உள்ளூர் செய்திகள்
சூலூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து
- மதுபோதையில் இருந்த மணிமாறன் அருண்குமாரை கத்தியால் குத்தினார்.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள புளியமரத்து பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (40).
சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் கிடா வெட்டு போடுவதற்காக இவர்கள் 2 பேரும் மதுபோதையில் கறி வெட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிமாறன் தான் வைத்து இருந்த கத்தியால் அருண்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.