சுந்தராபுரம் அருகே பயணிகள் இருக்க முடியாத நிலையில் காணப்படும் பஸ் நிழற்குடை
- நிழற்குடை மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும்.
குனியமுத்தூர்.
கோவை-பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் காந்திநகரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் செல்லும் பயணிகள் பஸ் ஏறும் நிறுத்தத்தில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் யாரும் அதில் உட்கார முடியாத நிலை காணப்படுகிறது.
இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வந்தால் அவர்கள் பஸ் வரும் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் இருப்பதால் பயணிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
நிழற்குடை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதி கரடு, முரடாக காட்சியளிக்கிறது. நிழற்குடையை நோக்கி வரும் வயதான பயணிகள் கல் தட்டி கீழே விழுந்து எழுந்து செல்லும் சூழ்நிலையை காணப்படுகிறது.
அதே போன்று அதற்கு எதிர் புறம் பொள்ளாச்சி செல்லக்கூடிய பயணிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை எதுவுமே கிடையாது. இதனால் வெயிலில் நின்று தான் பேருந்து ஏறக்கூடிய சூழ்நிலை உள்ளது.
எனவே பொள்ளாச்சி ரோடு காந்தி நகரில் பஸ் ஏறக்கூடிய பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.