சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
கருப்பூர்:
சேலம் மாவட்டம் கரூப்பூர் ரெயில் நிலையம் - தின்னப்பட்டிக்கு இடையே நாலுக்கால்பாலம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த வாலிபரின் சட்டை பையில் ஆதார் கார்டு இருந்தது. அதை பார்த்த போது அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்திரன் மகன் சுஜீஸ் என இடம் பெற்றிருந்தது.இதனால் இறந்தது சுஜீஸ்தானா? என்பது குறித்தும், அவர் எப்படி இறந்தார்? ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.