கிரிக்கெட் (Cricket)

யோயோ டெஸ்ட் வைத்து மட்டும் வீரரை தேர்வு செய்வது சரியல்ல.. கவுதம் கம்பீர் கருத்து

Published On 2024-06-14 16:04 GMT   |   Update On 2024-06-14 16:04 GMT
  • யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல.
  • நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி கேப்டனாக வந்ததும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலையை உருவாக்கினார். அதை சோதிப்பதற்காக யோயோ டெஸ்ட் எனும் கடினமான சோதனை முறையும் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இப்போதெல்லாம் அந்த தேர்வில் தேர்ச்சியாகும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒருவரின் பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்க்க வேண்டுமே தவிர யோயோ டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதை பார்க்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஃபிட்னஸ் என்பது ஒரு காரணியாக இருக்க வேண்டும். அதே சமயம் சோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஃபிட்னஸ் என்பது உடற்பயிற்சியாளரை பொறுத்தது. அவர் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறார் என்று நினைத்தால் போதுமானது. ஏனெனில் சிலர் உடலளவில் ஒழுங்காக இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்குவார்கள்.

எனவே நீங்கள் யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல. நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வீரர்களின் ஃபிட்னஸ் லெவலை சரியாக பார்த்துக் கொள்வது உடற்பயிற்சியாளரின் வேலை. எனவே யோ-யோ தேர்வில் தேர்ச்சியாகவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யாமல் போனால் அது நியாயமற்றதாகும்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவேன் என கவுதம் கம்பீர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News