search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • பொதுவாக அனைவரும் மாதவிடாய் சுழற்சியின் முதல் 5 நாட்கள் கருப்பு எள்ளு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தினமும் செய்து ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை சரிசெய்து மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    ஒவ்வொருவரின் உடல் தன்மையை பொறுத்தும், வாழும் இடம் மற்றும் காலநிலையை பொறுத்தும் மாதவிடாய் தொடங்கும் வயதும், முடிவுறும் வயதும் வேறுபடுகிறது. சராசரியாக 10 முதல் 16 வயதில் மாதவிடாய் சுழற்சி தொடங்கி 45 முதல் 50 வயதில் முடிவுறுகிறது.

    சராசரியாக 21 முதல் 35 நாட்கள் வரை மாதவிடாயின் ஒரு சுழற்சி நீடிக்கும். சரியான இடைவேளையில் மாதவிடாய் ஏற்படுவது பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான நல்ல அறிகுறியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக உடலின் இயற்கை நிகழ்வு தொந்தரவு தரும் விதமாக மாறியுள்ளது.

    மாதவிடாயின்போது அதிகமான குருதி வெளியேறுவது அல்லது குறைவாக வெளியேறுவது, இரண்டு மாதவிடாய்க்கு இடையில் குருதி கசிவு, மாதவிடாயின் போது அதிகப்படியான வயிறு வலி மற்றும் இடுப்பு வலி, 21 நாட்களுக்கு முன்பே மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது 90 நாட்கள் ஆனாலும் மாதவிடாய் நடக்காமல் இருப்பது போன்ற குறிகுணங்களில் ஏதேனும் சிலவற்றால் இன்றைய பெண்கள் பலர் அவதியுறுகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகள் எப்போதாவது ஒரு முறை மட்டும் இருந்தால் அச்சப்பட தேவையில்லை. ஆனால் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும்.

    பெரும்பாலும் முறையற்ற மாதவிடாய், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகிறது. துரித உணவுகள் மற்றும் உடற்பயிற்சி இன்மை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரித்து ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு சினைப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    உலக சுகாதார மையம் திருமண வயதில் இருக்கும் பெண்களில் 8 - 13 சதவீதம் பேர் pcos பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 70 சதவீதம் பேர் இன்னும் pcos பிரச்சனை இருப்பதை கண்டறியாமல் உள்ளனர் என்றும் கூறுகின்றது.

    இந்த pcos பிரச்சனையால் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் 90 நாட்களுக்கு மேல் ஏற்படாமல் இருப்பது முகம், மார்பு, முதுகு அல்லது பிட்டம் ஆகியவற்றில் அதிக ரோம வளர்ச்சி, தலைமுடி உதிர்தல், முகப்பரு, கழுத்து, அக்குள், மார்பகம் மற்றும் தொடை இடுக்குகளில் கருமை நிறம், கவலை, மனச்சோர்வு, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. இதை சீர் செய்யாமல் விடும் பட்சத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் தங்கள் வேலைகளுக்குக்கிடையில் சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி Pcos பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது மிகவும் சிறந்ததாகும்.

    கழற்சி விதையை பொடித்து, அதற்கு கால் எடை அளவு மிளகு பொடி சேர்த்து தினம் 1/2 ஸ்பூன் காலை மாலை தேனில் கலந்தோ மோரில் கலந்தோ அருந்தி வரலாம்.

    கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை சம அளவு எடுத்து பொடி செய்து, வெல்லம் சிறிது சேர்த்து 1/2 ஸ்பூன் அளவு காலை மாலை சோம்பு கஷாயத்தில் அருந்தலாம்.

    நடுத்தர வயது பெண்கள் Adenomyosis என்னும் கருப்பை சதைகட்டியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கருப்பையின் உள்திசுவான எண்டோமெட்ரியம் கருப்பையின் தசை சுவரில் வளரத் தொடங்குகிறது. இதனால் மாதவிடாயின்போது கடுமையான வயிற்று வலி, அதிகமான உதிரப்போக்கு, இடுப்பில் கத்தியால் வெட்டுவது போன்ற கூர்மையான வலி, உடலுறவின் போது வலி போன்றவை ஏற்படுகிறது.

    கலியாண முருக்கிலையின் சாறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்கள் வரை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளலாம். இது மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பதுடன் கட்டி குறைய வழி வகுக்கும்.

    மேலும் வாழைப்பூச்சாறு, இலவங்கப்பட்டை கஷாயம், ஆடாதோடை இலை கற்கம் போன்றவை அளவு கடந்து போகும் மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வரும்.

    அடுத்ததாக 30 முதல் 50 வயது வரை உள்ள பெண்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் நார்த்திசு கட்டி என்னும் Uterine Fibroid ஆல் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையில் உருவாகும் இந்த மென்மையான கட்டிகள் சிலருக்கு அறிகுறிகள் ஏதும் ஏற்படுத்துவதில்லை. சிறு விதை அளவு முதல் பெரிய பந்து அளவு வரை இருக்கிற இக்கட்டிகளால் அதிக வலி மற்றும் அதிக குருதிபெருக்கு ஏற்படும். கட்டிகள் பெரிதாக வளரும்போது சிறுநீர்ப்பையை அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு மலச்சிக்கல், தொடர்ச்சியான கருச்சிதைவு, கருவுறாமை கூட ஏற்படுகிறது.

    பொதுவாக இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சமநிலையின்மை மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது என கருதப்படுகிறது. புற்று நோயாக மாறும் வாய்ப்பு இக்கட்டிகளில் மிக குறைவாகவே உள்ளது. கருப்பையின் புறணி திசு போன்ற ஒரு திசு கருப்பை குழிக்கு வெளியே வளரும்போது Endometriosis என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் கருப்பை திசுக்களை போலவே இந்த திசுவும் சிதைந்து உதிரபோக்கு ஏற்படும். இருப்பினும் சில நேரம் இந்த இரத்தம் தேங்கி, சுற்றியுள்ள திசுக்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.இதனால் மாதவிடாயின் முதல் 2 நாட்கள் கடுமையான தசைப்பிடிப்புகள் ஏற்படும். மேலும் மாதவிடாயின் போதும், மாதவிடாய்களுக்கு இடையிலும் அதிக உதிரப்போக்கு, மலம் மற்றும் சிறுநீரில் இரத்தம், நீங்காத சோர்வு மற்றும் களைப்பு ஏற்படும்.

    அடுத்தது கருப்பை வாய் அழற்சி (cervicitis) குறித்து காணலாம். கருப்பை வாய் என்பது கர்ப்பப்பைக்கு கீழே யோனியை தொடர்பு கொள்ளும் பகுதியாகும். கருப்பை வாயில் வீக்கம் ஏற்படும்போது அது கருப்பை வாய் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் தொற்று பரவக்கூடிய அல்லது பரவாத வகையில் இருக்கலாம். அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபட்டு காணப்படுகிறது. கருப்பை வாய் அழற்சியால் சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், மாதவிடாய் இடைநாட்களில் குருதிகசிவு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கருப்பை வாய் அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    பெரும்பாலான பெண்கள் 50 வயதிற்கு மேல் கருப்பை, கருப்பைவாய், மற்றும் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர கூடும். ஆனால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்குகிறது. தொடக்க நிலையில் புறக்கணிக்கத்தக்க அளவு அற்பமானதாக இருப்பதால் நோயாளிகள் அதில் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை. வலிகள் ஆரம்பத்தில் இருப்பதில்லை. கசிவுகள் மட்டும் ஓரளவிற்கு அதிகப்படும். முதலில் அளவு கடந்து காணப்படுகின்ற வெண் தீட்டு பின்பு இரத்தம் கலந்து காணப்படும். பின்பு கசிவுகள் மஞ்சள் பழுப்பு வண்ணத்தை பெறுகின்றன. தசைகள் அழுகத்துவங்கியவுடன் கசிவுகள் பழுப்பு நிறமாகின்றன. இவற்றில் நோய் கிருமிகள் சேரும்போது முடைநாற்றம் வீசத் தொடங்கும்.

    சிலசமயம் மாதவிடாய் காலங்களில் உதிரம் போகும் காலம், அளவு கடந்து காணப்படுகிறது அல்லது மாதவிடாய் ஏற்பட்ட ஓரிரண்டு நாட்களில் மீண்டும் இரத்தம் கலந்த செங்கல் நிற மங்கலமான கசிவு காணப்படுகிறது. புணர்ச்சியின் பின்பும், மலத்தை முயற்சி செய்து கழிக்கும்போதும் சில சமயங்களில் உதிரப்போக்கு ஏற்படுகிறது. நாள்போக்கில் அருகிலுள்ள உறுப்புகளுக்கும் பரவி அதற்கேற்ப குறிகுணம் ஏற்படுகிறது. எனவே இந்த நோயை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டு உறுதிசெய்து, தொடக்கத்திலேயே வளர்ச்சியை தடை செய்ய வேண்டும்.

    எனவே 35 முதல் 65 வரை உள்ள பெண்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை PAP மற்றும் HPV (Human Papilloma Virus) பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    மேலும் மாதவிடாய் கோளாறுகளான அதிக உதிரபோக்கு அல்லது குறைவான உதிரபோக்கு , மாதவிடாய்க்கு இடையில் குருதி கசிவு , மாதவிடாயின் போதோ அதற்கு முன்னர் பின்னரோ அதிகப்படியான வலி போன்ற குறிகுணங்கள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி அவர்கள் தேவைக்கேற்ப பரிந்துரைக்கும் இடுப்புப்பகுதி பரிசோதனைகளை தயங்காமல் செய்து கொள்ளவேண்டும்.

    மேலும் பொதுவாக அனைவரும் மாதவிடாய் சுழற்சியின் முதல் 5 நாட்கள் கருப்பு எள்ளு சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் எள்ளு உருண்டை, எள்ளுப்பொடி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கை சீர்செய்து மாதவிடாய் கால வயிற்று வலியை குறைக்கும்.

    அடுத்து 6 முதல் 14 நாட்கள் வரை உளுந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். உளுந்து களி, கஞ்சி போன்றவற்றை இந்த நாட்களில் சேர்த்துக்கொள்ள, இதிலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் மாதவிடாய் சுழற்சியில் 14வது நாள் கருமுட்டை வெளிப்பட பெரிதும் துணை செய்கிறது. மேலும் இடுப்பிற்கு பலத்தையும் தருகிறது. மாதவிடாய் சுழற்சியின் கடைசி 14 நாட்கள், அதாவது 15 முதல் 28 நாட்கள் வரை வெந்தயம் பொடி செய்து அரை முதல் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். Harmonal Imbalance ஐ சரிசெய்து மாதவிடாய் முன் குறிகுணங்களான குமட்டல், வாந்தி, தலைவலி, உடல் சோர்வு போன்றவற்றை குறைக்கிறது. மேலும் இது சினைப்பை கட்டிகளை குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவருகிறது.

    பூப்பு தொடங்கியது முதல் முடிவுறும் வரை பெண்கள் இதை தொடர்ந்து பின்பற்றி வர ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரான் அளவு சீர்செய்யப்பட்டு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகிறது. மேலும் போதுமான புரதச்சத்து, இரும்புச்சத்து சேர்ந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தினமும் செய்து ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை சரிசெய்து மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    • பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அந்த பிள்ளைகளும் மனதளவிலும், வெளியுலக அளவில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.
    • பெற்றோர்கள் அங்கு நீதிபதியாகவோ, நாட்டமை செய்யவோ வேண்டாம்.

    விடலை பருவம். இந்த பருவத்தில் இருக்கும் குழந்தைகள்- இவர்கள் இள வயது என்றாலும் குழந்தைகள் என்றே குறிப்பிடலாம். இந்த வயது 13-19 வரை என்று எடுத்துக் கொள்வோம். இவர்களை வளர்க்கும் பெற்றோர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இது பல வீடுகளில் நாம் காணும் ஒன்று. பாசம் ஒரு பக்கம், பெற்ற பிள்ளையை பற்றிய பயம் ஒரு பக்கம். அவர்கள் எதிர்காலத்தினைப் பற்றிய திகில். இவை பெற்றோர்களை மனதளவில் நரக வேதனையை அனுபவிக்க வைக்கின்றது. இது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அந்த பிள்ளைகளும் மனதளவிலும், வெளியுலக அளவில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

    அவர்களின் ஹார்மோன்கள் மாறுதல்கள், பருவ வயதினை அடைதல், பெற்றோர்களின் கட்டுப்பாடு திணிப்புகள், பள்ளியில் படிப்புச் சுமை என பல வகைகளில் அவர்களும் கஷ்டப்படுகின்றனர் என்பதே உண்மை. பலர் அவர்களின் பெற்றோர்களை விரோதியாய் பாவிக்கின்றனர். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி தவறாய் புரிந்து கொள்கின்றனர். இதனை முள் மேல் விழுந்த துணியாகத்தான் கையாள வேண்டி உள்ளது. பொதுவில் இந்த இளம் சிறார்களின் பிரச்சினையாக

    * தனது தோற்றம், அழகு, உருவ அமைப்பு, நிறம் என இதிலேயே கவனமும், கவலையும் உள்ளது.

    * அதிக 'ஸ்ட்ரெஸ்' உடனேயே இருப்பர்

    * மனக்கவலை, மன சோர்வு அதிகம் இருக்கும்.

    * சிலர் மது, புகை பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்

    * சிறு வயதில் கர்ப்பம்

    * சிறு வயதில் உடல் உறவு

    * எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுதல்

    இப்படி நிறைய வகையில் வெளிப்படுகின்றன.

    முறையான தூக்கமின்மை, ஒழுங்கான உணவு பழக்கமின்மை, முறையான ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் விரும்பமின்மை, தனியாக இருத்தல், அறையில் தனிமையில் கதவை தாளிட்டு இருத்தல் இவை அனைத்துமே பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகள்தான்.

    கோபம், குழப்பம், பொறாமை, முறையில்லாத நடத்தை, பெற்றோர்கள் மீது வெறுப்பு, ரகசியம், இவை அனைத்துமே அவர்களது பருவ மாறுதலின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான். இவர்களால் ஒழுக்கமான முறையில் நடக்க முடியவில்லை என்ற இயலாமையே இவர்களுக்கு கூடுதல் ஆத்திரத்தினை ஏற்படுத்துகின்றது.

    இந்த காலத்துக்கு ஏற்றார் போல் 10-11 வயதிலேயே இந்த ஹார்மோன் மாறுபாடுகள், உடலுறவு, விபரீத விளைவுகள் இவற்றினைப் பற்றி சொல்லிக் கொடுப்பதே இவர்களை பல பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும் என்கின்றனர் மனநல ஆய்வாளர்கள்.

    எந்நேரமும் அவர்களை குற்றம், குறை கூறாமல் அவர்களின் சுய மதிப்பினை, கவுரவத்தினை அவர்கள் கூட்டிக் கொள்ளும் வகையில் மட்டும்தான் பேச வேண்டும். நீங்கள் அவர்களுக்கு காட்டும் மரியாதையே அவர்களுக்கு சுய மரியாதையினை உருவாக்கும். மாறாக அவர்களை குட்டிக் கொண்டே இருந்தால் சுயநம்பிக்கை இழந்து விடுவர். அக்கறை என்ற பெயரில் அவர் களை அழித்து விடக் கூடாது.

    இந்த பருவ காலத்தில் தான் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உறவில் இறுக்கம், புரிதல் இருக்க வேண்டும்.

    உங்கள் பிள்ளைகளை கொஞ்சமாவது நம்ப வேண்டும். அதிக குறுக்கு விசாரணை, வேவு பார்த்தல் போன்றவை அவர்களை மேலும் பிரச்சினைக்குள்ளாக்கும். திருட, பொய் சொல்ல, மரியாதை இன்றி பேச முற்படுவார்கள். அவர்களுக்கு மனநல பிரச்சினை இருக்கின்றது என்பதனை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

    அவர்களுக்கு பள்ளியில், சமுதாயத்தில் யாரேனும் மனதளவில் உடல் அளவில் கொடுமைப்படுத்துகின்றனரா? என்று கண்டறிய வேண்டும். அவர்கள் தைரியமாய் பெற்றோரிடம் எதனையும் பகிர்ந்த கொள்ளக் கூடிய நல்ல உறவு முறையினை உருவாக்க வேண்டும்.

    தேவைப்படின் மன நல மருத்துவர் ஆலோசனையும் பெற வேண்டும்.

    இளம் பருவத்தினரின் சில பொதுவான பிரச்சினைகள்:-

    * நண்பர்களே வாழ்வின் முக்கியமான வர்களாக இருப்பார்கள். பெற்றோர்களை தூக்கி எறிவார்கள். இந்த நட்பு தவறான நடத்தை உடையவர்களுடன் இருந்துவிட்டால் இவர்களும் சமுதாய, தனிமனித ஒழுக்கத்தினை வரை கோடு எல்லைகளை மீறுகின்றனர். இந்த இடத்தில் பெற்றோர்களின் பொறுமையும், அன்பு, தவறுதலை சுட்டி காட்டுதல் மட்டுமே தீர்வாக அமையும். உங்கள் பிள்ளைகள் கத்தலாம், எரிந்து விழலாம். ஆனால் விடாது நீங்கள் காட்டும் அன்பும், பொறுமையும் கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதியவே செய்யும்.

    * சகோதர, சகோதரிகளுடன் பொறமை இருக்கலாம். தான் சரியாக பெற்றோர்களால் கவனிக்கப்படவில்லை என்று எண்ணுவாார்கள். அன்பு இல்லை என ஏங்குவார்கள்.

    அவர்களுக்குள் ஏற்படும் சிறு சிறு சண்டைகள், பிரச்சினைகள் இவற்றினை அவர்களே தீர்வு காணட்டும். பெற்றோர்கள் அங்கு நீதிபதியாகவோ, நாட்டமை செய்யவோ வேண்டாம். பொறாமை அதிகப்பட்டால் இருவருக்கும் சம கவனிப்பு, அக்கறை கொடுக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி பேசுவது, ஒருவரை தாழ்த்தி பேசுவது, மற்றவரோடு ஒப்பிட்டு குறை கூறுவது போன்றவற்றினை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    * பெற்றோர்களின் கருத்துக்களை இந்த காலப் போக்கின்படி பிள்ளைகள் ஏற்க மாட்டார்கள். மாறுபாடாகவே இருக்கும். வாக்குவாதங்கள் இருக்கும். சிலர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வர். பெற்றோர்களும் பொறுமை இழந்து அடிக்கவும் செய்வர்.

    நம் கருத்துகளை அவர்கள் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு பிறப்பும் தனித் தன்மை கொண்டதே. சற்று விட்டுக் கொடுக்க வேண்டும். அமைதியான மனநிலையில் மட்டுமே பேச வேண்டும். எதனையும் வாக்குவாதம், மிரட்டல் மூலம் செய்யவே முடியாது என்பதனை பெற்றோர்கள் கண்டிப்பாய் புரிந்து கொள்ள வேண்டும்.

    இம் மாதிரியான பாதிப்புடைய குழந்தை களுக்கு தன்னம்பிக்கை இருக்காது. இதனை மேலும் பாதிக்கும் வகையில் பெற்றோர்கள் நடவடிக்கை இருக்கக் கூடாது. அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

    தியானம், யோகா இவற்றினை பெற்றோர், பிள்ளைகள் இருவரும் கற்க வேண்டும். இது மிக அவசியம். இது மிகுந்த நன்மை பயக்கும் என ஆய்வுகள் அறி வுறுத்துகின்றன.

    இவைகளை நாம் உணர வேண்டும்

    * டீன் பருவம் அதிக சக்தி உள்ள பருவம். பொறுப்புகள் அநேகமாக இருக்காது. பயம் இருக்காது.

    * இன்றைய தலைமுறை காணும் சமுதாயம் முற்றிலும் மாறுபட்டது.

    * அவர்களுக்கு மீடி யாக்கள் மூலம் கிடைக்கும் நன்மை களும் அதிகம். தீமைகளும் அதிகம்.

    * கொடுமை களை அவர்கள் உறவுகள் மூலமோ, நண்பர்கள் மூலமோ, தெரியாதவர் மூலமோ எளிதில் அடைகின்றனர்.

    * ஹார்மோன் மாறுபாடுகள் அவர்களை அதிகம் பாதிக்கின்றன.

    * இளம் வயது காதல், காதல் முறிவு இவை மனதளவில் அதிகம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    * சமீபத்திய ஆய்வு அநேக இளம் பருவத்தினர் சுமார் 9 மணி நேரம் ஏதோ ஒரு வித மீடியா தொடர்பிலேயே இருக்கின்றனர் என்று கூறுகின்றது.

    * பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்பு கனவுகள் அவர்களை பயம் கொள்ளச் செய்கின்றன.

    * எதனையும் அவர்கள் மீது திணிக்க வேண்டாம். வாய்ப்புகள், நல்லவைகள் இவற்றினை கை காட்டி கொடுங்கள். பாட்டோ, இசை கருவியோ கற்பது மனநிலை சீராய் இருக்க உதவும். அவர்களின் ஆர்வங்களுக்கு காது கொடுங்கள். ஓவியம் வரைவதில் திறமை இருந்தால் அதனை ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்களின் சுற்றுப்புற சூழ்நிலை நல்லவைகளாகவே இருக்கட்டும்.

    • அழுவேன், சிரிப்பேன், அதெல்லாம் ஓ.கே. ஆனால் ரொமான்ஸ்தான் வரவேயில்லை.
    • வெட்கப்படுவது எப்படி? ரொமான்ஸ் பண்ணுவது எப்படி? என்பதையே கற்க ஆசைப்பட்டேன்.

    பருவம் மாறும் போது உருவம் மாறுகிறது. உருவத்துக்கு ஏற்ற வகையில் நடை, உடை, பாவனைகள் எல்லாமே மாறுகிறது. இந்த மாற்றங்கள் நம்மை அறியாமலேயே நிகழுகிறது.

    அதை பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும். அந்த பிரமிப்பால் தானே 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா... இது பூவாடை வீசிவர பூத்த பருவமா... பாவாடை போன்ற முகம் மாறியதேனோ... பனிபோல நாணம் அதை மூடியதேனோ...' என்று கவி யரசரும் பாடியிருக்கிறார்.

    அந்த பாடல் வரிகள் தான் எவ்வளவு உயிரோட்டமானவை? நானே என்னை நினைத்து பார்க்கிறேன்! எல்.கே.ஜி.யில் தொடங்கிய நடிப்பு பயணம். எட்டாம் வகுப்புக்குள் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை தொட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஆம் 40 படங்கள் என்றால் நம்ப முடி கிறதா? அந்த வயதில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி களில் அத்தனை படங்களை நடித்து முடித்து விட்டேன்.

    ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடிக்க வைத்த டைரக்டர்கள் 'இப்போ... மீனா பொண்ணு வளர்ந்திருப்பாளே....' என்று நினைத்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் 'நவயுகம்' என்ற தெலுங்கு படத்துக்கு கதாநாயகியை தேடியிருக்கிறார்கள்.

    அப்போது தான் எதற்கும் மீனாவையும் பார்த்து வருவோமே என்று டைரக்டர் சென்னைக்கே வந்துவிட்டார். நான் அப்போது 8-ம் வகுப்பு மாணவி.

    புத்தக பையுடன் வீடு திரும்பியபோது முன்னறையில் அப்பா, அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

    நான் உள்ளே நுழைந்ததும் என்னை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். 'அடடே... மீனா பாப்பா வா...' என்றவர்கள் அவர்கள் எதிர்பார்த்தது போலவே நான் வளர்ந்து இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த வயதில் பருவத்தை விட கொஞ்சம் ஜாஸ்தியாகவே என் உருவம் இருக்கும்.

    என்னை பார்த்ததும் இவர் தான் கதாநாயகி என்று முடிவே செய்துவிட்டார்கள். கதா நாயகியாக நடிக்கட்டுமே என்று தங்கள் விருப்பத்தை அம்மாவிடம் கூறினார்கள்.

    அம்மா படிப்பு என்ன ஆகுமோ என்று தயங்கினார்கள். அம்மா மட்டுமல்ல எனக்கும், பள்ளிக்கூடம் போக முடியுமா? முடியாதா? என்ற தயக்கம்.

    ஆனாலும் நாயகி பாத்திரத்தில் நடிக்க ஒத்துக்கொண்டோம். அவர்களும் போட்டோ செக்சனுக்கு வரச்சொல்லிவிட்டு விடை பெற்று கிளம்பினார்கள்.

    பாவாடை-சட்டையில் ஓடிக்கொண்டிருந்த நான் தாவணி கட்டினேன். தாவணி போட்டுக் கொண்டு நிலைக்கண்ணாடி முன்பு போய் நின்று என்னை நானே பார்த்து பிரேமித்தேன்.

    ஏய்... மீனா நீயா இது? என்று மனதுக்குள் கேட்டதும் என்னை அறியாமலே மனதுக்குள் ஒரு விதமான குறு குறுப்பு முகமும் சிவந்தது.

    ஓ. இது தான் நாணமோ... என்று சிரிப்பு வந்தது! அந்த சிரிப்பிலும் அழகாக இருப்பதாவது நானே கர்வப்பட்டு கொண்டேன். நம்மை பார்த்து நாமே கர்வப்படுவதில் தப்பில்லை தானே?

    அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கியது. நவயுகம் படத்தில் ஹீரோ ராஜேந்திர பிரசாத். ஓங்கோல் பகுதியில் படப்பிடிப்பு.

    தாவணி கட்டிக் கொண்டை போட்டு கேமரா முன்பு போய் நின்றதை நினைத்ததும் ஆச்சரியமாக இருந்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்த வரை பெரிய அளவில் டயலாக் எதுவும் கிடையாது. ஒன்றிரண்டு வார்த்தைகள் அல்லது ஒன்றிரண்டு வரிகள்தான் இருக்கும். ஆனால் கதாநாயகி ஆனதும் டயலாக் பெரியதாக இருந்தது.

    அதை கூட பள்ளிக்கூடத்தில் பாடத்தை படித்து மனப்பாடம் செய்தது போல் திரும்ப திரும்ப படித்து மனப்பாடம் செய்து கொண்டேன்.

    ஒரே ஒரு விஷயம்தான் என்னால் முடியவில்லை. அதுதான் 'ரொமான்ஸ்' பண்ணுவது! 13 வயது என்பது 'ரொமான்ஸ்' பண்ண தெரிந்த வயதா?

    அழுவேன், சிரிப்பேன், அதெல்லாம் ஓ.கே. ஆனால் ரொமான்ஸ்தான் வரவேயில்லை. ஒரு மாதிரியாக இருக்கும். காதலிக்கும் போது முக பாவனை இப்படி இருக்க வேண்டும். டயலாக் பேசும் போது காதலை உடல் அசைவே வெளிப்படுத்துவது போல் இருக்க வேண்டும் என்பார்கள். எனக்கு அது மட்டும் வரவே இல்லை.

    ராஜேந்திர பிரசாத் திட்டுவார். ஏம்மா... காதலனை கட்டிப்பிடிக்கும் போது ஒரு 'கிக்...' தெரியவேணாம்? என்று கடுகடுப்பாார். அப்புறம் அவரே என்னருகில் வந்து சொல்லித் தருவார்.

    இப்போது செல்போன், இணைய தளம் எல்லாம் வந்துவிட்டது. பள்ளி பருவத்திலேயே காதலையும் சேர்த்தே படிக்கிறார்கள்.

    அந்த காலகட்டத்தில் வெட்கப்படுவது எப்படி? ரொமான்ஸ் பண்ணுவது எப்படி? என்பதையே கற்க ஆசைப்பட்டேன்.

    சொன்னால் ஆச்சரியமாகத்தான் தெரியும். உண்மையாகவே அதற்காகவே சில படங்களை பார்க்க சென்றேன்.

    அந்த படங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் காதல் காட்சிகளில் எப்படி நடிக்கிறார்கள். எப்படி ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என்று பார்ப்பேன். அப்படித்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து கற்றுக் கொண்டேன்.

    காதல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின் எப்படி நடிக்கிறார்கள்? டூயட் காட்சிகளில் எப்படி நடிக்கிறார்கள்? என்பதை உன்னிப்பாக பார்த்து பார்த்துதான் கற்றேன்.

    அதிலும் முதல் படத்திலேயே எனக்கு கனமான பாத்திரம். நடுரோட்டில் வில்லன் அடியாட்களுடன் துரத்தி வந்து தாலி கட்டுவார். அப்படி அவர்களிடம் சிக்கி தவிக்கும் போது நான் எப்படியெல்லாம் நடிக்கணும்...? சிரமப்பட்டு தான் நடித்தேன். அதே நேரம் டைரக்டர் சொல்லித் தந்ததை அப்படியே நடித்து விடுவேன்.

    அப்படித்தான் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்தேன். அந்த மறக்க முடியாத அனு பவங்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்)

    • குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு சென்னை வந்தபோது கூ இரண்டு அணியினரும் தனித்தனியே சந்தித்தனர்.
    • இரு தலைவர்களுக்கு இடையேயான சண்டையை ஒரு கட்சியின் உள்விவகாரம் என்று நீதிமன்றம் கடந்து போகமுடியாது.

    தான் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ள காரணத்தால் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவது "வினையூக்கி". இந்த வேதியியல் தத்துவம் வாக்கு அரசியலுக்குக் கனகச்சிதம்! அ.தி.மு.க. பாலி டிக்சில் பாரதியஜனதா தான் வினையூக்கி. அது ஏற்படுத்திய ரசாயன மாற்றங்களால் புரட்டிப் போடப்பட்டது - ஓ.பி.எஸ்.சின் அரசியல் வாழ்வு.

    கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் (2021) அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை எழுந்தது. "இலக்கை நிர்ணயித்து விட்டுக் களத்தில் இறங்குவோம். எடப்பாடியாரை முன்நிறுத்திக் களம் அமைப்போம்!" என்று அமைச்சர்களே குரல் கொடுத்ததும், அன்றைய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தன்மானம் "தர்மயுத்தபாணியில்" விழித்துக் கொண்டது. தேனி மாவட்டத்தில் "ஓ.பி.எஸ்" ஆர்மி ஒன்று புதிதாக முளைத்தது. "மக்கள் முதல்வர்" "நிரந்தர முதல்வர்" என்று போஸ்டர்கள் ஒட்டிப் பரபரப்பைக் கிளப்பியது.

    2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னை ராயப்பேட்டை அ. தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொடி ஏற்றுவதைக் கூட மறந்து விட்டு கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். வீட்டுக்கும் ஈ.பி.எஸ். இல்லத்துக்குமாக அமைச்சர் பட்டாளம் அலைந்து திரிந்தது. எல்லாவற்றையும் நேரலையில் ஒளிபரப்பி ஊடகங்கள் பரபரப்பைக் கூட்டின. இறுதியில் சமாதானம் ஏற்பாடாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியானது.

    அதாகப்பட்டது, மகாஜனங்களே, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். யுத்தம் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. சிலநேரங்களில் அமைதி யானது போலத் தோன்றினாலும் திரை யரங்குகளில் விடப்படும் "இடைவேளை" போலத்தான்! கடலை, முறுக்கு, கலர் சாப்பிட்டுக் கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்றிக்கொண்டு மீண்டும் இரு தரப்பினரும் முஷ்டி முறுக்கலுக்குத் தயாராகி விடுவார்கள்.

    அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து இருந்த காலம். அன்றைய நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் ஓ.பி.எஸ். அணி இணைப்பு பற்றியும், முதல்-அமைச்சர் யார் என்றும் செய்தியாளர்கள் கேட்டனர். முதல்வர் பதவி காலி இல்லை என்று கிண்டலடித்தார் ஜெயக்குமார், வேண்டுமென்றால் தனது நிதியமைச்சர் பதவியை விட்டுத் தருவதாகக் கூறினார். ஓ.பி.எஸ். கடுப்பானார். ஜெயலலிதாவே இரண்டு முறை தன்னை முதல்வர் ஆக்கியதாகவும், ஜெயக்குமார் ஒன்றும் நிதியமைச்சர் பதவியை விட்டுத்தர வேண்டியது இல்லை என்றும் பதிலடி தந்தார். இறுதியில் நிதித்துறை பொறுப்புடன் கூடிய துணை முதல்வரானார்.

    இணைப்புக்கு முன் நடந்த இரு கட்டப் பேச்சு வார்த்தைகளில், "கட்சிக்கு ஓ.பி.எஸ்., ஆட்சிக்கு எடப்பாடி!" என்று தான் ஒத்துக் கொள்ளப்பட்டிருந்தது. நாளடைவில் ஈ.பி.எஸ்.சின் ஆட்சி அதிகாரத்திற்கு அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அடி பணிந்தார்கள். அவர்கள் விரும்பியதைச் செய்து கொடுத்தார் சி.எம். எடப்பாடி. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி கை நழுவியது. நாளாவட்டத்தில் ஓ.பி.எஸ். தனிமரமானார்.

    ஓ.பி.எஸ்.,-ஈ.பி.எஸ். காம்போ என்.டி.ஏ. கூட்டணிக்குப் பலம் சேர்க்கும் என்பதே 2017-18 காலகட்டத்தில் பா.ஜனதா தலைமையின் "வினையூக்கி கணிப்பு". அதற்காகவே அது இறங்கி வந்தது. எதிரும் புதிருமாகச் செயல்பட்டதால் 2019 ரிசல்ட் "டபக்"! 39-க்கு 1. அதுவும் ஓ.பி.எஸ். மகன் நின்ற தேனி மட்டும்!

    அதன் பின்னரும் "கட்சியில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமை உணர்வோடு இணைந்து செயல்படுகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. கட்சி மற்றும் அரசு என்ற தேரை இழுத்துச் செல்கிறோம்!" என்று ஜெயக்குமார் அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் தெருவில் வசிப்பவர்களே அதை நம்பவில்லை.

    மீண்டும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை மந்திரம் உபதேசிக்கப்பட்டது. ஆனால் பலன் இல்லை. தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் ஒற்றுமைக் குரல் ஒலித்திருக்க வேண்டிய அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கியது. 2022 ஜூன் 23-ல் கூடிய முதல் பானிபட் யுத்தமான அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்படாமல் கலைந்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி இரண்டாம் பானிபட் யுத்தம் நடந்தது. அந்தப் பொதுக்குழுவில் ஈ.பி.எஸ். இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆனார். "துரோகி ஓ.பி.எஸ்." மற்றும் அவரைச் சேர்ந்த அனைவருக்கும் கல்தா தரப்பட்டது.

    இந்த முறை பாரதிய ஜனதா அடக்கியே வாசித்தது. வெளிப்படையான சமாதான முயற்சிகளில் அது ஈடுபடவில்லை. பிரதமர் வருகையின்போது கூட ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் சம முக்கியத்துவம் தரப்பட்டது. குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு சென்னை வந்தபோது கூட இரண்டு அணியினரும் தனித்தனியே சந்தித்தனர். ஒற்றுமை மந்திரம் உபதேசிக்கப்பட்டது. ஆனால் பலன் கொடுக்கவில்லை.

    கட்சி அரசியலில் நீதிமன்றம் நிரந்தரத் தீர்வு தராது. தலைவர்கள் முறையிட வேண்டிய இடம் மக்கள் மன்றம். உட்கட்சிப் பிரச்சினைகளைக் கோர்ட்டு தீர்த்து வைத்ததாகச் சரித்திரம் இல்லை. ஓட்டு சதவீதம் தான் ஒரே தீர்வு.

    கட்சியின் விதிகளைச் சுட்டிக் காட்டி சிவில் உரிமையியல் வழக்குகளைத் தொடர்வது தவறு இல்லை. ஆனால் அசல் வழக்கு முடிய கால தாமதம் ஆகும். அப்புறமும் மேல்முறையீடுகள் இழுத்தடிக்கும். எனவே இடைக்கால நிவாரணம் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

    சாதாரண சிவில் வழக்குகளில் இது சரிதான். ஆனால் கட்சியின் நிர்வாகம் சம்பந்தமான உரிமையியல் வழக்குகளில் ஈடு செய்ய முடியாத இழப்பு மற்றும் இடைக்கால நிவாரணத்திற்குப் பின்பும் வாதி, பிரதிவாதி ஆகிய இருவருக்கும் இடையே சமநிலை நிலவுதல் ஆகிய இரண்டையும் நீதிமன்றம் முக்கியமாகப் பார்க்கும்.

    ஓ.பி.எஸ். கேட்கிற இடைக்கால நிவாரணம் தரப்பட்டால் அசல் வழக்கே முடிந்த மாதிரி. மேலும் வாதிக்கு ஏற்படும் இழப்பை விடக் கட்சிக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகமாக இருக்கும். இருதரப்புக்கும் இடையிலான சமநிலையும் பாதிக்கப்படும்.

    சிவில் தாவாக்களில் "ஆவணப் பிழை வாதம்" மற்றும் "இல்லை என்ற கோட்பாட்டு வாதம்" போன்ற பாதுகாப்பு வளையங்களை வழக்கறிஞர்கள் உருவாக்குவார்கள். நடந்து முடிந்த ஒன்றை "இல்லை" என்று மெய்ப்பிக்கும் முயற்சி அது. சாதாரண சிவில் வழக்குகளில் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு கட்சியின் பொதுக்குழு சம்பந்தப்பட்ட தாவாவில் இது சாத்தியமா?

    பொதுக்குழு என்பது மூன்று வகையான சட்டக் கூறுகளால் ஆனது. எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைத்தல், கட்சியின் கொள்கை மற்றும் செயல் திட்டங்களை வரையறை செய்தல் மற்றும் முன் கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணக்கம் தெரிவித்தல் ஆகியவையே அவை.

    நடந்து முடிந்த அ.தி.மு.க. பொதுக்குழுவை இல்லாததாக்க முடியாது. கட்சியின் நிர்வாகம் அதனால் ஸ்தம்பித்து விடும். எனவே ஓ.பி.எஸ். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால நிவாரண மனுக்கள் "அணுகுமுறைப் பிழை" என்ற கோட்பாட்டில் அடிபட்டுப் போய்விடு கின்றன.

    மக்களாட்சியில் கட்சி அமைப்பு என்பது தேர்தல் செயல்முறையின் நீட்சி. எனவே இரு தலைவர்களுக்கு இடையேயான சண்டையை ஒரு கட்சியின் உள்விவகாரம் என்று நீதிமன்றம் கடந்து போகமுடியாது.

    எனவே தான் ஓ.பி.எஸ். தொடரும் இடைக்கால நிவாரண மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டும் தன் ஆணையில் இதை உறுதி செய்திருக்கிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.எஸ். போட்ட இடைக்கால மனுக்களைத் தொடர் தள்ளுபடி செய்கிறது. உச்சநீதிமன்றம் போனாலும் இதே கதி தான்.

    துவக்கத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் தனக்குரிய அதிகாரம் அனைத்தையும் இழந்தார். ஈ.பி.எஸ். எடுத்த எல்லா முடிவுகளுக்கும் தலையாட்டி பொம்மையாக இருந்தார். நீட்டிய இடங்களில் எல்லாம் கையொப்பம் போட்டார். அ.தி.மு.க.வை விட்டு அவர் நீக்கிய லிஸ்ட் படா பஹூத். இறுதியில் ஓ.பி.எஸ்.சையே நீக்கி மரண பங்கம் செய்தார்கள். இனி "அம்மாவால் அடை யாளம் காட்டப்பட்ட" முன்னாள் முதல்வருக்கு என்ன தான் வழி?

    1. தனிக்கட்சி தொடங்குதல்.

    2. ஈ.பி.எஸ். தலைமையை ஏற்று மீண்டும் தாய்க்கட்சிக்கே திரும்புதல்.

    3. டி.டி.வி. தினகரனோடு இணைந்து மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி ஈ.பி.எஸ். வேட்பாளர்களைத் தோற்கடித்தல்.

    எதைத் தேர்ந்தெடுப்பார் ஓ.பி.எஸ்? தனிக்கட்சி தொடங்கினால் அ.தி.மு.க. மீதான உரிமையை இழப்பார். செப்டம்பர் 3 காஞ்சிபுரத்தில் தொடங்கிப் புரட்சிப் பயணம் மேற்கொள்ளப்போ வதாக ஓ.பி.எஸ். அறி வித்துவிட்டார். டி.டி.வி. தினகர னோடு இணைந்து மக்கள வைத் தேர்தலில் வேட்பாளர் களை நிறுத்தி அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்க ளைத் தோற்கடித்தல் சாத்தியமா? "வினையூக்கி" பா.ஜனதா மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு அதற்கு "ஸ்பீட் பிரேக்கர்" போடுமே!

    அரசியலும் அன்றாட வாழ்க்கையும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. முடிவு களில் ஏற்படும் காலதாமதம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தும். சசிகலா ஆதரவைப் பெற அவர் எடுத்த முயற்சி வெற்றியில் முடிந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஈ.பி.எஸ். தன் பேச்சில் "திருமதி சசிகலா அம்மா" என்று மென்மை காட்டுகிறார். அண்டர்கிரவுண்ட் அரசியலும் முக்கியம் அமைச்சரே!

    ஜெயலலிதா "உதிர்ந்த ரோமங்கள்" என்று நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூத்த தலைவர்களை 1990-ல் வர்ணித்தார். நாவலர் அரசியல் "ஆங்ரி பேர்ட்" ஆனார். பின்னர் ஏற்பட்ட தேர்தல் தோல்வி காரணமாக ஜெயலலிதா தலைமையை ஏற்று அவர் அவைத்தலைவராக அ.தி.மு.க.வில் தொடர்ந்தார். கோபித்துக் கொண்டு போன மூத்த தலைவர் எஸ்.டி.எஸ். மீண்டும் எம்.ஜி.ஆரிடம் திரும்பியது வரலாறு.

    தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தால் அதைக்காரணமாகச் சொல்லி ஓ.பி.எஸ். பக்கம் இருக்கும் முக்கியஸ்தர்கள் தாய்க்கட்சிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய இருவரையும் வினையூக்கியான பா.ஜனதா தான் சேர்த்து வைத்தது. எனவே பழைய சரித்திரம் மீண்டும் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அதற்கு முன்னதாக ஈ.பி.எஸ்.சுக்குக் கொடநாடு உட்படப் பல பூச்சாண்டிகள்! 2012ல் முடித்துவைக்கப்பட்ட ஓ.பி.எஸ். சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இப்போது மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது. "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி - இப்படிக்கு ஓ.பி.எஸ்.!" என்று கதறாத குறை!

    தலைவர்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் காலச் சூழல் ஒத்துழைக்கவேண்டும். அரசியல் வெற்றிக்கு இதுவே அடிப்படை! களப்பணி, மக்கள் தொடர்பு மற்றும் தொடர் உரையாடல் மூலமே அது சாத்தியம். ஆனால் இப்போது பணத்தை வாரி இறைத்து அழைத்து வரப்படும் கூட்டம் ஏற்படுத்துகிற பிம்பச் சிறைக்குள் சிக்கி இருக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரமண்டலத்தில் லேண்டரை இறக்கிச் சரித்திர சாதனை படைத்து விட்டார்கள். அதில் இருந்து ரோவரும் இறங்கி ஆய்வு நடத்தி வருகிறது. ஆனால் ராமச்சந்திர மண்டலமான அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சால் லேண்டரை இறக்க முடியவில்லை. நீதிமன்றத்தின் நெடிய தாழ்வாரங்களில் எத்தனை முறை முயன்றும் கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தன. லேண்டரே "கிராஷ்" ஆன பின்னர் ரோவரைப் பற்றிக் கனவு கூடக் காண முடியாது அல்லவா?.

    • நான்கு கரங்களில் `சங்கு சக்கரம் கதை தாமரை` என ஒவ்வொன்றைத் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் குருவாயூரப்பன்.
    • ராமன் காட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவனது முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதையும் எண்ணிப் பார்த்து வியக்கிறாள்.

    லட்சுமி தேவி செந்தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். அலர்மேல் மங்கை என அவளைப் போற்றுகிறோம்.

    பத்மம் என்றால் தாமரை. பதுமத்தில் வீற்றிருப்பதால் அவள் பத்மாவதி எனப் பெயர்பெறுகிறாள்.

    திருப்பதி வெங்கடாசலபதியின் கரம்பிடித்த பெருமை பதுமத்தில் வீற்றிருக்கும் பத்மாவதித் தாயாருக்குரியது. தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியைத் தன் இதயத் தாமரையில் ஏற்றுக்கொண்ட பெருமை வெங்கடாசலபதிக்கு உரியது.

    சரஸ்வதி தேவி வீற்றிருப்பது வெண்தாமரை மலரில்.

    `வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்' என அவளைப் போற்றுகிறார் மகாகவி பாரதியார். `வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்` என்றும் இன்னொரு பாடலில் கொண்டாடுகிறார்.

    `வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை

    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

    சரியாசனம் வைத்த தாய்.'

    என வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைவாணியைப் புகழ்ந்து வெண்பாப்பாடுகிறார் காளமேகம்.

    *திருமாலின் வயிற்று உந்தித் தாமரையில் தான் பிரம்மன் உதித்தார். மாபெரும் சமுத்திரத்தின் மேலே பூத்திருந்த தாமரை மலரில் தோன்றிய பிரமன், தான் யாரென்று தெரியாமல் மயங்கினார்.

    தான் வீற்றிருக்கும் இந்தத் தாமரை எங்கிருந்து தோன்றியது என்றறிய ஆவல் கொண்டு நான்கு திசைகளிலும் மாறி மாறிப் பார்க்கவே அவர் நான்கு முகங்களைப் பெற்று நான்முகன் ஆனார்.

    பெருங்கடலில் அந்த ஒரே ஒரு தாமரை மலரை மட்டும் கண்டு அதற்கு இருப்பிடமானதை எப்படிக் காண்பதெனச் சிந்திக்கத் தொடங்கினார்.

    இந்தத் தாமரைக்கு ஏதோ ஓர் உற்பத்தி ஸ்தானம் இருக்கத்தானே வேண்டும், அதை அறிவோம் என்றெண்ணித் தம் யோக பலத்தால் தாமரைத் தண்டின் வழியாகக் கீழே இறங்கினார்.

    எவ்வளவு தேடியும் தன்னைப் படைத்தது யாரென அறியாது திகைத்தார். பின்னர் தெளிவு பெறும் பொருட்டு, தான் உதித்த தாமரை மலரிலேயே அமர்ந்து பல யுக காலம் தவத்தில் ஈடுபட்டார். அந்தத் தவத்தின் பயனாக உட்கண்ணால் திருமாலைக் கண்டுகொண்டார்.

    அதன்பின் நேரிலும் திருமாலின் காட்சியைப் பெற்று அவரே தன்னைப் படைத்தவர் என அறிந்து வணங்கினார். பின்னர் திருமாலின் உத்தரவின் பேரில் படைப்புத் தொழிலைத் தொடங்கினார் பிரம்மன் என்கிறது புராணம்.

    சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வெளியிட, அதை வாயு சுமந்துசென்று சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தார். அந்த நெருப்பிலிருந்து, ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றினான் முருகன்.

    அந்த ஆறு குழந்தைகளையும் அன்போடு ஆரத் தழுவினாள் அன்னை பார்வதி. குழந்தைகள் ஒன்றிணைந்து ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்ட ஒரே குழந்தையாக உருமாறின என்கிறது கந்த புராணம்.

    முருகன் தாமரைச் செல்வன். தாமரையில் தோன்றிய அவன் திருவடிகளும் திருமுகம் திருக்கரங்களும் தாமரை போன்றவை. சங்க நூலான குறுந்தொகையில், பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்து, தாமரை போன்ற பாதங்களை உடைய முருகனைத் துதிக்கிறது.

    `தாமரை புரையும் காமர் சேவடி

    பவழத் தன்ன மேனித் திகழொளி

    குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்

    நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்

    சேவலங் கொடியோன் காப்ப

    ஏம வைகல் எய்தின்றால் உலகே!`

    *நல்லியக்கோடன் என்ற மன்னனைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை என்ற சங்க நூல் பேசுகிறது. முருக பக்தனான அவன் பகைவர்கள் தன் நாட்டைத் தாக்கியபோது தன் குடிமக்களைக் காக்குமாறு முருகப் பெருமானை உளமுருகி வேண்டிக் கொண்டு உறங்கப் போனான்.

    உறக்கத்தில் கனவில் வந்தார் கந்தக் கடவுள். தன் கோயில் குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பறித்து எதிரிகள் மேல் எறியுமாறு அறிவுறுத்தி மறைந்தார்.

    முருகன், தான் தோன்றக் காரணமாக இருந்த தாமரை மலர்களால் தன்னைக் காக்க விழைகிறான் என்பதைப் புரிந்துகொண்டது நல்லியக்கோடனின் பக்தி மனம்.

    மறுநாள் கண்விழித்ததும், திருக்குளத்தில் பூத்திருந்த தாமரை மலர்களைப் பறித்து, தன் நாட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த எதிரிகள் மேல் விட்டெறிந்தான். மன்னன் மலர்கொண்டு தாக்க முயல்வதைப் பார்த்து எதிரிகள் நகைத்தனர்.

    ஆனால் அடுத்த கணம் ஒவ்வொரு தாமரை மலரும் பல்லாயிரம் வேல்களாக மாறிப் பகைவர்களை அழிக்கத் தொடங்கின.

    பகைவர்கள் அஞ்சி ஓட, நல்லியக்கோடன் போரில் பெருவெற்றி பெற்றான் என்று எழுதுகிறார் சிறுபாணாற்றுப் படையை இயற்றிய புலவரான இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.

    குருவாயூரப்பன் திருக்கரத்தில் அழகிய தாமரை மலர் உண்டு. நான்கு கரங்களில் `சங்கு சக்கரம் கதை தாமரை` என ஒவ்வொன்றைத் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் குருவாயூரப்பன்.

    ராமாயணத்தில் தசரதர் ராமனை அழைத்து `உனக்கு முடிசூட்டு விழா!` என்றார். அப்போது மலர்ந்திருந்தது ராமன் முகம். பிறகு கைகேயி ராமனை அழைத்து `நீ கானகம் போக வேண்டும்` என்றாள். அந்த நேரத்திலும், அப்போதுதான் மலர்ந்த தாமரைப் பூவில் காணப்படும் மலர்ச்சியும் விஞ்சிய மலர்ச்சி ராமன் முகத்தில் தென்பட்டது என்கிறார் கம்பர்.

    `இப்பொழுது எம்மனோரால்

    இயம்புதற்கு எளிதே யாரும்

    செப்பருங் குணத்து ராமன்

    திருமுகச் செவ்வி நோக்கின்

    ஒப்பதே முன்பு பின்பு அவ்

    வாசகம் உணரக் கேட்ட

    அப்பொழுது அலர்ந்த செந்தா

    மரையினை வென்றதம்மா!'

    சுந்தர காண்டத்தில் தனிமையில் வாடும் சீதாதேவி, பழைய நினைவுகளில் ஆழ்கிறாள். அப்போது ராமன் காட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவனது முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதையும் எண்ணிப் பார்த்து வியக்கிறாள். அதை ஒரு பாடலில் விவரிக்கிறார் கம்பர்.

    அந்தப் பாடலில் ராமன் முகத்தை ஓவியத் தாமரையோடு ஒப்பிடுகிறார் கவிச்சக்கரவர்த்தி. உண்மைத் தாமரை காலையில் மலரும். மாலையில் வாடும். ஆனால் ராமன் முகம் எப்போதும் மலர்ந்திருக்கிறதே?

    எனவே அது உண்மைத் தாமரை மலர்போல் அல்ல, ஓவியத் தாமரை மலர்போல் உள்ளது என்கிறார். அத்தகைய வாடாத ராமனின் முக மலரை சீதாதேவி சுந்தர காண்டத்தில் தனிமையில் வாடும்போது நினைத்துக் கொள்கிறாள் என்கிறார்.

    `மெய்த்திருப் பதம் மேவென்ற போதினும்

    இத்திருத் துறந்து ஏகென்ற போதினும்

    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை

    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்!'

    கம்ப ராமாயணத்தில் இன்னோர் இடத்தில், வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை வர்ணிக்கும்போது குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களை விளக்குகளோடு ஒப்பிடுகிறார் கம்பர்.

    மயில்கள் ஆடுகின்றன. தாமரைப் பூக்கள் விளக்குகளைப் போல் பூத்துள்ளன. மேகங்கள் இடிஇடிப்பது, முழவு ஒலியெழுப்புவது போல் உள்ளது. குவளை மலர்கள் இக்காட்சியைக் கண்விழித்துப் பார்க்கின்றன. குளத்தில் எழும் அலைகள் திரைச் சீலைகள் போல் தோற்றமளிக்கின்றன. தேனாய்த் தித்திக்கும் மகர யாழின் ஒலிபோல் வண்டுகள் இனிமையாய் ரீங்கரிக்கின்றன. இவ்வாறு கோலாகலமாக மருத அரசி வீற்றிருக்கிறாளாம்.

    `தண்டலை மயில்க ளாடத்

    தாமரை விளக்கம் தாங்கக்

    கொண்டல்கள் முழவின் ஏங்கக்

    குவளை கண்விழித்து நோக்கத்

    தெண்டிரை எழினி காட்டத்

    தேம்பிழி மகர யாழின்

    வண்டுகள் இனிது பாட

    மருதம் வீற்றிருக்கு மாதோ!

    புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவில் தமயந்தியின் சுயம்வரம் பற்றிப் பேசும் ஓர் அழகிய வெண்பா வருகிறது.

    ஏராளமான மன்னர்கள் விழிமலர்ந்து சுயம்வர மண்டபத்தில் காத்திருக்கிறார்கள். மன்னர்களின் விழித் தாமரைகள் பூத்த பொய்கைபோல் காட்சிதரும் அந்த மண்டபத்தில் அன்னம்போல் நடந்து வந்தாள் தமயந்தி என்கிறது வெண்பா.

    `மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே

    பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்

    பொய்கைவாய்ப் போவதே போன்று.'

    இந்தப் பாடலில் ஒரு நயம் உள்ளது. மன்னர்கள் விழிமலர்ந்து அமர்ந்திருக்கும் மண்டபத்தைக் கமலப் பொய்கை என்று சொன்னாலே போதும். ஆனால் செங்கமலப் பொய்கை என்கிறார் கவிஞர். ஏன்? மன்னர்களின் விழிகள் தமயந்தியின் பேரழகைக் கண்டு அவளை அடைய வேண்டும் என்ற வேட்கையால் சிவந்து காணப்பட்டதாம். எனவே அந்த விழிகள் சிவந்த தாமரை மலராகிய செங்கமலப் பூவோடு ஒப்பிடப்பட்டன.

    விவேக சிந்தாமணி என்ற கவிதைத் தொகுப்பில் தாமரை பற்றி ஒரு பாடல் பேசுகிறது.

    தாமரை மலருடன் அதே குளத்தில் பிறந்து வளர்ந்த தவளை, தாமரையின் இனிய தேனைப் பற்றி அறியாது. ஆனால் எங்கோ கானகத்திலிருந்து பறந்துவரும் வண்டு, தாமரையில் உள்ள தேனை விரும்பி உண்ணும்.

    அருகில் இருந்தாலும் கற்றவர்களின் பெருமையை மூடர்கள் அறிய மாட்டார்கள். எங்கிருந்தோ வரும் கற்றவர்கள் அந்த நல்லவரைக் கண்டு களித்து உறவாடுவார்கள் என்கிறது அந்தப் பாடல்.

    `தண்டாமரையின் அருகிருந்தும்

    தண்தேன் உணரா மண்டூகம்

    வண்டோ கானத்திடை யிருந்து

    வந்தே கமல மதுவுண்ணும்

    பண்டே பழகி யிருந்தாலும்

    அறியார் புல்லோர் நல்லோரை

    கண்டே களித்தங் குறவாடித்

    தம்மில் கலப்பர் கற்றோரே!'

    இந்தியாவின் தேசிய மலர் என்ற பெருமை தாமரைக்குத்தான் உரியது. ராமகிருஷ்ண மடத்துச் சின்னத்தில் தாமரையும் அன்னமும் பாம்பும் உள்ளன. தாமரை ஜீவான்மாவையும் அன்னம் பரமான்மாவையும் குறிக்கும். பாம்பு குண்டலினி சக்தியின் குறியீடு என்று சொல்லப்படுகிறது.

    நம் ஆன்மிகப் பெருவெளியில் தாமரை மலர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனின் தாமரைத் திருவடிகளை நம் இதயத் தாமரையில் இருத்திக் கொண்டால் எந்தத் துன்பமும் நம்மை வாட்டாது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com 

    • ஒரு கட்டத்தில் காட்சிப்படி நல்லா நடிக்கிறாள் என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடிக்க முடிந்தது.
    • அப்போது மணிரத்னம் சார் டைரக்‌ஷனில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது.

    ஆ... அம்மா...

    என்று கதறி அழுத சத்தம் கேட்டு படப்பிடிப்பு தளத்தில் ஆங்காங்கே நின்றவர்கள் எல்லாம் என் அருகில் ஓடி வந்தார்கள்.

    'பாப்பா... என்னம்மா ஆச்சு?' என்று எல்லோரும் பதற்றத்துடன் கேட்டார்கள்.

    ஆனால் பதில் சொல்ல முடியாமல் நான் எனது இடது காதை பொத்தியபடி அழுது கொண்டிருந்தேன்.

    சிலர் என் கையை விலக்கி காதை பார்த்து என்னம்மா... ஏதாச்சும் கடித்துவிட்டதா? என்று கரிசனத்துடன் கேட்டார்கள்.

    இந்த களேபரத்துக்கு இடையே எனது அழுகை சத்தம் கேட்டு அம்மாவும் அங்கே ஓடி வந்தார்.

    அம்மாவை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதேன். அவர் என்னை வாஞ்சையுடன் தடவி என்னம்மா... என்ன ஆச்சு என்றதும் காதை பிடித்து காட்டினேன்.

    ரத்த சிவப்பாக சிவந்து போயிருந்த காதை பார்த்து அதிர்ச்சியில் 'என்னம்மா என்ன ஆச்சு...?' என்றார்.

    நான் பதில் சொல்லாமல் அழுது கொண்டே சற்று தூரத்தில் கைகாட்டினேன். அங்கு மூத்த கலைஞரான நடிகர் சந்திரமோகன் நின்று கொண்டிருந்தார்.

    அவருக்கு ஒரு பழக்கம். யாரை பார்த்தாலும் ஜாலியாக பின்புறமாக சென்று காதில் சுண்டுவார். பெரியவர்கள் என்றால் பரவாயில்லை. அதை தாங்கி கொள்வார்கள்.

    எனக்கு தாங்கும் வயதா? பச்சை குழந்தை நான். பிஞ்சு காது. அவர் சுண்டியதும் 'சுர்...சுர்' என்று வலித்தது. ரத்தமாக சிவந்து போனது.

    அதை பார்த்து அம்மாவும் அவரிடம் சண்டை போட்டார். யாரிடம் எப்படி விளையாடுவது என்று தெரிய வேண்டாமா? என்று கடிந்து கொண்டார்.

    அவரும் இவ்வளவு வலிக்கும் என்று நினைத்திருக்கமாட்டார். பழக்க தோஷத்தில் சுண்டிவிட்டார். அப்புறம் 'சாரி' கேட்டார்.

    தெலுங்கில் கே.விசுவநாத்தின் 'சிரிவெல்லா' என்ற படத்தில் பார்வையற்ற குழந்தையாக நடித்தேன்.

    பார்வை மட்டும்தான் தெரியாது. கண்கள் திறந்தேதான் இருக்கும். ஆனால் பார்வை தெரியாதது போல் நடப்பேன். டான்ஸ் ஆடுவேன். இப்போது அந்த படத்தை பார்க்கும் போதும் பரவாயில்லையே நல்லாத்தான் நடித்து இருக்கிறோம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டு கொள்வேன்.

    என்னை எப்போது எங்கு பார்த்தாலும் 'என்னடா... எப்படி இருக்கே?' என்று பாசத்தோடு பேசக் கூடியவர் விஜயகுமார் அங்கிள். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.

    அப்படிப்பட்டவர் என்னை அருகில் வராதே போ என்று விரட்டினால் எப்படி இருக்கும்? அதுவும் சினிமா காட்சிக்காகத் தான்.

    இருந்தாலும் அதை சினிமாதானே என்று எடுத்துக் கொள்ளும் மனநிலை அந்த வயதில் எனக்கு இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறியே.

    அதனால்தானோ என்னவோ அப்படி ஒரு சம்பவம் நடந்தது. 'உயிரே உனக்காக' என்ற படத்தில் விஜயகுமார் அங்கிள், மோகன்சார், நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.

    அந்த படத்தில் விஜயகுமார் அங்கிள் மகள் நதியாதான். அதில் சின்ன வயது நதியாவாக நான் நடித்தேன். மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. கதைப்படி அம்மா இறந்து போவார்.

    தனிமையில் நான் ஒரு நாள் இரவு என் அறையில் தூங்கும் போது வெளியே பயங்கர இடி-மின்னல். அதை பார்த்து பயந்து அலறுவேன். என் அறையில் இருந்து வெளியே வந்து பக்கத்து அறையில் தூங்கும் விஜயகுமார் அங்கிளை எழுப்பி 'டாடி... பயமாக இருக்கு டாடி... உங்களோடு படுத்துக்கிறேன்' என்பேன்.

    ஆனால் அவர் 'இங்கெல்லாம் வரக்கூடாது. போ... என்று பிடித்து தள்ளி விடுவார்...' நான் பயந்து அழுது கொண்டே செல்வேன்.

    எட்டு வயதில் காமிரா முன்பு நிற்க தொடங்கிய எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வயதிற்கே உரிய அனுபவம் அதிகரித்து வந்ததாகவே உணர்கிறேன்.

    குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் ஆரம்பத்தில் பலமுறை அப்படி நில், இப்படி நில் என்று டைரக்டர் சொல்லித் தருவார். கொஞ்சம் அனுபவம் வந்ததும் ஒருமுறை சொன்னதுமே அதை அப்படியே உள்வாங்கி செய்யும் அளவுக்கு வளர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    அதனால்தான் ஒரு கட்டத்தில் காட்சிப்படி நல்லா நடிக்கிறாள் என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடிக்க முடிந்தது.

    அதனால்தான் குழந்தை நட்சத்திரம் தேவை என்றதுமே மீனாவை பார்க்கலாமே என்று எல்லோரும் தேட தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வகையில் இதுவும் எனக்கு கடவுள் தந்த வரமே.

    அடுத்தடுத்து படங்கள்... அதனால் படிப்புதான் என்ன ஆகுமோ என்று அம்மா பயப்பட்டார். யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு 40-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டேன். அந்த காலகட்டத்தில் மணிரத்னம் சார் டைரக்ஷனில் நாகார்ஜூனா நடித்த படம் 'இதயத்தை திருடாதே'. இந்த படத்தில் 3 குழந்தைகள் கதாபாத்திரம் வரும். அதில் ஒரு குழந்தை பாத்திரத்தில் நடிக்க என்னை தேடி வந்தார்கள்.

    20 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் அப்போது எனக்கு பரீட்சை நேரம். எனவே படிப்பு கெட்டுப்போகும் என்று அந்த படத்தில் நடிக்கவில்லை. இதனால் அப்போது மணிரத்னம் சார் டைரக்ஷனில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியது.

    இருந்தாலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட வேண்டிய தாயிற்று. ஏனெனில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது.

    எனவே இதுவரை உங்கள் குழந்தை மீனா அடுத்த வாரம் முதல் கதாநாயகியாக உங்களை சந்திக்க வருகிறேன்.

    (தொடரும்)

    • செல்வ மகளாக, செல்ல மகளாக, அழகு தேவதையாக பிறந்த அக்குழந்தையையும் ‘சொரூபா’ என்றே அழைத்தனர்.
    • ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்ததும் இருவரும் விடுதலைப் போராட்டங்களில் பங்குபெற ஆரம்பித்தனர்.

    "நீ அரசியல்வாதியாக மாறியிருப்பதை உணர்ந்தேன். நீ பெண்ணாகப் பிறந்துவிட்டது அதற்குத் தடையாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம். தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக, ஆண்கள் சாதித்துள்ள செயல்களைப் போலவே, எத்தனையோ பெண்களும் தீவிரப் பங்கேற்று அரிய பெரிய சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர். ஒரு சிலர் ஆண்களை விட அதிகமாக சிறந்து விளங்குவதையும் காணலாம். ஆண்-பெண் என்கிற பேதம் ஒரு பெரிய தடை அல்ல. உள்ளத்தில் உறுதி கொண்டுவிட்ட ஒரு பெண்ணின் ஆதிக்கம் ஆணின் வலிமையை விட வலியதாக, பயன்கள் பல தருவதாக அமையும். ஆகவே, உனது முன்னேற்றத்துக்குத் தேவையான வாய்ப்புகள் உனக்காகக் காத்து நிற்கின்றன." –மோதிலால் நேரு

    தன் மகள்கள் கிருஷ்ணா மற்றும் விஜயலட்சுமி பண்டிட் இருவரும் நாட்டு விடுதலைப் போரில் தங்களை ஒப்படைத்து போராடிக் கொண்டிருந்தபோது சிறையில் இருந்தபடி மகள் கிருஷ்ணாவுக்கு மோதிலால் நேரு எழுதிய கடிதத்தின் வரிகள்தான் மேலே காண்பவை.

    செல்வ வளம் மிக்க அரண்மனை போன்ற வீட்டில் வழக்குரைஞரும், பெரும் செல்வந்தருமான தந்தை மோதிலால் நேருவுக்கு மகளாக பிறந்து வளர்ந்தாலும் நாட்டுப்பற்று மிகுதியாய் இருந்தவராகவும், தாய்நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் ஓங்கி ஒலித்த குரலாக, இருந்தது விஜயலட்சுமி பண்டிட்டின் குரல்.

    கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர அத்தனை வேலைக்காரர்கள் கொண்ட வீட்டில், அறுசுவை உணவு உண்டு, ஆடம்பர வாழ்வை வாழ்ந்து வந்த அப்பெண், தன் குடும்பத்தினரோடு நாட்டு விடுதலைக்காக போராடும் போது மூன்றுமுறை கைது செய்யப்பட்டு புழுக்கம் மிகுந்த சிறைகளில் மூன்று ஆண்டுகளை கழித்துள்ளார்.

    சிறைவாசம் துன்பம் மிகுந்ததாக இருந்தாலும் ஒரு பெண் அதனை இயல்பாக ஏற்றுக்கொள்வது என்பது, எப்படிப்பட்ட சூழலில் பிறந்து வளர்ந்தாலும், லட்சியத்தை நோக்கி நடைபோடும்போது துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்பதை பிற பெண்களுக்கும் உணர்த்துவதாக உள்ளது அல்லவா!

    விஜயலட்சுமியின் இளமைக்காலம்: ஆனந்த பவனம் என்னும் பெரும் மாளிகையில் ஒரு சிற்றரசர் போல் வாழும் அனைத்து வசதிகளையும் கொண்டவர் காஷ்மீரி பண்டிட் பிரிவைச் சேர்ந்த மோதிலால் நேரு. இயற்கையாகவே நேரு குடும்பத்தினர் ஆங்கிலேயர் போன்ற தோற்றமும், அவர்களைப் போன்றே மிடுக்குடனும் வாழ்ந்தவர்கள். பெயருக்கு ஏற்றார்போல், அழகும், இனிமையான குணமும் கொண்டவர் மோதிலால் நேருவின் மனைவி சொரூபராணி. இவர்களின் மூத்த பிள்ளைதான் நவ இந்தியாவின் சிற்பி என்று பின்னாட்களில் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு. ஜவஹர்லாலுக்கு பதினோரு வயதிருக்கும் போது அவரின் தாய் சொரூபராணி 1900, ஆகஸ்டு 18-ந் தேதியன்று அழகுச்சிலை போன்ற பெண்குழந்தையை பெற்றெடுத்தார். செல்வ மகளாக, செல்ல மகளாக, அழகு தேவதையாக பிறந்த அக்குழந்தையையும் 'சொரூபா' என்றே அழைத்தனர்.

    தன் பிள்ளை ஜவஹர் இங்கிலாந்தில் உயர்கல்வி பயிலவேண்டும் என்று எண்ணிய மோதிலால், 1905-ல் தன் மனைவி மற்றும் ஐந்து வயதான மகள் சொரூபாவுடன் இங்கிலாந்து சென்றார். அங்கே ஹாரோ பல்கலைக்கழகத்தில் ஜவஹர் சேர்க்கப்பட்டார். தன் மகளை கவனித்து வளர்க்கவும், கல்வி கற்பிக்கவும் தகுந்த ஆசிரியர் தேவை என்பதை உணர்ந்த மோதிலால் நேரு இங்கிலாந்தில் மிஸ் ஜேன் ஹூப்பர் எனும் பெண்மணியை சொரூபாவிற்கு ஆசிரியராக அமர்த்தினார்.

    இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி என்று ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு சொரூபாவின் ஆசிரியரான மிஸ் ஜேன் ஹூப்பருடன் இந்தியா திரும்பினர் மோதிலால் குடும்பத்தினர். மிகுந்த திறமையும், சிறந்த பயிற்சியும், கடமையில் கண்டிப்பும் கொண்ட தன் ஆசிரியரிடம் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றார் சொரூபா. மோதிலால் நேரு ஆனந்த பவனத்தில் நிறைய குதிரைகளை வளர்த்து வந்தார். தன் மகள்கள் சொரூபாவிற்கும், 1907-ல் பிறந்த அவளின் தங்கை கிருஷ்ணாவிற்கும் குதிரைகளை பரிசளித்து வந்தார்.

    திருமணம்: காந்தியின் வருகையி்ன்போது அவருடைய செயலாளர் மகாதேவ தேசாயும் உடன் வருவதுண்டு. ஒருமுறை தேசாய் சொரூபாவிடம் 'மாடர்ன் ரிவ்யூ' எனும் பத்திரிகையின் இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த கட்டுரையை வாசிக்கக் கூறினார். கட்டுரையைப் பற்றியும் அதன் ஆசிரியர் ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் பற்றியும் மிகவும் புகழ்ந்து பேசினார். ரஞ்சித் பண்டிட் அறிவாளி, மேதை, கல்கத்தாவில் பாரிஸ்டராக பணியாற்றி வருகிறார், இலக்கியவாதி என்பதையெல்லாம் எடுத்துக்கூறி அவரை சொரூபாவிற்கு அறிமுகமும் செய்துவைத்தார்.

    காந்தியின் விருப்பப்படி இந்த அறிமுகமும், அதன்பின்னர் இருவரின் மனமொத்து 1921, மே 10-ல் திருமணமும் நிகழ்ந்தது. காந்தியடிகள், அலி சகோதரர்கள் உள்பட பல தலைவர்கள் வந்திருந்தனர். திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய பெயரை 'விஜயலட்சுமி பண்டிட்' என்று மாற்றிக் கொண்டார் சொரூபா. இத்தம்பதிக்கு நயந்தாரா, சந்திரலேகா, ரீட்டா, என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.

    அரசியல் நுழைவும் போராட்டங்களும்: தன்னுடைய 16- வது வயதிலேயே அரசியல் போராட்டக் களத்தில் நுழைந்தவர் விஜயலட்சுமி. மோதிலால் நேருவின் அண்ணன் மருமகளும், 'ஸ்திரீ டர்பன்' எனும் இந்தி பத்திரிகையின் ஆசிரியரும், அனைத்திந்திய பெண்கள் கூட்டமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், சமூக சேவகியுமான ராமேஷ்வரி நேரு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு அரசியல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து அக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு நாட்டில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தார் விஜயலட்சுமி.

    தொடர்ந்து தன்னாட்சி இயக்கத்தில் இணைந்து போராட முன்வந்தார் விஜயலட்சுமி. ஆனால் அவரது வயதை கருத்தில் கொண்டு 'அன்னி பெசன்ட்' அம்மையார் தன்னார்வலராக மட்டும் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்

    திருமணத்திற்குப் பின்னர் ஆனந்த பவனத்திற்கே வந்துவிட்ட கணவர் ரஞ்சித் பண்டிட்டுடன் முதல் பத்தாண்டுகள் இரண்டு முறை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஜயலட்சுமி. ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்ததும் இருவரும் விடுதலைப் போராட்டங்களில் பங்குபெற ஆரம்பித்தனர்.

    விஜயலட்சுமி பண்டிட் அனைத்திந்திய பெண்கள் கூட்டமைப்பில் ராஜ்குமாரி அம்ரித்கவுருடன் இணைந்து செயல்படத்தொடங்கினார். "அரசியலும், சமூகநலனும் ஒன்றுக்கொன்று தனிச்சிறப்புடையவை. அதேநேரம் முரணானவை!" எனவே பெண்கள் கூட்டமைப்பின் குறிக்கோள்களை மாற்றவேண்டியதன் அவசியத்தை விஜயலட்சுமி எடுத்துரைத்தார்.

    காந்தியடிகளின் கொள்கைகள், போராட்டங்களின்பால் ஈர்ப்பு கொண்ட விஜயலட்சுமி, விடுதலைப் போரில் தன் பங்களிப்பை தீவிரப்படுத்த தொடங்கினார். நேரு குடும்பத்துப் பெண்களான கமலா நேருவும், கிருஷ்ணாவும் ராணுவ வீரர்கள் போல் உடை அணிந்து தொண்டர் பயிற்சி பெற்றனர். இது விஜயலட்சுமிக்கு மேலும் ஊக்கத்தைத் தந்தது.

    முதல் பெண் அமைச்சராக விஜயலட்சுமி பண்டிட்: 1936-ல் நடந்த தேர்தலில் லஷ்மணபுரி தொகுதியில் வெற்றிபெற்ற (லக்னோ) விஜயலட்சுமிபண்டிட் கோவிந்தவல்லபபந்த் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சராக பொறுப்பேற்று மிகத் திறம்பட பணியாற்றினார். இந்தியாவிலேயே முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.

    அயல்நாடுகளில் தூதுவராக பணியாற்றுதல்:

    இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு விஜயலட்சுமிபண்டிட் 1947-ல் சோவியத் ஒன்றியத்தின் தூதராக நியமிக்கப்பட்டு 1949 வரை பணியாற்றினார். பின்னர் 1949 முதல் 1951 வரை அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, 1955 முதல் 1961 வரை அயர்லாந்து மற்றும் 1956 முதல் 1961 வரை ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகுதல்: 1953-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவராக விஜயலட்சுமி பண்டிட் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது இந்தியர்களுக்கும், பெண்குலத்திற்கும் பெருமை சேர்ப்பதாக ஆனது. ஐ.நா. பொதுச்சபையின் எட்டாவது கூட்டத் தொடருக்கு அவர் தலைமை தாங்கினார். ஐ.நா. பொதுச் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட்தான்.

    நெருக்கடிநிலைக்கு எதிர்ப்பு: 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது தனது அண்ணன் நேருவின் மகளும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திக்கு எதிராக விஜயலட்சுமி பண்டிட் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்திரா காந்தியின் முடிவுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுதல்: இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவரான பக்ருதீன் அலி அகமதுவின் திடீர் மறைவைத் தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்கு விஜயலட்சுமி பண்டிட் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால் இறுதியில் நீலம் சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மறைவு: இந்திய அரசியலிலும், நாட்டு விடுதலையிலும், சமூக முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகித்த விஜயலட்சுமி பண்டிட் டிசம்பர் 1, 1990 அன்று டேராடூனில் காலமானார்.

    பெண்கள் மேம்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கும் பெண்களுக்கும் சிறந்த பாதையை உருவாக்கித் தந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • மெட்ராஸ் ராஜதானியின் மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவில் இருந்து கொய்து வரப்பட்ட மலர்கள் ராமேஸ்வரம் அம்மனுக்குச் சூட்டப்பட்ட குறிப்புகள் உள்ளன.

    நான் தனியார் நிறுவனத்தில் வேளாண் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் பகுதி எனது பணியிடங்களில் ஒன்று.

    கச்சத் தீவு பகுதிகளில் சங்கு எடுக்கும் உள் குத்தகை பெற்று இருந்தார் எனது முகவர். அவரது போட் மூலம் 1973ல் ஓரிரு முறை அங்கு சென்று வந்து இருக்கிறேன். ராமேஸ்வரம் பகுதிகளில் இருக்கும் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு.

    ஒரு நாட்டின் எல்லை என்பது நிலத்தின் முடிவா? சர்வதேசச் சட்டம் வகுத்துள்ள விதி வேறு!

    நில எல்லைக்குக் கீழ் கடலுக்கு அடியில் நீட்சி பெற்றுள்ள கண்டத் திட்டு வரை ஒரு நாட்டின் எல்லை ஆகும். இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் தான் மிகப்பெரிய கண்டத் திட்டைக் கொண்டுள்ளது.

    சேதுபதி அரச மரபு கி.பி.1605-ல் மதுரை நாயக்க மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டது. குத்துக்கல் தீவு, குருசடித் தீவு, ராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகியவையும் 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதிக்கு உரிமை யாக்கப்பட்டிருந்தன.

    தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது என்று மகாராணி விக்டோரியா தன் பிரகடனம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

    மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு ஆகிய மூன்றையும் மெட்ராஸ் பிரசி டென்சியின் ராமநாதபுரம் கலெக்டரிடம் கீழக்கரை அப்துல் காதர் "லீஸ்" பெற்றுள்ளார். 1913ல் மறு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. அதன்படி மெட்ராஸ் ராஜதானியின் மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

    முகம்மது என்பவர் 1947ல் கச்சத் தீவை மீண்டும் குத்தகைக்கு எடுத்துள்ளார். (ஆவண எண்: 278/1948 - ராமேஸ்வரம் பதிவாளர் அலுவலகம்). சுமார் 163 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் இருந்து 11 கடல் மைல் (20.4 கி. மீ) தூரத்தில் உள்ளது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து அது 18 கடல் மைல் (33.4 கி. மீ) தொலைவு.

    தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊரைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி மற்றும் ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத் தீவில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ல் சிறிய ஓலைக்குடிசையில் நிறுவப்பட்டது. அது 1939-ல் படிப்படியாகப் பூர்த்தியானது.

    ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் சிறப்புத் திருப்பலி, அந்தோணியார் தேர் பவனி என்று திருவிழா நடைபெற்று வந்தது. அந்தோணியார் மீனவர்களுக்குக் "கடல் அய்யனார்"...சமுத்திரத்தின் காவல் மற்றும் கருணை தெய்வம்.

    கச்சத்தீவில் இருந்து கொய்து வரப்பட்ட மலர்கள் ராமேஸ்வரம் அம்மனுக்குச் சூட்டப்பட்ட குறிப்புகள் உள்ளன. கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட பசுக்கள் கச்சத்தீவில் வளர்க்கப்பட்டு, பால் ஆலய அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களும் உள்ளன.

    விடுதலைக்குப் பிறகு, ராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம் (சர்வே எண் 1250- ஜி ஓ எண் 2009: 11.08.1949) ஆனது கச்சத்தீவு.

    இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கண்டத்திட்டு எல்லைகளுக்குள் கச்சத்தீவு அமைந்துள்ளது. அதைச் சுட்டிக்காட்டி அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீலங்கா 70 களுக்குப் பிறகு கச்சத்தீவின் மீது உரிமை கோரத் துவங்கியது. பண்டாரநாயகா அங்கு பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இப்பிரச்சினை கூர்மை பெற்றது.

    அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வர். கச்சத்தீவு உரிமை குறித்த ஆதாரங்களை திரட்டச் சட்டப் பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி என்பவரிடம் கூறினார். அது குறித்த அறிக்கை 1973-ல் வெளி யிடப்பட்டது. பின்னாட்களில் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியுடன் எனக்கு நல்ல பரிச்சயம்!

    எல்லா ஆதாரங்களையும் வைத்து மத்திய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதற்குப் பிரதமர் அலுவலகம் 8.10.1973 அன்று ஒரு பதிலும் அனுப்பி இருக்கிறது. "கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் தேடப்பட்டு வருவதாக" அதில் கூறப்பட்டு இருந்தது.

    கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த அன்றைய வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல் சிங் இலங்கை போகத்திட்டமிட்டார். முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று அவரைச் சந்தித்து "கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தம்!" என்பதற்கான ஆவணங்களை வழங்கினார்.

    இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் மத நம்பிக்கைகள் இருந்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? இந்தியாவிற்கு 1974-ல் செய்த உதவிக்கு இலங்கை கேட்ட கைமாறு அது.

    பாகிஸ்தான் போருக்குப் பின் (1971) இந்திராகாந்தி அரசு 18.5.1974 அன்று பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நடத்தி, உலக நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொண்டது. "சிரிக்கும் புத்தர்" என்று அதற்குப் பெயரிட்டு அது அமைதிக்கான சோதனை என்று கூறினார் இந்திரா.

    உடனே பாகிஸ்தான் ஐ.நா.சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கை இந்தியாவுக்கு அளித்த ஆதரவால் அது தோல்வி அடைந்தது. பிரதி உபகாரமாக இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவைக் கேட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டுப் பிரதமர்களும் 28.06.1974ல் கையெழுத்திட்டனர்.

    கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி நாடாளுமன்றத்தில் 23.07.1974-ல் விவாதம் நடைபெற்றது. தி.மு.க. கூட்டணியில் 1971, தேர்தலில் வெற்றி பெற்ற பி.கே. மூக்கையாத் தேவர் (அன்றைய ராமநாதபுரம் எம்.பி.) பலத்த கண்டனம் எழுப்பினார். அப்போது அவரை ஆதரித்துப் பேசியது அன்றைய குவாலியர் எம்.பி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய். ராமாயணத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட இடம் கச்சத் தீவு என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு

    அடுத்த ஆண்டில் எமர்ஜென்சி வந்தது. 1977-ல் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டார். இங்கு எம்.ஜி.ஆர். ஆட்சி. பின்னர் 80-களில் ஈழத் தமிழர் பிரச்சினை, 1991-ல் ராஜீவ் கொலை என்று தமிழக அரசியலில் பல மாற்றங்கள்! வரலாற்றின் இருட்டுப் பக்கங்களுக்குத் தள்ளப்பட்டது கச்சத்தீவு.

    ஜெயலலிதா 1991-ல் தமிழக முதல்வரானார். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையின்போது கச்சத் தீவை மீட்பது பற்றிக் குரல் கொடுத்தார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்று கோரினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆகஸ்ட் 2008-ல் உச்ச நீதீமன்றத்தில் கச்சத்தீவு குறித்த பொது நல வழக்கைத் தொடர்ந்தார். 2011-ல் கச்சத்தீவு மீட்பு பற்றிய தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார்.

    நாட்டுப் பிரிவினையின்போது மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த பெருபாரி எனும் கிராமம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் எல்லைப் பிரிப்பு ஆவணங்களில் அது குறிப்பிடப்படவில்லை. எனவே பாகிஸ்தான் தன் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

    பின்னர் 1958-ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி பெருபாரி கிராமம் பாகிஸ்தான் வசம் சென்றது. பசும்பொன் தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள் இதை எதிர்த்தனர். மக்களவையிலும் பேசியிருக்கின்றனர். அப்போது பசும்பொன் தேவர் வைத்த தீர்வு என்பது அதற்கு ஒரு மதிப்புப் போட்டு அதை அந்த அரசுக்கு வழங்கி விட்டு பெருபாரியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது.

    மேற்கு வங்க அரசின் இசைவின்றி மாநிலத்தில் உள்ள பெருபாரிப் பகுதியைப் பாகிஸ்தானுக்கு வழங்கியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 3 (சி)படி ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றி யமைப்பதற்கு மட்டுமே அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.. இந்திய நாட்டின் பரப்பைக் குறைக்க அதிகாரம் இல்லை என்று 14.3.1960-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (AIR 1960 SC 845, 1960 3 SCR 250)

    எனவே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து பெருபாரி பகுதியைப் பாகிஸ்தானுக்கு வழங்கியதைச் சட்டப்பூர்வ மாக்கியது மத்திய அரசு. அதுவே 9-வது இந்திய அரசி யலமைப்புச் திருத்தத் சட்டம், 1960. இனி இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் வேண்டும் என்று அப்போது உச்ச நீதி மன்றம் கருத்துக் கூறியது.

    வங்கதேச எல்லையோரத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை 2015-ல் இந்தியாவிற்கும், அதே போல் இந்தியாவின் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநில எல்லைகளில் இஸ்லா மியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரா மங்களை வங்கதே சத்திற்கும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ள வேண்டிய சர்ச்சை எழுந்தது. அப்போது மோடி பிரதமர். பின்னர் அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம், 2015கீழ் இந்திய நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தில் இது போன்ற எந்த ஏற்பாடும் நடக்கவில்லை.

    இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் 11.3.2017-ல் பேசியபோது தி.மு.க.வின் அன்றைய செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு பற்றிப் பேசியிருக்கிறார். முதல்வரானபின் 2022-ல் பிரதமர் மோடியின் சென்னைக் கூட்டத்தில் கச்சத்தீவு மீட்பு பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்:

    "தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்துத் தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதைப் பிரதமருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்."

    உடனே அரசியல் சர்ச்சை எழுந்தது. கச்சத் தீவைத் தாரை வார்த்ததே தி.மு.க.வும் அதன் அன்றைய முதல்வர் கலைஞரும் தான் என்று செய்தியாளர் சந்திப்பில் தாக்கினார், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை. அதற்குக் காரசாரமாகப் பதில் அளித்தது தி.மு.க.

    இப்போது இலங்கை இந்தியாவின் உதவியை நாடித் தவம் கிடக்கிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மாவட்ட மீனவர் நலன்களைப் பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும் இதுவே சரியான தருணம்! குறைந்த பட்சம் நீண்ட காலக் குத்தகைக்காவது கச்சத்தீவை நம்மால் பெற முடியும்.

    எதிர்காலத்தில் சீனா கச்சத்தீவில் கடற்படைத் தளம் அமைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கும், தமிழக மீனவர் நலன்களுக்கு நிரந்தரக் கேடாகவும் மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது. எனவே இப்போதே இப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

    அதை விடுத்துக் கச்சத் தீவைத் தாரை வார்த்தது யார் என்று விவாதிப்பது லாவணி அரசியல். கச்சத்தீவின் கடல் அய்யனார் தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்!

    விடிவெள்ளி நம்ம வெளக்கு … ஐலசா

    விரி கடலே பள்ளிக்கூடம் … ஐலசா

    அடிக்கும் அல நம்ம தோழன் … ஐலசா

    கருமை மேகம் நமது குடை … ஐலசா

    கச்சத் தீவு நமது பூமி.. ஐலசா! அய்யனாரு

    மனசு வச்சா ஐலசா.. வெள்ளி மீனு தங்க மீனு

    அள்ளி வரும் ஐலசா..

    ( நாட்டுப்புறப் பாடல்)'

    • பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும் போது அதில் உள்ள பித்த உப்புகள் அதன் அடியில் படியும்.
    • பித்தப்பையில் கல் இருக்கும் போது பித்த நீர் சரியாக செல்லாமல் உணவு விரைவில் செரிமானம் ஆகாது.

    சிறுநீரக கல் போன்று பித்தப்பை கல் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். உணவு சாப்பிட்ட பிறகு வயிறு வலி, மஞ்சள் காமாலை பிரச்சினை என பல உபாதைகளை உண்டாக்கும் பித்தப்பை கல் பிரச்சினையை எளிதில் குணப்படுத்தி விடலாம். பித்தப்பை கல் எப்படி வருகிறது, அதனால் என்ன பாதிப்புகள், அதனை குணப்படுத்துவது எப்படி? என்பது பற்றி இன்று பார்ப்போம்.

    60 வயது பெண்மணி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கடுமையான வயிற்று வலி என்று வருகிறார். வாயுத்தொல்லை மாதிரி இருக்கிறது, சாப்பிட்டதும் வாந்தி வருகிறது. வயிறு கடுமையாக வலிக்கிறது என்கிறார். இந்த வலி 2 நாளாக இருக்கிறது. வாயுத்தொல்லை 15 நாட்களுக்கு மேலாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் வயிறு உப்புசம் போல் இருக்கிறது என அடுக்குகிறார்.

    பித்தப்பை கல் பாதிப்பு இருந்தால் இதுபோன்ற அறிகுறிகள் தென்படும். பித்தப்பை கல் என்பது சாப்பிடும் உணவில் இருந்து செல்வது கிடையாது. இது பித்தப்பையில் தானாக உருவாகக் கூடியது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்யும் பணியில் பித்தப்பையும் இடம் பெற்றுள்ளது.

    திருமண வீட்டுக்கு செல்கிறோம். வடை, பாயாசம், பொறியல், துவையல், வறுவல், சாம்பார், ரசம், மோர் குழம்பு, இனிப்பு என 10-க்கும் மேற்பட்ட உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் ஜீரணம் ஆக வேண்டும் அல்லவா? அந்த ஜீரணத்தை உண்டாக்க கூடியது பித்த நீர் ஆகும். பித்த நீரை கல்லீரல் சுரக்கிறது. பித்த நீர் சேமித்து வைக்கப்படும் இடமே பித்தப்பை.

    நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப்பெரியது கல்லீரல். இதில் தினமும் ஆயிரத்தில் இருந்து 1500 மில்லி லிட்டர் வரை பித்தநீர் சுரக்கிறது. பித்த நீர் என்பது ஒரு திரவக்கலவை. 97 சதவீதம் நீரும், ஒரு சதவீதம் பித்த நிறமிகளும், ஒன்று முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.

    கல்லீரலில் சுரக்கும் பித்த நீர், வலது மற்றும் இடது பித்த நீர் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளை குழாய் வழியாக கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் பித்தப்பையினுள் அது செல்லும்.

    அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு அதன் அடர்த்தியை அதிகரித்து உணவு செரிமானத்துக்கு தயாராக வைத்திருக்கும்.

    நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டு புறப்பட்டதும் பித்தநீர் தேவை என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப்பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது தன்னைத் தானே சுருக்கி, பித்த நீரை பித்தக் குழாய்க்குள் அனுப்பி வைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பை சரியாக செரிக்க வைக்கும்.

    மனித உடலில் 6 இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பாதை, பித்தப்பை, உமிழ் நீர்ச்சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த 6 இடங்கள். இவற்றில் சிறுநீரக கற்களுக்கு அடுத்தப்படியாக பித்தப்பை கல்தான் அதிகம் பேருக்கு தொல்லை தரக்கூடியது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 100-ல் 15 பேருக்கு இந்த தொந்தரவு இருக்கிறது.

    பித்த நீரானது பச்சை கலரில் இருக்கும். சாதாரணமாக திரவநிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும் தான் கற்கள் உருவாகின்றன. பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும் போது அதில் உள்ள பித்த உப்புகள் அதன் அடியில் படியும்.

    இது சிறிது, சிறிதாக வளர்ந்து கடினமான ஒரு பொருளாக மாறி கல்லாக மாறி விடும். இந்த கற்கள் பார்ப்பதற்கு சாதாரண கற்கள் போலத்தான் இருக்கும். ஆனால் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

    சிலருக்கு ஒரு கல் மட்டும் உருவாகலாம். சிலருக்கு 10 கற்களுக்கு மேல் ஏற்படலாம். அதனால் கல்லின் அளவும், எண்ணிக்கையும் ஆளாளுக்கு வேறுபடும்.

    பித்தப்பையில் கல் இருக்கும் போது பித்த நீர் சரியாக செல்லாமல் உணவு விரைவில் செரிமானம் ஆகாது. இதனால் வயிற்று வலி ஏற்படும். அந்த சமயங்களில் எண்ணை பலகாரங்கள் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. வயிற்று வலி மேலும் அதிகமாகும்.

    பித்தப்பை கல் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? நோயாளியை படுக்க வைத்து வயிற்றை தொட்டு பார்ப்போம். சில நேரங்களில் பித்தப்பை வீங்கி இருக்கும். கண்ணை திறந்து பார்த்தால் காமாலை வந்திருக்கும். பித்தப்பை கல் இருப்பவ ர்களுக்கு காமாலை நோய் வர வாய்ப்புண்டு. பித்தப்பையில் இருந்து பித்தநீர் வெளியேற சிரமப்படும் நேரத்தில் பித்த நீர் ரத்தத்துக்குள் போய் அது மஞ்சள்காமாலையாக மாறி விடுகிறது.

    அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் பித்தப்பையில் கல் இருப்பதை கண்டுபிடித்து விடலாம். ஸ்கேன் செய்து பார்க்கும் போது பித்தப்பை கல் இருப்பது தெரிவது மட்டுமல்லாமல் பித்தப்பையில் புற்றுநோய் இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.

    கல்லீரல் வீங்கி இருந்தாலும், குடல் வால் வீங்கி இருந்தாலும் இதில் தெரிந்து விடும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்தாலும், கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம்.

    சிறிய அளவில் உள்ள பித்தப்பை கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்று பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து வெளியேற்றலாம். இருந்தாலும் பித்தப்பை நீக்கம் எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பை கற்களை தடுப்பதற்கு சிறந்த வழி.

    பித்தப்பை வீங்கி கல் இருந்தால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அது திறந்தநிலை அறுவை சிகிச்சையாகவோ அல்லது லேப்ராஸ்கோபி சிகிச்சையாகவோ இருக்கலாம். கல்லீரலுக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் பித்தப்பையை கல்லோடு சேர்த்து அகற்றி விட்டோம் என்றால் பின்னர் பிரச்சினைகள் எதுவும் வராது.

    பித்தப்பையை அகற்றுவதால் எந்த பாதிப்பும் கிடையாது. பித்த நீர் அந்த பையில் சேகரித்து வைக்கப்படுவதற்கு பதிலாக கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் நேராக குடலுக்குள் வந்து விடும். அதன் மூலம் வழக்கம்போல் ஜீரணம் ஆகும். அவ்வளவு தான். அதனால் பித்தப்பையை அகற்றுவதில் தவறு இல்லை. அதேசமயம் சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    அறிகுறிகள்

    பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகி பல மணி நேரம் நீடித்து குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுவது. 3-வது வலதுபுற விலா எலும்புகளை சுற்றி வந்து முதுகுப்புறம் வரைக்கும் சென்று தோள்பட்டை வரை வலி பரவும். கொழுப்பு அதிகம் உள்ள எண்ணை பதார்த்தங்களை சாப்பிடும் போது இந்த வலி ஏற்படும்.

    உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை என்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு தேவையான கலோரியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு மூலம் அதிகப்படியான கலோரியை எரிக்க வேண்டும்.

    பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் எடையை மிக வேகமாக குறைப்பவர்கள், மரபு ரீதியாக பித்தப்பை கல் பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால் வாய்ப்பை குறைக்க முடியும். தினமும் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவை தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    எடையை குறைக்க அவசரம் வேண்டாம். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும் போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    அஜீரண பிரச்சினை

    இதேபோல அஜீரணம் ஏற்பட 4 காரணங்களை சொல்லலாம். 1. கல்லீரலில் பாதிப்பு இருப்பது, 2. பித்தப்பையில் கல் ஏற்படுவது. 3. கணையத்தில் நோய் பாதிப்பு இருத்தல், 4. அல்சர் பாதிப்பு.

    அஜீரணக் கோளாறுக்கான காரணத்தை கண்டறிய எண்டாஸ்கோபி சிகிச்சை அளிப்பது சிறந்தது. சின்ன குழாயை வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் மூலம் ஒளியை ஊடுருவச் செய்து வயிற்றை முழுமையாக சோதனை செய்து பார்ப்பார்கள். அந்த சோதனையில் இரைப்பையில் புற்றுநோய் இருந்தாலும் தெரிந்து விடும். இரைப்பை புண், அல்சர், அசிசிட்டி போன்ற பிரச்சினைகளையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • பொற்றாமரைக் குளத்தில் பூத்திருந்த தங்கத் தாமரை மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்தது.
    • ஆனைமுகக் கடவுளான விநாயகர் யானையாகவே உருமாறி வந்த கதை கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ளது.

    நம் ஆன்மிக நந்தவனத்தில் பற்பல யானைகள் கம்பீரமாக உலவுகின்றன.

    ஐராவதம் என்பது இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் பெயர். இந்த வெள்ளை யானை பாற்கடலை அமிர்தம் வேண்டிக் கடைந்தபோது தோன்றிய பலவற்றில் ஒன்று.

    ஒருமுறை துர்வாச மகரிஷி இந்திரனைக் காண தேவலோகம் வந்தார். இந்திரனுக்கு சிவப்பிரசாதமான தாமரை மலரைக் கொடுத்தார். அந்த மலரை ஐராவதம் யானை அலட்சியத்துடன் காலில் போட்டு மிதித்தது.

    சீற்றத்திற்குப் புகழ்பெற்ற துர்வாசர் விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் சென்று பிற யானைகளுடன் வாழுமாறு ஐராவத யானையைச் சபித்தார். ஐராவதம் தன் தவறை உணர்ந்து வருந்தியது.

    மண்ணுலகில் பிறந்த அது, நூறாண்டுகள் கடந்த பின் இந்திரனின் தோஷம் நீக்கிய மதுரைக் கடம்பவன ஆலயத்திற்குச் சென்றது.

    அங்கிருந்த பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் நீர் எடுத்துவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தது. பொற்றாமரைக் குளத்தில் பூத்திருந்த தங்கத் தாமரை மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்தது.

    அபிஷேகத்தாலும் அர்ச்சனையாலும் மனம் குளிர்ந்த சிவபெருமான் யானைக்கு சாபவிமோசனம் அளித்து அதை மீண்டும் விண்ணுலகு அனுப்பினார் என்கிறது திருவிளையாடல் புராணக் கதை.

    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தனித்தனிப் படலமாகச் சொல்லப்பட்டுள்ளன. திருவிளையாடல் புராணம் விவரிக்கும் இரண்டாம் படலம், வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் என்பது.

    *ஆனைமுகக் கடவுளான விநாயகர் யானையாகவே உருமாறி வந்த கதை கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக இருந்த காளத்தியப்ப சிவாச்சாரியாரின் புதல்வர்தான் கந்த புராண நூலாசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார். கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை என்னுமளவு சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க பக்தி நூல் அது.

    வள்ளிக் குறத்திமேல் காதல் கொள்கிறான் முருகன். தன் காதலுக்கு உதவுமாறு அண்ணன் விநாயகனை வேண்டுகிறான். யானை முகம் கொண்ட விநாயகர் யானையாகவே உரு மாறுகிறார்.

    தினைப்புனம் காக்கும் வள்ளியை அந்த யானை துரத்த, அச்சமடைந்த வள்ளி முருகனை ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொள்ள, வள்ளியைத் துரத்திய யானை மறைகிறது, வள்ளிக்கு முருகன் மேல் காதல் தோன்றுகிறது என வளர்கிறது கந்த புராணக் கதை.

    *கண்ணன் கதையைச் சொல்லும் பாகவத புராணத்தில் குவலயாபீடம் என்ற ஒரு யானை வருகிறது. அதன் முற்பிறவியில் அது மகாபலிச் சக்கரவர்த்தியின் புதல்வனான மந்தபாலனாக இருந்தது.

    மந்தபாலன் லட்சம் யானைகளின் பலம் உள்ளவன். ஒருமுறை திருவரங்க ஷேத்திரத்தில் தரிசனம் செய்யப் போனபோது, மக்கள் வெள்ளத்திடையே அவன் கைவீசி நடந்தான். அந்தக் கை பட்டே பலர் நசுங்கினர்.

    மக்களிடையே வந்த வயதான தரித முனிவர் அவன் கையசைவால் கீழே விழுந்து விட்டார். `யானைபோல் கையசைத்த நீ யானையாகப் பிறக்கக் கடவது!` என அவர் சீற்றத்துடன் சபித்தார்.

    மனம் வருந்திய மந்தபாலன் சாபவிமோசனம் வேண்டினான். `நீ ரங்கநாதரை தரிசிக்க வந்தாயே? இந்த ரங்கநாதர் கண்ணனாக அவதரிப்பார். அப்போது அவரால் வதம் செய்யப்பட்டு நீ யானைப் பிறவியிலிருந்து முக்தி அடைவாய்!` என அவர் அருளினார்.

    அதன்படியே மந்தபாலன் குவலயாபீடம் என்ற யானையாகப் பிறந்தான். கண்ணனின் விரோதியான கம்சன் அரண்மனையை அலங்கரித்தது அந்த யானை.

    கம்சனை வதம் செய்ய துவாரகையிலிருந்து மதுராபுரிக்கு பலராமனுடன் வந்தார் கிருஷ்ணர். தன்னை வழிமறித்த யானையை வதம் செய்து அதற்கு முக்தி அளித்தார். அதன் இரு தந்தங்களையும் கிருஷ்ணரும் பலராமரும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர் என்கிறது பாகவத புராணம்.

    *மகாபாரதத்தில் கவுரவர் அணியில் அஸ்வத்தாமன் என்ற பெயருடைய ஓர் யானை இருந்தது. பார்த்தசாரதியான கிருஷ்ணர் யுத்த களத்தில் பீமன் காதோடு ஒரு செய்தி சொன்னார்.

    அவர் சொன்னபடி பீமன் வீரர்களிடையே புகுந்து சென்று அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்றான். பின்னர் துரோணர் இருக்கும் இடத்திற்கு வந்து அஸ்வத்தாமன் இறப்பு நிகழ்ந்துவிட்டது எனக் கூவினான்.

    துரோணரின் மகன் பெயரும் அஸ்வத்தாமன். அவன்தான் பீமனால் கொல்லப்பட்டதாக எண்ணிய துரோணர், உண்மை அறிய வேண்டி, பொய்யே பேசாத யுதிஷ்டிரரிடம் `என் மகன் மாண்டானா?` எனக் கேட்டார்.

    யுதிஷ்டிரர் தயங்கியவாறே `அஸ்வத்தாமன் இறந்தது உண்மைதான். ஆனால் இறந்தது அஸ்வத்தாமன் என்ற யானைதான்!` என்றார்.

    `இறந்தது அஸ்வத்தாமன் என்ற யானைதான்` என தர்மபுத்திரர் சொல்லும்போது பார்த்தசாரதி தன் பாஞ்சஜன்ய சங்கை எடுத்து உரக்க ஊதினார். அந்த ஒலியில் அஸ்வத்தாமன் யானை என்று சொல்லப்பட்ட பகுதி துரோணர் காதில் விழவில்லை. மகன் கொல்லப்பட்டதாகக் கருதிய துரோணர், உடனே யுத்தம் செய்வதை நிறுத்தி, தரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.

    துருபத ராஜாவின் மகனும் துரோணரைக் கொல்லவே பிறந்தவனுமான திருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து கத்தியால் துரோணரின் தலையைச் சீவி அவரைக் கொன்றான்.

    உண்மையே பேசும் யுதிஷ்டிரர், எப்படியானாலும் சூழ்ச்சியால் அசத்தியத்திற்குத் துணைபோய் விட்டாரே? அதுவரை தரையைத் தொடாமல் உயரத்தில் உருண்டு கொண்டிருந்த யுதிஷ்டிரரின் தேர்ச் சக்கரங்கள், அந்தக் கணமே தரையில் இறங்கி உருள ஆரம்பித்தன என்கிறது மகாபாரதம்.

    *`மரத்தை மறைத்தது மாமத யானை.

    மரத்தில் மறைந்தது மாமத யானை

    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே

    என்பது திருமூலரின் திருமந்திரம்.'

    மரத்தால் செய்யப்பட்ட மதயானையின் உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணரவொட்டாமல் யானை என்றே உணரப்படுகிறது. ஆனால் சிற்பியின் வேலைப்பாடுகளை அழித்துவிட்டால் யானை மறைந்து அது மரமாகவே தென்படும்.

    அதுபோல் பரம்பொருளால் இயங்குகிறது இவ்வுலகம். குருவருளால் ஞானம் பெறுகையில் உண்மை ஞானம் முன்னர் இருந்த பொது ஞானத்தை அழித்துவிடுவதால் உலகமே பரம்பொருளாய்த் தோன்றும் என்பது இப்பாடலின் தத்துவப் பொருள். மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையை உதாரணம் காட்டி, மாபெரும் அத்வைத தத்துவத்தை விளக்குகிறார் மெய்ஞ்ஞானி திருமூலர்.

    *யானையை வைக்கோலோடு ஒப்பிட்டு காளமேகப் புலவர் ஒரு சிலேடை வெண்பா பாடியுள்ளார்:

    `வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

    போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

    செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

    வைக்கோலும் மால்யானையாம்.'

    வைக்கோல் வாரிக் களத்தில் அடிக்கப்படும். யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். வைக்கோல் கோட்டைபோல் குவித்து வைக்கப்படும். யானை கோட்டையில் அதன் கட்டுத்தறியில் புகும். வைக்கோல் போர் பார்க்கப் பொலிவாக இருக்கும். யானையும் போர்புரியும்போது பொலிவாகத் தோன்றும் என வைக்கோலுக்கும் யானைக்கும் உள்ள ஒற்றுமைகளை சமத்காரமாகப் புலப்படுத்துகிறார் சிலேடைச் செல்வர் காளமேகம்.

    *அரசனுக்கு வாரிசு இல்லாதபோது, புதிய மன்னனைத் தேர்வு செய்ய, பட்டத்து யானை பயன்பட்டிருக்கிறது. அதன் தும்பிக்கையில் ஒரு மாலையைக் கொடுத்து நம்பிக்கையோடு காத்திருப்பார்கள். அது நகர்வலம் சென்று யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரே அடுத்த அரசராவார்.

    *வெற்றி விழா ஊர்வலங்களிலும் மணவிழா ஊர்வலங்களிலும் அலங்கரிக்கப் பட்ட யானையை நடத்திச் செல்லும் வழக்கம் உண்டு.

    பல கோவில்களில் யானை உண்டு. பக்தர்கள் கோவில் யானையிடம் ஆசி பெறுவதும் வழக்கம்.

    மந்திராலயம் போன்ற இடங்களில் நாள்தோறும் கஜசேவை நடைபெறும். அதாவது யானைமேல் இறைவனின் திருவுருவை வைத்து ஆலயத்தின் உள்ளே அந்த யானை ஊர்வலமாக அழைத்து வரப்படும்.

    குருவாயூர்க் கோவில் அருகே குருவாயூரப்பன்மேல் பக்தி செலுத்தி வாழ்ந்த கேசவன் என்ற யானைக்குச் சிலை வைக்கப் பட்டிருக்கிறது.

    திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் `திருச்சூர் பூரம்' என அழைக்கப்படும் திருவிழாஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏராளமான யானைகள் கலந்துகொண்டு நடைபெறும் குடை மாற்றும் உற்சவம் மிகப் பிரசித்தம்.

    லட்சக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாகப் பங்குபெறும் இவ்விழா, அதில் கலந்துகொள்ளும் யானைகளின் எண்ணிக்கை காரணமாக உலகப் புகழ் பெற்றுவிட்டது. விழா நடக்கும்போது அதைக் கண்டுகளிக்க ஆண்டுதோறும் ஏராளமான வெளிதேசத்தவர்களும் திருச்சூர் வருகிறார்கள்.

    *கடந்த காலங்களில் யானைகள் போர்க்களங்களில் பயன்படுத்தப் பட்டன. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளில் யானைப்படை முக்கியமான ஒன்றாக விளங்கியது.

    சிங்கத்தையே எதிர்க்கக் கூடிய மாபெரும் விலங்கான யானை சைவ உணவை மட்டுமே உண்ணும் என்பது குறிப்பிடத் தக்கது. அசைவ உணவுதான் அதிக உடல் வலிமை தரும் என்ற கருத்தை எதிர்த்து நடமாடும் மாபெரும் சான்றாக யானை திகழ்கிறது.

    யானையைப் பற்றி ஓர் அழகிய குழந்தைப் பாடல் வழக்கில் இருக்கிறது.

    `ஆனை ஆனை அழகர் ஆனை

    அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை

    கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை

    காவேரித் தண்ணீரைக் கலக்கும் ஆனை

    குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்

    பட்டண மெல்லாம் பறந்து ஓடிப் போச்சாம்!'

    வெற்றி, மகிழ்ச்சி, செல்வம், ஞானம் இவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது யானை. நம் ஆன்மிகத்தில் யானைக்குத் தனித்த பெரிய இடம் உண்டு. பார்க்கப் பார்க்க அலுக்காத யானை, அதைப் பற்றிப் படிக்கப் படிக்கவும் அலுக்காதது!

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • பல படங்களில் குழந்தை நட்சத்திரம். இந்த படத்திலும் குழந்தை நட்சத்திரம்தான். இருந்தாலும் படம் முழுவதும் என்னை சுற்றியே இருந்தது.
    • நான் பேச வேண்டும் என்பதற்காக அம்பிகா ஆன்டி என்னுடன் தவியாய் தவிப்பார்.

    ரஜினி அங்கிள்....

    என்று மழலை குரலில் அழைத்தபடியே வெள்ளை வெளேர் நிறத்தில் பிராக் அணிந்து, தலையிலும் வெள்ளை நிறத்தில் பூச்சூடி கொண்டு ஏஞ்சல் போல் முத்துப்பல் தெரிய சிரித்த படியே ஒரு குழந்தை ஓடி வருவதையும்...

    அந்த மயக்கும் குரலை கேட்டு எதிரில் இருந்து வெள்ளை நிற பேண்ட், சட்டையில் ரஜினி ஓடி வந்து அந்த குழந்தையை வாரி அனைத்து தூக்கி கொஞ்சி மகிழ்ந்து

    "முத்து மணிச்சுடரே வா...

    முல்லை மலர் சரமே வா... என்று பாடு வதும் நினைவிருக்கிறதா?

    ஆங்... ஆமா.. அது 'அன்புள்ள ரஜினி காந்த்' படமாச்சே என்கிறீர்களா?

    அதே படம்தான்! அந்த படத்தில் ரஜினி அங்கிள்... ரஜினி அங்கிள்... என்று அவரை சுற்றி சுற்றி வரும் குழந்தை நட்சத்திரம் உங்கள் மீனாதான்...

    பல படங்களில் குழந்தை நட்சத்திரம். இந்த படத்திலும் குழந்தை நட்சத்திரம்தான். இருந்தாலும் படம் முழுவதும் என்னை சுற்றியே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு குழந்தை கதாநாயகி அந்தஸ்து எனக்கு அந்தப் படத்தில் இருந்தது.

    முடங்கிப் போன இடது கையை மடித்து நெஞ்சோடு வைத்துக் கொண்டு... இரண்டு கால்களையும் இணைத்து சேர்த்து வைத்தபடி சக்கர நாற்காலியில்தான் நான் படம் முழுக்க வந்து கொண்டிருப்பேன்.

    ரோசி....!

    இதுதான் அந்த படத்தில் எனது பெயர்.

    மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் வளர்வேன். அதே இல்லத்தில் எனது அம்மாவான அம்பிகா ஆன்டி ஆயாவாக இருப்பார். அவர்தான் என் அம்மா என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியாது.

    நான் பேச வேண்டும் என்பதற்காக அம்பிகா ஆன்டி என்னுடன் தவியாய் தவிப்பார். அவர் என் அருகில் வந்து மண்டியிட்டு ஏதாவது பேசு ரோசி என்று என்னிடம் கெஞ்சுவார். அவரை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கும்.

    ஆனால் டைரக்டர் சொல்வார் 'பாப்பா... இப்போது நீ கோபமாக இருக்கணும்... உம்முன்னு இருக்கணும்.... ஏதாவது தந்தால் தூக்கி வீசணும் என்பார்.

    ஆனால் எனக்கு முகத்தை இப்படித்தான் வைக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாது. ஏதோ எனக்கு தெரிந்தது போல் இருப்பேன்.

    ஆனால் காட்சி முடிந்ததும் சூப்பர்டா கண்ணா... சூப்பர்டா செல்லம்... என்றெல்லாம் பாராட்டுவார்கள்.

    காட்சி முடிந்ததும் அம்பிகா ஆன்டி என்னிடம் வந்து 'நான் கெஞ்சினாலும் பேச மாட்டே.... அழுதாலும் பேச மாட்டே.... என்ன? அவ்வளவு பெரிய பிடிவாதக்காரியா நீ?' என்று செல்லமாக கொஞ்சுவார்.

    அப்படித்தானே இருக்க சொன்னாங்க ஆன்டி என்பேன் நான்.

    அதை கேட்டதும் 'சூப்பர்டா....' என்று பாராட்டுவார். சாக்லெட்டும் தருவார். எனக்கு தேவை அதுதானே...!

    ரஜினி சாரோடு நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் தினமும் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்ப்பேன்.

    என்னை பார்த்ததும் 'என்ன... ரோசி பாப்பா... எப்படி இருக்கீங்க..." என்பார்.

    நான் உடனே "அங்கிள், என் பெயர் ரோசி இல்லை. மீனா" என்பேன்.

    அதை கேட்டதும் 'ஓ... நடிக்கும் போது மட்டும்தான் அப்படி கூப்பிடணுமா? ஓ.கே.... ஓ.கே... என்று சிரிப்பார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் மட்டும் எக்க சக்க நினைவுகள்.

    அதிலும் என்னோடு நடித்த 5 பேரும் என் வயதுடையவர்கள். படப்பிடிப்பு தளத்தில் சும்மா இருக்க மாட்டோம். அங்கும் இங்கும் ஓடி விளையாடுவோம். ரொம்ப ஜாலியாக இருந்தது.

    இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கேமிரா முன்பு எப்போதும் கையை மடித்தும், காலை சேர்த்தும் வைத்தபடி இருக்க சொல்வார்கள். இந்த பழக்க தோஷம் வீட்டிலும் தொடர்ந்தது. வீட்டில் இருக்கும் போதும் அப்படியே இருப்பேன். அம்மா தான் 'ஏய், நல்லா உட்கார்' என்று அடிக்கடி சத்தம் போடுவார்.

    அந்த படத்தின் கடைசி கிளை மேக்ஸ் காட்சி எனக்கே ஒரு மாதிரி இருந்தது. எனக்கு ஆறுதல் சொல்லும் ரஜினி அங்கிள், அம்பிகா ஆன்டி, மதர், எனது நண்பர்கள் எல்லோரும் சுற்றி நிற்பார்கள்.

    கட்டிலில் படுத்த படுக்கையாக இருக்கும் நான் ஆறுதல் சொல்லும் அவர்களிடம் 'நீங்க பொய் சொல்றீங்க. நான் செத்து போயிருவேன். முன்ன மாதிரி எனக்கு மூச்சு விட முடியவில்லை. ரத்தம் ரத்தமாக வாந்தி எடுக்கிறேன் என்பேன்.

    அதை கேட்டதும் கர்த்தர் உன்னை கைவிட மாட்டார் என்பார்கள். நான் 'கைவிட மாட்டார். என்னை கையோடு கூட்டி சென்று விடுவார் என்பேன்.

    இப்படி உருக்கமாக பேசும் அந்த வசனங்கள் நான் எனது குரலில் பேசியது.

    அந்த படத்தில் மேக்கப் எதுவும் கிடையாது. இயல்பாகவே நடித்தோம். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படம்.

    100-வது நாள் வெற்றி விழாவுக்கு என்னையும் அழைத்து சென்றி ருந்தார்கள். மேடையில் இருந்த நான் பழக்க தோசத்தில் கையை மடித்து வைத்து கொண்டு, கால்களையும் சேர்த்து வைத்தபடி நாற்காலியில் அமர்ந்து இருந்தேன். பார்வையாளர்கள் வரிசையில் இருந்த அம்மாதான் கைைய கீழேேபாடு சகஜமாக இரு என்று சைகையால் சொன்னார்.

    படப்பிடிப்பின் போது பலமுறை ரஜினி என்னை தூக்கி வைத்து கொண்டு நடிப்பார். அப்போது நான் குண்டாக இருப்பேன். வெயிட்டை பார்த்து 'ஏய், எந்த கடையில் அரிசி வாங்கி சாப்பிடுகிறாய்' என்று கிண்டல் செய்வார்.

    'சிரி வெல்லா' என்ற தெலுங்கு படத்தில் பார்வையற்ற குழந்தையாக நடித்தேன். அதில் ஒரு பாட்டுக்கும் நடித்திருப்பேன்.

    அன்புள்ள ரஜினிகாந்த், படத்தில் வரும் காட்சிகளில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டியும் குறிப்பாக ரஜினி தரும் இனிப்பை கோபத்தில் துப்பி விட்டு அவர் தந்த பூங்கொத்தையும் தூக்கி வீசுவேன். அந்த காட்சிகளையெல்லாம் இப்போது பார்த்தாலும் "பரவாயில்லைடி... மீனா.. நீ சின்ன பிள்ளையிலும் நல்லாத்தான் நடிச்சிக்கே..." என்று என்னை நானே சொல்லி பெருமை பட்டுக் கொள்வேன்.

    • ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சென்னை சிறு சிறு கிராமங்களாக புகழ் பெற்று இருந்தன.
    • அந்த காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்தது.

    சென்னைக்கு 384-வது பிறந்த நாள். கடந்த 10 ஆண்டு களாக சென்னை பிறந்த தினம் பல்வேறு தரப்பு மக்களால் மிக மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் இந்த ஆண்டு சென்னை தினம் கொண்டாட்டம் மிக விமரிசையாக களை கட்டி உள்ளது. நேற்று முதலே பல்வேறு இடங்களில் சென்னை தினம் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

    சென்னை தினம் உருவானதில் மிக சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி உள்ளது. 1639-ம் ஆண்டு வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி சென்னையில் தரை இறங்கியது. அவர்கள் தரை இறங்கிய இடம் அந்த கால கட்டத்தில் மதராச பட்டிணம் என்று அழைக்கப்பட்டது.

    அந்த மதராச பட்டிணத்தை உள்ளடக்கிய கிராமங்களை வெங்கடப்பா நாயக்கர் மற்றும் அவரது சகோதரர் அய்யப்பா நாயக்கர் இருவரும் ஆட்சி செய்து வந்தனர். வெங்கடப்பா நாயக்கர் வந்தவாசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். அய்யப்பா நாயக்கர் பூந்தமல்லியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்.

    அவர்களிடம் இருந்து கிழக்கு இந்திய கம்பெனியை நிர்வகித்த ஆங்கிலேயர்கள் தங்களுக்காக சிறிய இடம் ஒன்று வேண்டும் என்று கேட்டனர். அதன்படி வெங்கடப்பா நாயக்கரும், அய்யப்பா நாயக்கரும் மதராச பட்டிணத்தில் ஒரு சிறு கிராமத்தை ஆங்கிலேயர்களுக்கு எழுதி கொடுத்தனர்.

    இந்த நிகழ்வு நடந்த நாள் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதியாகும். எனவே சென்னை உருவாக இந்த தினம் காரணமாக இருந்ததால் ஆகஸ்டு 22-ந்தேதியை சென்னை தினமாக கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. மதராசப்பட்டிணமாக இருந்த அந்த இடத்தை ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் என்று அழைத்தனர்.

    ஆனால் கிழக்கு இந்திய கம்பெனிக்கு நிலத்தை கொடுத்த தாமல் வெங்கடப்பா நாயக்கரும் அவரது சகோதரர் அய்யப்பா நாயக்கரும் தங்களது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் புதிய இடத்தை அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில்தான் சென்னை உருவானது.

    காலம் காலமாக இந்த வரலாறு கூறப்பட்டு வந்த போதிலும் மெட்ராஸ், சென்னை என்ற இரண்டு பெயர்களும் பேச்சுவழக்கத்தில் இருந்தன. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி 1996-ம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயருக்கு பதிலாக சென்னை என்று அறிவித்தார். அன்று முதல் நாடு முழுவதும் சென்னை என்ற பெயர்தான் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு இந்த கொண்டாட்டம் அதிகமாகி வருகிறது.

    பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னையில் பல்வேறு மாநில மக்கள் சுமூகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சென்னைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, போக்குவரத்து, மருத்துவம், அறிவியல், அரசியல், பொழுது போக்கு, உணவு வகைகள் என்று அனைத்து வகைகளிலும் சென்னை நகரம் நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.

    குறிப்பாக முக்கிய துறைகளில் சென்னை நகரம் நாட்டின் தலைநகரமாகவே திகழ்கிறது. தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.

    இந்தியாவிலேயே சிறந்த மருத்துவம் அளிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. நாட்டி லேயே அதிக கார்கள் உற்பத்தி யாகும் நகரமாக சென்னை உள்ளது. ஐ.டி. தொழில் நுட்பத்திலும் தற்போது மற்ற நகரங்களுக்கு வழிகாட்டும் இடமாக சென்னை உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைந்த இடம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னையில் பழமை யான கட்டிடங்களே இதற்கு சாட்சியாக திகழ்கின்றன.

    இந்தியாவில் எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு 25 கிலோ மீட்டர் நீளத்துக்கு அழகான கடற்கரை சென்னையில் மட்டுமே உள்ளது. சினிமா தொழிலில் அதிக வருவாயை தரும் இடமாகவும் சென்னை சிறப்பு பெற்றுள்ளது. அருங்காட்சியகங்கள், நூல் நிலையங்கள் சென்னையின் பழமைக்கு சான்றாக திகழ்கின்றன.

    அன்று கிராமமாக இருந்த சென்னை இன்று பல நூறு கிலோ மீட்டருக்கு பறந்து விரிந்து மாநகரமாக மாறி உள்ளது. தொழில் முதலீட்டுக்கு மிக சிறந்த இடம் என்ற நிலையும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சென்னை சிறு சிறு கிராமங்களாக புகழ் பெற்று இருந்தன. அந்த கிராமங்களில் ஆலய வழிபாடுகள் ஓங்கி இருந்தன. சித்தர்கள் ஏராளமானோர் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் தற்போது சென்னையில் ஆங்காங்கே ஜீவ சமாதிகளாக இருப்பது காண முடியும்.

    அந்த காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்தது. ஆந்திராவில் இருந்து தமிழகத்தின் வட மாவட்டம் வரை அந்த கால்வாயில் மக்கள் படகுகளில் சென்று வியாபாரம் செய்த நிலை இருந்தது. தற்போது அது அடியோடு மறைந்து போனது.

    அதுபோல சென்னையில் ஓடிய டிரம் வண்டிகளும் காணாமல் போய் விட்டன. இவைகளும் இருந்து இருந்தால் சென்னை மாநகரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இவற்றை எல்லாம் நினைவு கொண்டு சென்னையின் சிறப்பை உணர்ந்து சென்னை தினத்தை கொண்டாடுவோம்.

    ×