கோவையில் வெவ்வேறு விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
- தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
தேனி மாவட்டம் கோவில்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் அதே கல்லூரியில் படிக்கும் ஆதித்யா என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கினார். பின்னர் தனது நண்பரான கல்லூரி மாணவர் திருவாரூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை பின்னால் அமர வைத்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கடைக்கு டீக்குடிக்க சென்றார்.
பின்னர் 2 பேரும் நள்ளிரவு 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திரும்பினர். மோட்டார் சைக்கிளை ஹரிகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆகாசை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் இறந்த கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் செல்வகுமார் (20). சம்பவத்தன்று இவர் சுல்தான் பேட்டை- வடவேடம்பட்டி ரோட்டில் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்துது சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.