செய்திகள் (Tamil News)

தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2018-05-13 12:49 GMT   |   Update On 2018-05-13 12:49 GMT
தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தேனி:

தேனி அருகே உத்தமபாளையம் கே.கே.பட்டியை சேர்ந்தவர் சபிதா (வயது30). இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை மந்திச்சுணையை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 40 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. அந்த நகைகளை வேல்முருகனின் தாயார் லட்சுமி வாங்கி வைத்துள்ளார்.

மேலும் வேல்முருகனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சபிதா தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எனது மகனுடன் சேர்ந்து வாழவேண்டுமென்றால் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும். இல்லையென்றால் விவாகரத்து செய்து விடுவதாக கூறி சித்ரவதை செய்துள்ளார்.

இதற்கு வேல்முருகனின் தந்தை அழகுபாண்டி மற்றும் உறவினர் கேசவன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சபிதா உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News