நெல்லை அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நெல்லை:
நெல்லை அடுத்த மேல குன்னத்தூரில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு வழிபாடு முடித்து அனைவரும் சென்றுவிட்டனர். நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்தனர்.
பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை திருடினர். இதையடுத்து கோவில் கருவறை கதவின் பூட்டை உடைக்க முயன்றனர். முடியாததால் உண்டியலை மட்டும் அப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் தப்பின.
இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தார்கள். இது குறித்து கோவில் நிர்வாகி முருகாண்டி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.