செய்திகள்

திண்டுக்கல் அருகே மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் அதிகரிப்பு

Published On 2018-05-14 17:17 GMT   |   Update On 2018-05-14 17:17 GMT
திண்டுக்கல் அருகே கிராமப்புறங்களில் மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள வி.எஸ். கோட்டை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மரம் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அதனை டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது உரிய அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்டி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாரிடம் புகார் அளித்தனர். அவர் விசாரணை நடத்தியதில் மரங்களை வெட்டி கடத்தியது சில்வார்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், ராஜ்குமார் என தெரிய வந்தது.

அனுமதி இல்லாமல் மரம் வெட்டியதும் தெரியவரவே அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் நீர்நிலைக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர்.

ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. மழைக்கு முறிந்து விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதாக சொல்லி பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக மரம் வெட்டப்படுவதாக புகார்கள் வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News