கம் போன்ற நெருக்கடிகளையும் தாண்டி, நடப்பு ஆண்டில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்கள் அனைவரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடி ஆகும்' என்றார்.

    ×