search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95119"

    தக்கலை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 170 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசாரின் அதிரடி வேட்டையின் காரணமாக தற்போது கஞ்சா மற்றும் குட்கா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவி‌ஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அழகிய மண்டபம் பகுதியில் குட்கா புகையிலை விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார். போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அழகிய மண்டபத்தை சேர்ந்த முகமது ஷாபி (வயது 54) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அவரிடம்விசாரணை மேற்கொண்டபோது அழகிய மண்டபம் பகுதியில் வாடகை வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வீட்டில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய் தனர்.

    மேலும் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள வீட்டிலும் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்துபோலீசார் அங்கு சென்று சோதனை மேற் கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது ஷாபி குட்கா புகையிலையை எங்கிருந்து விற்பனைக்கு வாங்கி வந்தார்.இதற்கும் வேறு நபர்களுக்கு தொடர்புஉண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வுபெற இருந்த ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.
    சென்னை:

    தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் தொழில்அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 8 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




    குட்கா ஊழல் அரங்கேறியபோது சென்னை செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன் மீது இந்த வழக்கில் முக்கியமாக புகார் கூறப்பட்டது. அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    மன்னர் மன்னன் தற்போது மதுரை ரெயில்வே போலீசில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வுபெற இருந்தார். இந்தநிலையில் குட்கா ஊழல் புகாரில் சிக்கிய மன்னர் மன்னன் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

    மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தேர்தல் டி.ஜி.பி.யிடம் 2-வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். ஆனாலும் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

    முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    தற்போது தேர்தல் டி.ஜி.பி.யாக உள்ள அசு தோஷ் சுக்லாவிடமும் கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனராக சில மாதங்கள் பணியில் இருந்த நேரத்தில் குட்கா ஊழல் வழக்கில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

    இதனால் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அசு தோஷ் சுக்லாவை வரவழைத்து 2-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    குட்கா விவகார வழக்கில் சசிகலா மற்றும் டிஜிபி குறித்து மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடந்தது. #GutkhaScam #Sasikala
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்காக பிறப்பித்த அரசாணையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

    இதேபோல மனுதாரர் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், “குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பது குறித்து வருமானவரித்துறையினர் கடிதம் எதுவும் அரசு அலுவலகத்தில் இல்லை என்று, இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா அறையில், கடந்த 2017-ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனையின்போது, குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறையினர் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    எனவே வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதம் குறித்து கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் இறுதி விசாரணைக்காக நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு வந்தது.



    அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு செய்ய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்தபோது, லஞ்சப்புகார் தொடர்பான ஆவணங்கள் எதுவும் அரசிடம் இல்லை” என்று வாதாடினார்.

    முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப்புகார் தொடர்பாக வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதத்தை முறைப்படி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

    சசிகலா தரப்பு வக்கீல், “போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தபோது சசிகலா அங்கு இல்லை. எனவே அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று வாதாடினார்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப் புகார் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகி உள்ளது. அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பிறகாவது, டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை மறுபரிசீலனை செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை. எனவே இதுகுறித்து மனுதாரர் அனுப்பிய புகார் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். #GutkhaScam #Sasikala
    குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி.ஜி.பி. அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. #Gutkha #GutkhaScam
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தடையை மீறி குட்கா விற்கப்பட்டு வருகிறது.

    குட்கா விற்பனையை தங்கு தடையின்றி செய்வதற்காக அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்னையைச் சேர்ந்த குட்கா தயாரிப்பாளர்கள் ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளர்களின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய டைரி மூலம் இந்த தகவல் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் ரகசிய கடிதம் அனுப்பினார்கள். தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் “குட்கா விற்பனைக்காக அமைச்சருக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும்” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர்.

    அதுபோல 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதப்பட்ட கடிதத்தில், “குட்கா விற்க லஞ்சம் வாங்கிய இரு போலீஸ் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஆகஸ்டு 13-ந்தேதி வருமான வரித்துறை சார்பில் டி.ஜி.பி.க்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “தமிழகத்தில் நாங்கள் சோதனை நடத்த குறிப்பிட்ட இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டதும், உடனடியாக அந்த தகவலை போலீசார் அந்தந்த தொழில் அதிபர்களிடம் சொல்லி விடுகிறார்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

    ஆனால் இத்தகைய கடிதங்கள் எதுவும் வரவில்லை என்று கோர்ட்டில் தமிழக அரசு கூறியது. இதையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்களை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு கடந்த ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    கோப்புப்படம்

    இதற்கிடையே வருமான வரித்துறையினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு சசிகலா அறையில் வருமான வரித்துறை எழுதியிருந்த ரகசிய ஆவணம் ஒன்று சிக்கியது. இதனால் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்கள் விவகாரத்தில் மர்மம் நிலவியது.

    குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்தடுத்து விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். அடுத்தக்கட்டமாக போலீஸ் உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி.ஜி.பி. அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

    குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆவணம் அனுப்பிய வருமான வரித்துறையின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் பெற்றுள்ளார். அதுபோல டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை டி.ஜி.பி. அலுவலக முகாம் சூப்பிரண்டு ஒருவர் பெற்றுள்ளார்.

    இதன் மூலம் டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதங்கள் வந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள், ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.

    குட்கா ஊழல் வழக்கில் இந்த புதிய ஆதாரம் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடியை மேலும் இறுக செய்துள்ளது. #Gutkha #GutkhaScam
    குட்கா வழக்கில் சிக்கிய பாத்திர வியாபாரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. #gutka

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருவள்ளுவர் நகரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் விஜய் (எ) ராமலிங்கம்(வயது 35). இவர் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். விஜய் பாண்டமங்கலத்திலும், இவரது பெற்றோர் கந்தசாமி கண்டர் கல்லூரி சாலையில் கண்டர் நகரிலும் வசித்து வருகின்றனர்.

    இவரது உறவினர் ஒருவர் மோகனூரில் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான குடோனுக்கு கடந்த மாதம் விஜய் சென்றார். அப்போது அந்த குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விஜயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1 மாதம் கழித்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். அதன்பிறகு உறவினர்களுக்கும் விஜய்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விஜய் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் விஜய் பாத்திரக்கடையில் இருந்து நேற்று இரவு கண்டர் நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விஜய் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா வழக்கில் சிக்கிய விஜய் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விஜய்க்கு மனைவி புனிதா(30), 1 மகன், 1 மகள் உள்ளனர். #gutka

    குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தபோதிலும் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மெத்தனத்தால் சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

    இதை தடுக்க போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    சிவகாசி போலீசார் நேற்று சாத்தூர்-சிவகாசி ரோட்டில் உள்ள பாரப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேனில் இருந்த சாத்தூர் நெல்மேனியை சேர்ந்த சரவணமணிகண்டன் (வயது30), ராமகுருநாதன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது புகையிலை பொருட்களை சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்ல இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சிவகாசியை சேர்ந்த சரவணக்குமாரை என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டுவில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.
    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா, போதைபாக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டபோதும் பல்வேறு பகுதிகளில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அதிக அளவு போதை பாக்குகள் விற்கப்படுகின்றன.

    குடோன்களில் பதுக்கி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களே தேடி வந்து போதை பாக்குகளை வாங்குவதால் கடைக்காரர்கள் கூடுதல் விலை வைத்தபோதும் விற்பனை குறையவில்லை. போலீசார் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வத்தலக்குண்டு பகுதியில் சில மாணவர்கள் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் குட்கா பொருட்கள், போதைபாக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வத்தலக்குண்டு பிளீஸ்புரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் மாணவர்கள் போதை பாக்குகள் வாங்கியது தெரிய வந்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போது 18 மூடைகளில் சுமார் ரூ2¼ லட்சம் மதிப்பிலான போதை பாக்கு, குட்பா பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் பாலரமேஷ் என்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம்பெறாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

    மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது.


    அ.தி.மு.க. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், இந்த ஊழலின் “பிதாமகன்களாக” திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

    குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

    குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

    ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும்.

    அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணை கோரி தி.மு.க.வின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமாரை 3 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ஏற்கனவே மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், நேற்று முன்தினம் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இன்று குட்கா ஊழல் தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமாரை 3 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்டவர்களும், சிபிஐ காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #GutkhaScam #CBI
    பெரம்பலூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை வணிகம் செய்தால் உரிமமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் குட்கா, நிக்கோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை ஆகிய போதை பொருட்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்தல், வாகனங்களில் கொண்டு செல்லுதல், வினியோகம் மற்றும் சில்லறை விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்படி தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை வணிகம் செய்யும் வியாபாரிகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். இதன்மூலம் உணவு வணிகர்கள் தமது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் போகும். செல்போன் கடைகள் மற்றும் சில இடங்களில் சில நபர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் எந்த குடியிருப்பு பகுதியிலாவது தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வீடு மூடி சீல் வைக்கப்படும்.

    மேலும், வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குட்கா, நிக்கோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை விற்கப்பட்டாலும், உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பான புகார் அளிப்பதற்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் கொடுக்கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
    கோவை அருகே குடோனில் வைத்திருந்த சாக்குமூட்டையில் பதுக்கிய ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 2½ டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    கோவை:

    கோவை சூலூர் கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தொடர்ந்து சோதனை நடத்தி குடோன்களில், கடைகளில் இருந்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அன்னூரை அடுத்த மசகவுண்டன் செட்டிப்பாளையத்தில் ஒரு குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு ஏராளமான மூட்டைகளில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து மொத்தம் 2,350 கிலோ எடை கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குடோன் அன்னூரை சேர்ந்த சாந்த குமார்(வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. கோவை கணபதியை சேர்ந்த பட்டுராஜன், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த தங்கசிங் ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இங்கிருந்து வாகனத்தில் குட்கா மூட்டைகளை கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து பட்டுராஜன், தங்கசிங், சாந்தகுமார் ஆகிய 3 பேர் மீதும் புகையிலை பொருட்கள் தடை சட்டம் 2003 மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் சாந்த குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பட்டுராஜன், தங்கசிங் ஆகியோர் மளிகை பொருட்களை வைப்பதற்காக தனது குடோனை கேட்டதாகவும், அதன்பேரில் குடோனை வாடகைக்கு கொடுத்ததாகவும் கூறினர்.

    குடோனுக்குள் அரிசி, உப்பு மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஏராளமாக இருந்தது. தொடர்ந்து சாந்த குமாரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் பட்டுராஜன், தனசிங் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்து 1 சொகுசு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    பட்டுராஜா, தனசிங் ஆகியோர் பிடிபட்டால் தான் எங்கிருந்து குட்காவை வாங்கி வந்தார்கள்? யார்- யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? என்பது தெரிய வரும். தலைமறைவான இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ×