செய்திகள்

மனைவியிடம் நகை பறிப்பு - கொள்ளையை தடுத்த கணவர் படுகொலை

Published On 2018-05-10 10:18 GMT   |   Update On 2018-05-10 10:18 GMT
மீஞ்சூர் அருகே மனைவியிடம் நகை பறித்த கொள்ளையர்களை தடுத்த கணவரை கொள்ளையர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). இவரது மனைவி விஜயா. நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் திருவெள்ளைவாயில் உள்ள பஜாருக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

திருவெள்ளைவாயிலை தாண்டி சிறிது தூரத்தில் வந்த போதுமோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஜெயராமனையும், விஜயாவையும் வழி மறித்தனர். திடீரென விஜயா அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த ஜெயராமன் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயராமனை வெட்டினர். மேலும் விஜயாவையும் சரமாரியாக தாக்கினர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த தேவதானம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அங்கு வந்தார். அவரையும் கொள்ளை கும்பல் தாக்கி விட்டு 10 பவுன் நகையுடன் தப்பி சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் ஜெயராமனின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது மனைவி விஜயா மற்றும் ஆறுமுகம் ஆகியோரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். விஜயாவின் நிலைமை மோசமாக உள்ளது. ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையை தடுத்த முதியவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News