search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.
    • மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    ஊட்டி:

    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை புதிய உச்சத்தில் உள்ளது.

    தமிழகத்தின் பல இடங்களில் ரூ.130 முதல் ரூ.150 வரையும், வெளி மாநிலங்களில் சில இடங்களில் ரூ.200 என்ற அளவிலும் தக்காளியானது விற்பனையாகி வருகிறது.

    தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60க்கு மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

    தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்த சகோதரர்களான ராமன், புட்டுசாமி ஆகியோர் 2 சகோதரர்கள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்துள்ள தக்காளியை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.

    இதற்கிடையே மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாய சகோதரர்கள் கூறியதாவது:-

    விவசாயம் தான் எங்களுக்கு தொழில். இந்த பகுதியில் எல்லோரும் சாகுபடி செய்யும் மலைக்காய்கறிகளைத் தான் நாங்களும் சாகுபடி செய்து வந்தோம். வீட்டு தேவைக்காக ஒருமுறை தக்காளி பயிரிட்டோம். நல்ல விளைச்சல் தந்தது. இதனால் அடுத்து கொஞ்சம் அதிகமாக தக்காளியை பயிரிட்டோம்.

    ஏப்ரல் மாதம் மைசூரில் இருந்து 1000 தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். அப்போது தக்காளி விலை ரூ.10 தான். கால நிலை மாற்றத்தால் 400 நாற்றுகள் பட்டுப்போயின.

    600 நாற்றுகள் உயிர் பிழைத்தன. செடி சாயாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டு பந்தல் கட்டி பராமரித்தோம். எங்கள் உழைப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ரூ.150க்கு அதிகமாக தக்காளி விற்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்காக ரூ.80க்கு தக்காளியை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.

    குந்தா பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை தக்காளி விளைச்சலுக்கு ஏற்றது. மாட்டுச்சாண உரமிட்டு தக்காளியை சாகுபடி செய்தோம். இப்பகுதியில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகம். காட்டெருமை, கரடி, கடமான், குரங்குகள் கூட்டம் கூட்டமாக வரும்.

    வனவிலங்குகள் செடிகளை சேதப்படுத்தாமல் இருக்க இரவு, பகலாக காவல் காத்தோம். மேலும் தக்காளி செடிகளை பராமரிக்க நிறைய செலவு ஆகிறது.

    தக்காளி ரூ.200க்கு மேல் விற்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு கிலோவுக்கு ரூ.80 கிடைத்தால் போதும். ஆயிரம் கிலோவுக்கு மேல் தக்காளி அறுவடை செய்து உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்திருக்கிறோம்.

    வெளியூரில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து தக்காளியை அதிக விலைக்கு கேட்டார்கள்.

    உள்ளூர் மக்கள் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ள நிலையில், வெளியூரில் தக்காளியை விற்க மனமில்லை. குந்தா மக்களுக்கு நாங்கள் செய்யும் சேவையாகவே இதனை கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இவர்களிடம் குந்தா மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டு வந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து குந்தாவை சேர்ந்த பெண்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும் மேல் விற்கப்படுகிறது. இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது.
    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது.

    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் கடந்த 1 மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து சாமானிய மற்றும் ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உழவர் சந்தையிலும் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை குறைத்தும், தவிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிக அளவு தக்காளி வந்ததால் அதிரடியாக விலை குறைந்தது.

    வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு தேனி, வருஷநாடு, சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. சராசரியாக 15 டன் தக்காளி இங்கு வரத்து இருக்கும். இங்கிருந்துதான் திங்கட்கிழமை நடக்கும் பட்டிவீரன்பட்டி சந்தைக்கும் தக்காளி செல்லும். இது தவிர பல்வேறு ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

    கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது. சுமார் 12 டன் வரை தக்காளி வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஏராளமானோர் போட்டி போட்டு தக்காளியை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மலிவு விலையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூறினாலும், பெரும்பாலான கடைகளில் இது கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டிலேயே கிலோ ரூ.55க்கு தக்காளி கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு சில வியாபாரிகள் ஏற்கனவே தாங்கள் வாங்கி வைத்திருந்த தக்காளியை பழைய விலைக்கே கூடுதலாக விற்றனர். புதிதாக வந்த தக்காளியை நாளை முதல் விற்பனை செய்வதாக தெரிவித்தனர். வரத்து அதிகரிக்கும் சமயங்களில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • டீ கடையில் பொதுமக்கள் குவிந்தனர்.
    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஒரு டீ வாங்கி குடித்துவிட்டு, இலவசமாக ஒரு கிலோ தக்காளியை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை கொளத்தூர் கணபதி ராவ் காலனியில் நேற்று மாலை டேவிட் என்பவர் புதிதாக டீ கடை ஒன்றை திறந்தார். திறப்பு விழா சலுகையாக தனது கடையில் "ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்" என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீப்போல பரவியது.

    இதனால் அந்த டீ கடையில் பொதுமக்கள் குவிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று ஒரு டீ வாங்கி குடித்துவிட்டு இலவசமாக ஒரு கிலோ தக்காளியை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். டீ கடை முன்பு பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து டீ கடைக்காரர் டேவிட் கூறும்போது, "புதியதாக டீ கடை திறந்ததால் ரூ.180-க்கு விற்கும் தக்காளியை இலவசமாக வழங்க முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டேன். இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை)இதுபோல் ஒரு டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்" என்றார்.

    • மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது.
    • போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயங்கி வருகிறது.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் இங்கு தினமும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை நேரத்திலேயே இங்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர்.

    விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுக்கு விடிய, விடிய காய்கறிகள் கொண்டு வரப்பட்டு இறக்கிவைக்கப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சம் அடைந்து வருவதால் தங்கத்தை பாதுகாப்பது போல் வியாபாரிகள் தக்காளியை பாதுகாத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி பல இடங்களில் தேடிப்பார்த்தும் தக்காளியை காணவில்லை. விசாரணையில் யாரோ 75 கிலோ தக்காளியையும் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் தற்போது சிவகாமி (50) என்ற வியாபாரி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் பூத் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட 2 கிரேடு தக்காளியை வைத்து இருந்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது 50 கிலோ தக்காளியும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, இரவு நேரத்தில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ரோந்து வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

    செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் தொடரும் தக்காளி திருட்டால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    • தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
    • நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய சமையலறைகளில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து உள்ளது.

    எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக அரசு சார்பில் பல மாநிலங்களில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விலை சீராக இருந்து வந்தது.

    ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் உற்பத்தி மற்றும் வினியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல இடங்களில் வரலாறு காணாத உச்சத்தில் விலை உள்ளது.

    டெல்லியில் பல பகுதிகளிலும் சராசரியாக தக்காளி ஒரு கிலோ ரூ.203 வரை விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேநேரம் அரசின் அன்னை பண்ணை கடைகளில் ரூ.259-வரை விற்கப்படுகிறது. இந்த கடைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'காலநிலை மாறுபாடுகள் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தக்காளி வரத்து குறைவால் மொத்த விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் சில்லரை விலையும் அதிகரித்து இருக்கிறது' என தெரிவித்தார்.

    ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையான டெல்லி ஆசாத்பூரில் நேற்று ரூ.170 முதல் ரூ.220 வரை தக்காளி விற்கப்பட்டது.

    இதுதொடர்பாக ஆசாத்பூர் தக்காளி சங்கத்தலைவர் அசோக் கவுசிக் கூறும்போது, 'கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விளைச்சால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. எனினும் அடுத்த 10 நாட்களில் இந்த நிலை மேம்படும்' என்றார்.

    ஆசாத்பூர் சந்தைக்கு நேற்று வெறும் 15 சதவீதம் அளவுக்கு தக்காளி வரத்து இருந்தது. அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெறும் 6 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தருமபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்தானம், துணைப் பதிவாளர்கள் ராஜா, மதியழகன் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

    கோவை,

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி அரசு சார்பில் முதற்கட்டமாக 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதனை 111 நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தக்காளி விளைச்சல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, கூட்டுறவு கடைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் விற்பனையை விரிவுபடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 500 நியாய விலைக்கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 கடைகள், சில பகுதிகளில் 15 கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளி பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை நேற்று கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி உள்பட 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. அங்கு ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இங்கு உள்ள ஒருசில ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது. எனவே பொதுமக்கள் நேற்று ரேஷன் கடைகளுக்கு அதிகளவில் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் போட்டி போட்டு கொண்டு தக்காளி பழங்களை வாங்கி சென்றனர்.

    கோவையில் உள்ள 20 ரேஷன் கடைகளில் 500 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது. ஆனால் ஒரே நாளில் அனைத்து பழங்களும் விற்று தீர்ந்து விட்டன.

    கோவை சாய்பாபா காலனி ரேஷன் கடைக்கு தக்காளி வாங்குவதற்காக வந்திருந்த பெண்கள் கூறுகையில், காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கிறது. இதனால் நாங்கள் போதிய அளவில் வாங்க முடியாமல் வேதனைப்பட்டு வந்தோம்.

    இந்த நிலையில் அரசே, ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தக்காளி விலை கட்டுக்குள் வரும்வரை அரசு ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாகவே பாதியாக குறைந்து இருந்தது.
    • வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உச்சத்தில் இருந்து வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. வடமாநிலங்களில் பெய்த "திடீர்" மழையால் அங்குள்ள வியாபாரிகளும் தக்காளியை கொள்முதல் செய்ய ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் குவிந்ததால் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தக்காளி விலை புதிய உச்சமாக கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாகவே பாதியாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதன் வரத்து மேலும் குறைந்து 25 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதற்கிடையே தற்போது கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ130-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது,

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. இனிவரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. 15நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 என்ற நிலைக்கு வந்துவிடும் என்றார்.

    • விவசாயிகளுக்கு பெண் கொடுக்க சமுதாயத்தில் பலரும் மறுத்து வருகிறார்கள்.
    • விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க வேண்டும். விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர வர்க்கத்தினர் பலர் சமையலில் தக்காளியை தவிர்த்து உள்ளனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களாகவே தக்காளி பயிர் செய்த விவசாயிகள் பலர் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி உள்ளனர் என்ற செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.

    தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தக்காளியை பயிர் செய்த விவசாயி ஒருவர் ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளியை விற்பனை செய்துள்ளார். திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜோதியம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் (27) தான் விளைவித்த தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். 3900 கிலோ தக்காளிகளை 260 பெட்டிகளில், பெட்டிக்கு 15 கிலோ வீதம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். ஒரு பெட்டி ரூ.1550 முதல் விற்பனையானது.

    தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்த நேரத்திலேயே மளமளவென விற்று தீர தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 160 வரை விற்பனையானது. இதன் மூலம் விவசாயி வெங்கடேசுக்கு ஒரே நாளில் ரூ. 4 லட்சத்து 3 ஆயிரத்திற்கு தக்காளி விற்பனையானது.

    திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விற்பனை ஒரே நாளில் லட்சக்கணக்கில் நடந்தது, பல விவசாயிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது:-

    ஜோதியம்பட்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறேன். தக்காளியை நம்பியே அதிக அளவு பயிர் செய்து வந்தேன். தற்போது 9 ஏக்கர் அளவிற்கு தக்காளி பயிரிட்டுள்ளேன். இந்த தக்காளிகளும் விளைந்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையை தக்காளி விலை அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இவ்வாறு விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்போதும் போலவே வழக்கமாக தக்காளிகளை பயிரிட்டேன். ஆனால் தற்போது தக்காளிக்கு பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலங்களிலும் தேவை அதிகரித்துள்ளதால் தக்காளி விற்பனை விறுவிறுவென நடந்து முடிந்தது. இன்னமும் தக்காளிகள் பறிக்க வேண்டி உள்ளது.

    விவசாயிகளுக்கு பெண் கொடுக்க சமுதாயத்தில் பலரும் மறுத்து வருகிறார்கள். இதனால் பல விவசாயிகள் பெண் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க வேண்டும். விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது. இதுபோன்று திடீரென அதிக அளவு வருவாய் விவசாயத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த நம்பிக்கையில் தான் பெரும்பாலான விவசாயிகள், நஷ்டத்தை சந்தித்தாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள். இனி வருகிற காலத்தில் விவசாயிகளுக்கு பெண் கொடுக்க தயங்க மாட்டார்கள் என நம்புகிறேன். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூரில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • தற்போது ரூ.180 வரை விற்கப்படுகிறது

    கரூர்,

    தக்காளியின் விலை தற்போது உச்சத்தை தொட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில் குறிப்பிட்ட சில ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.இருப்பினும் தற்போதைய நிலையில் கரூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருளான தக்காளி விலை உயர் வால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி, குறைந்த விலைக்கு தக்காளி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது
    • ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    தக்காளி விலை கடந்த 2 மாதமாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதுவை அருகே பொதுமக்கள் ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்கி குழம்பு, ரசம், சட்னிக்கு பயன்படுத்தும் சுவாரசிய சம்பவம் நடந்து வருகிறது.

    ஆசியாவிலேயே பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்து வருவதால் கடந்த ஜூன் மாதம் 1 கிலோ தக்காளி ரூ.100-யை தொட்டது. தொடர்ந்து தக்காளியின் விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்ததால் ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு தக்காளி வாங்கி வரப்பட்டு இங்கு மொத்தம் மற்றும் சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இருந்து புதுவை மட்டுமல்லாது புதுவை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் இங்கிருந்து மூட்டை கணக்கில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரிகள் தக்காளியை வாங்கி கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது தக்காளியின் விலை கிலோ ரூ.180-லிருந்து ரூ.200-ஐ எட்டி உள்ள நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான பட்டானூர் பகுதியில் ஒரு சிலர் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வாங்கி அதனை சட்னி, குழம்பு, ரசம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர்.

    தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 110 கிராம் தக்காளி (டொமோட்டோ சாஸ்) சாஸ் ரூ.15-க்கு கிடைக்கிறது. 100 கிராம் தக்காளி சாஸ் செய்வதற்கு 300 கிராமிலிருந்து இருந்து அரை கிலோ வரை தக்காளி தேவைப்படும்.

    அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. மளிகைக் கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸில் இனிப்பு சுவை இருப்பதால் அவற்றுடன் சமையலுக்கு புளி, மிளகாய் ஆகியவற்றை கூடுதலாக சேர்த்து இயற்கையான சுவையை பெற முடிகிறது என்றார். இதனால் இந்த பகுதி மக்கள் ஏராளமானோர் தற்போது தக்காளி சாஸ்க்கு மாறி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    சென்னை:

    அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகள் என மொத்தம் 82 கடைகளிலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 கடைகள் என மொத்தம் 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    67 பண்ணை பசுமைக்கடைகள், 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ஆக உயர்ந்துள்ளது. நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மலிவு விலையில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.

    ×