செய்திகள் (Tamil News)

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் - திருச்சி தி.மு.க. பிரமுகர் தற்கொலை

Published On 2018-08-07 07:06 GMT   |   Update On 2018-08-07 07:06 GMT
திருச்சியில் கருணாநிதி உடல்நிலை குறித்து செய்தி கேட்டறிந்த திமுக பிரமுகர் கவலை அடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த வேலக்கா நத்தம் அருகே உள்ள கருத்தளாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது42). இவர் கருத்தளாம்பட்டி கிளை தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் படித்து வருகிறார்கள்.

தங்கராஜ் திருச்சி அதவத்தூரில் ரேசன் கடைகளுக்கான குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றும் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது கருணாநிதியின் உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்த செய்தி வெளியானது.

இதைக் கேட்டதும் தங்க ராஜ் மனவேதனை அடைந்தார். உடனே பணியை பாதியில் முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் கருத்தளாம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News