பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றிய, நகர அளவில் கூட்டங்கள்- தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
சென்னை:
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.கழக ஒன்றிய நகர , பேரூர் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் வாக்காளர் சேர்த்தல் , நீக்கல் பணிக்காக மாவட்டக் கழகத்தால் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.
தொடக்கத்தில் மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் விசுவநாதன், அன்புச் செழியன், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் உரையாற்றினார். அவர் பேசிய தாவது:-
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியை முடுக்கி விடுவதற்காக முதல்கட்ட பணியாக வருகிற நவம்பர் மாதத்தில் ஒன்றிய நகர, பேரூர் அளவில் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தை எழுச்சியுடன் கூட்டிட வேண்டும்.
ஒன்றியங்களில் நடைபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சி வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி வார்டு கழக இளைஞர் அணி , மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது.
நகர பேரூர்களில் நடைபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் நகர பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை பங்கேற்கச் செய்வது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை மாற்றாரும் மிரளும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் கூட்டி தேர்தல் பணியை முனைப்புடன் தொடங்கி விட்டனர் என்ற பிரமிப்பை ஏற்படுத்திடும் வகையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திட வேண்டும்.
இவ்வாறு அன்பரசன் கூறினார். #thamoanbarasan #dmk