search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 300966"

    • எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
    • நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2023-24ல் மொத்த செலவினம் ரூ.45,03,097 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த மூலதனச் செலவு ரூ.10,00,961 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளின் அமளி, ராகுல் காந்திக்கு எதிராக ஆளும் பாஜக எம்.பி.க்களின் போர்க்கொடி என பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் பணிகள் முடங்கின. இதனால் பட்ஜெட் மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே, மக்களவையில் விவாதம் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

    மக்களவையில் அடுத்தடுத்த ஒத்திவைப்புகளுக்கு பிறகு மாலையில் மீண்டும் அவை கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா, அரசின் செலவின திட்டத்தில் திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் 2023-24க்கான மானிய கோரிக்கைகள் மற்றும் அதன் தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், விவாதமின்றி மசோதா நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி அவையில் இருந்தார்.

    பட்ஜெட்டுக்கு பாராளுமன்ற ஒப்புதல் வழங்க தேவையான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நடைமுறை 12 நிமிடங்களில் நிறைவடைந்தது. இனி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்வைத்த வரி திட்டங்களை கொண்ட நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

    பட்ஜெட் தொடர்பான மசோதாக்கள் அனைத்தும் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதாக்கள் மீது எந்த மாற்றமும் செய்ய முடியாது. மக்களவையில் மட்டுமே ஒப்புதல் தேவைப்படும் 'பண மசோதாக்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மசோதாக்கள் விவாதத்திற்குப் பிறகு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்படும்.

    நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைய உள்ளது. பட்ஜெட் நடைமுறைகள் முடிந்த பிறகு கூட்டத் தொடரின் காலம் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • மத்திய பட்ஜெட் குறித்த பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் வட்ட பிள்ளையார் கோவில் முன்பு நடந்தது. மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துராமன், ரவிசந்திரன், ரங்கசாமி, முத்துசெல்வம், குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னதாக நடந்த மண்டல கூட்டத்தில் கட்சி நிதி வழங்கப்பட்டது. நிர்வாகி ராஜாராம் நன்றி கூறினார்.

    இதேபோல் முள்ளிப்பள்ளம் கிராம சமுதாய கூடத்தில் பா.ஜ.க. வாடிப்பட்டி தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. மண்டல பார்வையாளர்-மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிராஜன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
    • ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ந் தேதி ஐதராபாத் நகருக்கு வருகிறார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தை நவீன மயமாக்குதல் மற்றும் பிற ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    குறிப்பாக ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இந்த போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

    "இந்தியாவின் வளர்ச்சிக் கதை என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள போஸ்டர்களில் விஷ பட்ஜெட் பை பை மோடி" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் 2014-ல் முழுவதுமாக வளர்ந்த தலைமுடியும், 2023-ல் வழுக்கையுடைய நபரின் படங்களும் அதில் உள்ளன.

    போதை பட்ஜெட்டுக்கு நன்றி மோடிஜி-தெலுங்கானா நடுத்தர வர்க்க மக்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த போஸ்டர்கள் ஐதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் ரெயில் பாதை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புதிதாக 9 வழித்தடங்களில் ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. ரூ.1057 கோடி செலவில் இந்த பாதைகள் அமைக்கப்படுகிறது.

    சென்னை எண்ணூர் துறைமுகமான அத்திப்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் புத்தூருக்கு 88 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா, ஆந்திரா மற்றும் எண்ணூர் துறைமுகத்துக்கு இரும்பு தாது மற்றும் நிலக்கரி கண்டெய்னர்களை கொண்டு செல்ல அத்திப்பட்டு-புத்தூர் வழித்தடம் அவசியமாகும்.

    தற்போது திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில்பாதை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே 8 ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    திண்டிவனத்தில் இருந்து ஆரணி, வாலாஜா வழியாக நகரிக்கு 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 155 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட உள்ளது.

    மேலும் மொரப்பூரில் இருந்து தர்மபுரிக்கு 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    ஈரோட்டில் இருந்து பழனிக்கு 91 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.57.9 கோடி ஒதுக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள புதிய ரெயில் பாதைக்கு ரூ.385.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய ரெயில் பாதைகள் மாமல்லபுரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் தனுஷ்கோடியை தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும்.

    மேலும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரெயில் இயக்குவதற்கும் வழிவகுக்கும்," என்றார்.

    • 2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு துறை வாரியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்ட அறிவிப்பும் குறிப்பிட்டு அதற்கு நிதி எதுவும் ஒதுக்காதது ஏமாற்றம் தான்.

    ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை குறைந்தது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. அதுமட்டுமல்ல மாநிலங்களுக்கு கடன் வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளும் வரையரைக்கப்பட்டு உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வருவாய் உயரும். இது 2022-23-ம் ஆண்டுக்கான மாநிலத்தின் பட்ஜெட் ரூ.33,311 கோடியை விட அதிகமாகும்.

    2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 0.5 சதவீதம் மின்துறை சீர்திருத்தங்களுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    2023-24-ம் ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு ரூ.41,664.86 கோடியாக இருக்கும் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

    தோல் மற்றும் தோல் அல்லாத பாதணிகள் மற்றும் எலக்ட்ரோ லைசர் உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம் மற்றும் மரப்பொருட்கள் துறையில் முதலீட்டை ஈர்க்க இறக்குமதி செய்யப்படும் மரத்தின் மீதான வரியை குறைக்கவும் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அது பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    கர்நாடகா மாநிலத்துக்கு 5 ஆயிரம் கோடி அளவுக்கு நிதிஒதுக்கப்பட்டது போன்று தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஜி.எஸ்.டி. வரி வருவாய் தான் நமக்கு முக்கியமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை.
    • இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் சிகரெட்டுக்கு 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மீது தேசிய பேரிடர் தொகுப்பு வரி போடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்த வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

    சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிகரெட்டின் விலை 5 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரையில் உள்ளது. 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் 10 ரூபாய் சிகரெட்டின் விலை ஒரு ரூபாய் 60 காசு அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் 5 ரூபாய் சிகரெட் 80 காசுகள் உயர்ந்து ரூ.5.80 ஆகும். இதேபோன்று 20 ரூபாய் மதிப்பிலான சிகரெட்டின் விலை 3 ரூபாய் 20 காசு உயர்கிறது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வருவதால் சிகரெட் பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    செல்போன், டி.வி. ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலைகள் குறையும். தொலைக்காட்சி பாகங்களுக்கான சுங்கவரி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டி.வி. விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.வி.யின் விலை ரூ.3 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், பேட்டரி மீதான இறக்குமதி மீதான வரியும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் செல்போன் விலை ரூ.500 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக பிரியதர்ஷினி செல் யூனிவர்ஸ் நிறுவனர் எம்.ஜி.சுரேஷ் குமார் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் செல்போன்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களின் விலை இனி குறைய வாய்ப்பு உள்ளது.

    இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை. இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.

    இருந்தாலும் இனிவரும் காலங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்கள் விலை 5 சதவீதம் வரை விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களின் விலை ரூ.500 வரை குறையும். அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பு இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய தனி நபர் வருமான வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவை யில்லை என்ற அறி விப்பு பாராட்டத்தக்கது.

    நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவ உத் தேசித்துள்ளதும், விவசாய தொழில் முனை வோரை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும், மீன் வளத்துறையை மேம்படுத்த ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் பாராட்ட தகுந்த அம்சங்கள். மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கிறோம்.

    மிகப்பழைய அரசு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாக னங்க ளுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்த 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.

    இப்படி பல நல்ல அம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரி கூட இல்லாதது தான் ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
    • விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய பட்ஜெட் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பு என்று நாம் போற்றும் விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்துவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    அதாவது விவசாயத்துறைக்கு ரூ.8 ஆயிரத்து 468 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு ஆதரவு விலை, அறிவியலுக்கு மாறான பயிர் காப்பீட்டு திட்டம், வெள்ளம், வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை.

    பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி தேவை. ஆனால் மத்திய அரசு ரூ.5,300 கோடி வழங்குவதாக கூறியுள்ளது. இதில் 40 சதவீத கமிஷனை கழித்தால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கிடைக்கும். மேலும் பத்ரா திட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவடையும் வரை இந்த நிதியை செலவு செய்ய முடியாது. உணவு மானியம், நரேகா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.மத்திய அரசு கர்நாடகத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது.

    நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பது இந்த பட்ஜெட் காட்டுகிறது. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த திட்டங்களும் இல்லை. ஆதரவு விலை பற்றி கூறவில்லை. சிறுதானியங்களில் ராகியும் ஒன்று என்று கூறியுள்ளனர். அரசியல் நோக்கத்தில் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறும்போது, "மத்திய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரெயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினருக்கு வருமான வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறுகையில், "பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தேசிய திட்டமாக அறிவித்து விரைவாக பணிகளை தொடங்க வேண்டும். இப்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும், அது தேர்தலுக்கு பிறகே அமலுக்கு வரும். இந்த விஷயத்தில் அடுத்து கர்நாடகத்தில் புதிதாக அமையும் அரசின் பங்கும் முக்கியமானது. சில ரெயில்வே திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. அதை நிறைவேற்ற மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அறிவிக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை மறந்து விடுகிறார்கள். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில், "மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், எதிர்காலத்தை மனதில் வைத்தும், ரூ.380 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
    • உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மும்பை :

    மத்திய அரசின் பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து கூறியதாவது:-

    விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்.

    ரூ.7 லட்சம் வரையிலான வருமானவரி விலக்கு கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்திற்கு உதவும். நடுத்தர மற்றும் கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் உதவும்.

    முன்பு எப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறுகையில், "பா.ஜனதா தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்போதும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டும் அதையே செய்கிறது" என்றார்.

    • காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.
    • ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

    புதுடெல்லி :

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பழமையான, காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.

    'மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் கொள்கை' என்று கூற நினைத்த அவர், 'பழமையான அரசியலை (கட்சியை) மாற்றுவது' என்று தொடங்கினார்.

    உடனே ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. பழமையான அரசியல் கட்சியான காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜனதா வலிமையான கட்சியாக உருவெடுத்து இருப்பதாக அவர் உள்ளர்த்தத்துடன் பேசியதாக கருதி, ஆளுங்கட்சியினர் சிரித்தனர்.

    நிர்மலா சீதாராமன் உடனே சுதாரித்துக்கொண்டு, ''மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ச்சியான கொள்கை'' என்று திருத்திக்கொண்டார்.

    மத்திய அரசின் பழமையான வாகனங்களை அழிக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.
    • கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது

    புதுடெல்லி :

    நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் வங்கி கணக்குகளை கையாளும் நோக்கில் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஜன்தன் திட்டம் குறித்தும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது' என தெரிவித்தார்.

    பசுமை வளர்ச்சி முயற்சிகள் கார்பன் தீவிரத்தை குறைக்கவும், பசுமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

    புதுடெல்லி :

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

    இதில் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் இந்த தொற்றுநோய் காலத்தில் யாரும் பசியாக இருக்கவில்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது.

    பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ரூ.2 லட்சம் கோடி செலவில் ஜனவரி 1 முதல் அரசு செயல்படுத்துகிறது.

    பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கான விளை பொருட்களுக்கு விலை ஆதரவு மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளை நோக்கி திரும்பும் நடவடிக்கைகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி பல ஆண்டுகளாக உற்சாகமாக உள்ளது.

    வேளாண் துறையில் தனியார் முதலீடு நிதியாண்டில் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    ×